search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது
    X

    புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது

    • பாஜக ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
    • ஆளும் கூட்டணி அரசுக்கு எதிராக குரல் கொடுக்க உள்ளதாகவும் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பரபரப்பான அரசியல் சூழலில், பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கவர்னர் உரையுடன் தொடங்கியது.

    நாளை 1-ந் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது.

    நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி, வருகிற 2-ந் தேதி காலை 9.30 மணிக்கு ரூ. 12,700 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

    சட்டசபை கூட்டத் தொடரில் வழக்கம் போல், மாநில அந்தஸ்து, மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு, ரேசன் கடை திறக்காதது குறித்து எதிர்கட்சிகள் புயலை கிளப்ப திட்டமிட்டுள்ளன.

    இதற்கிடையில், பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் தான் காரணம் என பாஜக எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பாஜக ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

    மேலும், தங்களுக்கு அமைச்சர், வாரிய தலைவர் பதவி கேட்டும் போர்க்கொடி உயர்த்தினர்.

    டெல்லிக்கு சென்று மத்திய மந்திரி, பாஜக தலைவர்களை சந்தித்து பாஜக அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.

    அதிருப்தி எம்.எல். ஏ.,க்களின் பிரச்சனை பாஜகவின் உட்கட்சி பிரச்சனையாக இருந்தாலும், என்.ஆர்.காங்.,-பாஜக கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்தியது.

    புதுச்சேரி வந்த பாஜக பொறுப்பாளர் சுரானா, மத்திய மந்திரியின் சமாதான பேச்சுகளை அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் ஏற்கவில்லை. மேலிட பொறுப்பாளரை சந்திக்காமலும் அதிருப்தி எம்எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர்.

    சட்டசபை கூட்ட தொடரில் எதிர்கட்சியினர் போல, ஆளும் கூட்டணி அரசுக்கு எதிராக குரல் கொடுக்க உள்ளதாகவும் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் தெரிவித்தனர்.

    சமாதானப்படுத்த வந்த பாஜக பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசிய போது, கூட்டணி அரசை கண்டித்து அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் எதிர்கட்சி வரிசையில் அமர விரும்பினால், அமர்ந்து கொள்ளட்டும் என தெரிவித்ததாக வெளியான தகவலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்கியதையொட்டி தலைமை செயலாளர் சரத் சவுகான் அரசு செயலாளர்கள், இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    சட்டமன்ற கூட்ட விவாதங்கள் நடக்கும்போது சம்பந்தப்பட்ட துறைகளின் செயலாளர்கள், இயக்குனர்கள் சட்டசபை வளாகத்தில் இருக்க வேண்டும். அமைச்சர்கள் பதில் அளிக்க தேவையான பதில்களை உடனுக்குடன் வழங்க வேண்டும். எதிர்மறையான விவாதங்களின்போது தேவையான ஆதாரங்களை முன்கூட்டியே தயார் செய்து அமைச்சர்களுக்கு வழங்கிட வேண்டும்.

    கேள்வி நேரங்களின் போது விவாதிக்கப்படும் எம்.எல்.ஏ.க்கள் கேள்விகளுக்கான பதில்களை 48 மணி நேரத்துக்கு முன்பாகவே வழங்க வேண்டும். கேள்விகளை தள்ளி வைக்க வேண்டும் என்றாலும் 48 மணி நேரத்துக்கு முன்பாகவே தெரிவிக்க வேண்டும்.

    தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட செயலாளர், அமைச்சரின் அனுமதியை பெற்று சட்டசபை செயலகத்துக்கு தெரிவிக்க வேண்டும். பூஜ்யநேரம் முடியும்வரை அரசு செயலாளர்கள், இயக்குனர்கள் அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இருக்க வேண்டும். முக்கியமான விவரங்கள் தொடர்பாக துறை செயலாளர்கள் தலைமை செயலாளருக்கு விளக்கமான குறிப்பு அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×