search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஏவுகணைகள் வீச்சு
    X

    லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு- மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு

    • இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா கூடுதல் படைகளை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பியுள்ளது.
    • 50 ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி பாய்ந்து வந்தன.

    டெல்அவிவ்:

    பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஈரான் தலைநகர் தெக்ரானில் படுகொலை செய்யப்பட்டார்.

    இதில் இஸ்ரேல் மீது ஈரான், ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளன. இஸ்மாயில் ஹனியே படுகொலைக்கு பழிவாங்குவோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது. அதன்படி இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த ஈரானின் உச்ச தலைவர் உத்தரவிட்டார்.

    இதனால் இஸ்ரேல் மீது ஈரான் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழல் உள்ளது. மேலும் லெபனானில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா இயக்கம் தங்களது தளபதி கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதனால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா கூடுதல் படைகளை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பியுள்ளது.

    இந்த நிலையில் நள்ளிரவில் லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ஏவுகணைகள் சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினர். வடக்கு இஸ்ரேல் பகுதியான பெய்ட் ஹில்லெல்லை குறிவைத்து சுமார் 25 நிமிடங்கள் வரை இடைவிடாமல் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஏவுகணைகளை ஏவினர்.

    50 ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி பாய்ந்து வந்தன. அந்த ஏவுகணைகளை நடுவானிலேயே இடை மறித்து இஸ்ரேல் அழித்தது. இஸ்ரேல் படையினர் வான்வெளி தாக்குதலை தடுக்கும் டோம் அமைப்பை பயன்படுத்தி இந்த தாக்குதலை தடுத்தனர். இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

    இத்தாக்குதல் தொடர்பாக ஹிஸ்புல்லா வெளியிட்ட அறிக்கையில், காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவாகவும், அவர்களின் வீரம் மிக்க மற்றும் மரியாதைக்குரிய எதிர்ப்பிற்கு ஆதரவாகவும் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. கத்யுஷா ராக்கெட்டுகளால் முதல் முறையாக தாக்குதல் நடத்தப்பட்டது என்று தெரிவித்தது.

    ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல் குறித்து ஈரான் கருத்து கூறும்போது, ஹிஸ்புல்லா இயக்கத்தினரின் ஏவுகணைகள் இஸ்ரேலுக்குள் இன்னும் ஆழமாக சென்று தாக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஹிஸ்புல்லா இன்னும் அதிக இலக்குகளைத் தேர்ந்தெடுத்து தாக்கும் என்று தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே இத்தாக்குதலுக்கு பதிலடியாக லெபனான் நாட்டின் கேபர் கிளா மற்றும் டெய்ர் சிரியனி உள்ளிட்ட இடங்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித்தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேல்-லெபனான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

    இதையடுத்து அமெரிக்கா, இந்தியா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் லெபனானில் உள்ள தங்கள் நாட்டு மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. இந்த நிலையில் ஈரான் தாக்குதல் நடத்தினால் அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை இஸ்ரேல் ராணுவம் தீவிரமாக எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே எப்படி கொல்லப்பட்டார் என்று ஈரான் தெரிவித்துள்ளது. அவர் தங்கி இருந்த அறை மீது குறுகிய தொலைவு இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை வீசப்பட்டதாகவும், இதில் இஸ்மாயில் உயிரிழந்ததாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

    ஏவுகணையில் 7 கிலோ வெடிமருந்து நிரப்பப்பட்டுள்ளது என்றும், இஸ்மாயில் தங்கி இருந்த விருந்தினர் மாளிகைக்கு அருகே இருந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் படுகொலையை அரங்கேற்றியுள்ளதாகவும் குற்றம் சாட்டி உள்ளது.

    Next Story
    ×