என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Supreme Court"

    • ஐகோர்ட் பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்த பிறகு பின்னர் அதுகுறித்து விசாரிக்கலாம்.
    • பதிவாளர் தாக்கல் செய்யும் அறிக்கையை அனைத்து தரப்புக்கும் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

    புதுடெல்லி:

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இதுபற்றி கரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது.

    இதற்கு எதிராகவும், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரியும் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. சி.பி.ஐ. விசாரணையை மேற்பார்வையிட ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவும் அமைக்கப்பட்டது.

    இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள். அதேபோல் ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகியும் கரூர் சென்று நேரில் ஆய்வு செய்தார். இந்த நிலையில் கரூர் சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்த பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில் சென்னை ஐகோர்ட்டு அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவும், மாநில அரசு அமைத்த ஒரு நபர் விசாரணை ஆணையமும் தொடர்ந்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

    இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். 'அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் நோக்கம் என்ன? சென்னை ஐகோர்ட்டு கரூர் சம்பவம் தொடர்பாக ரிட் மனுவை விசாரித்ததில் சில தவறுகள் உள்ளன. சென்னை ஐகோர்ட்டு விசாரணை நடைமுறையில் தவறுகள் உள்ளது என்றே கருதுகிறோம்.

    மதுரை அமர்வு விசாரித்து வந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு பிரதான அமர்வு விசாரித்தது எப்படி? மதுரை கிளை விசாரித்து இருக்க வேண்டிய விவகாரம் குறித்த கேள்விக்கு சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் பதில் அளித்துள்ளார். அது ஏன்' என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.

    அதற்கு தமிழக அரசு சார்பில், 'அருணா ஜெகதீசன் ஆணையத்தை தொடர அனுமதிக்க வேண்டும். அதற்கான தடையை நீக்க வேண்டும். கூட்ட நெரிசல் சம்பவம் எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்க பரிந்துரைகளை ஒருநபர் ஆணையம் வழங்கும். எதிர்காலத்தில் கூட்டங்கள் நடத்த விதிமுறைகளை வகுப்பதற்கும், நிவாரணம் பரிந்துரைக்கவுமே ஆணையம் அமைக்கப்பட்டது' என்று தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து நீதிபதிகள், மதுரை ஐகோர்ட்டு கிளையில் விசாரணை நடக்கும் நிலையில் சென்னை ஐகோர்ட்டு வழக்கை எப்படி எடுத்தது என சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் அறிக்கை தர உத்தரவிட்டனர். ஐகோர்ட்டு பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்த பிறகு பின்னர் அதுகுறித்து விசாரிக்கலாம்.

    பதிவாளர் தாக்கல் செய்யும் அறிக்கையை அனைத்து தரப்புக்கும் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

    பின்னர் இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

    • கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லும் என்று கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 1-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.
    • தீர்ப்பை ரத்து செய்யக்கோரி சைதை துரைசாமி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

    புதுடெல்லி:

    கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார்.

    அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி போட்டியிட்டார்.

    இந்த தேர்தலில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார். இந்த வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி சைதை துரைசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    அவர் தனது மனுவில், தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகைக்கு அதிகமாக மு.க.ஸ்டாலின் செலவு செய்ததுடன், அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி இருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லும் என்று கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 1-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.

    இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி சைதை துரைசாமி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

    இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, விஜய் விஷ்னோயி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று மீண்டும் விசாரித்தது.

    அப்போது, வழக்கு விசாரணயை தள்ளிவைக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, வழக்கு விசாரணையை ஜனவரி 20-ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

    ஜனவரி 22-ந் தேதி வரை இறுதி விசாரணை நடைபெறும் என அறிவித்த நீதிபதிகள், அதற்குள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

    • மனுக்கள் வரும் 17ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
    • தலைமை நீதிபதி அமர்வு எஸ்ஐஆர் வழக்குகளில் இம்மாத இறுதிவரை வாதங்களை கேட்கும்.

    எஸ்ஐஆர் வழக்கில் ஜனவரி மாதம் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு அறிவித்துள்ளது.

    எஸ்ஐஆர் விவகாரத்தில் இதற்குமேல் புதிதாக எந்த வழக்குகளும் அனுமதிக்கப்படாது என்றும் தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது.

    எஸ்ஐஆர் தொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகள் தாக்கல் செய்த மனுக்கள் வரும் 17ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

    இந்நிலையில், எஸ்ஐஆர் வழக்குகளில் இம்மாத இறுதிவரை வாதங்களை கேட்கும் தலைமை நீதிபதி அமர்வு ஜனவரி மாதத்தில் தீர்ப்பு வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் மாநிலத்தின் முதன்மை அதிகார அமைப்பாக இருக்க முடியும்.
    • இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் ஜனாதிபதி, ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிப்பது அரசியல் சாசனத்தின் நெகிழ்வுத்தன்மைக்கு எதிரானது.

    தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டு இருந்தார்.

    முக்கியமாக, மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வகை செய்யும் பல்கலைக்கழக திருத்த மசோதா உள்பட மொத்தம் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைப்பதாக கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ந்தேதி அறிவித்தார்.

     

    இதனால் அந்த மசோதாக்களை தமிழக அரசு, 2023-ம் ஆண்டு நவம்பர் 18-ந்தேதி சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. அவற்றை அவர் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பினார்.

    எனவே தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டை நாடியது. நிலுவையில் இருக்கும் மசோதாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுவை தாக்கல் செய்தது.

     இந்த மனுவை நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. நீண்ட கால விசாரணைக்குப்பின் கடந்த ஏப்ரல் 8-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

     

    அப்போது தமிழ்நாடு சட்டசபையில் 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பிய ஆளுநரின் நடவடிக்கை சட்டவிரோதமானது என நீதிபதிகள் அறிவித்தனர்.

    மேலும் மசோதாக்கள் மீது முடிவு எடுப்பதில் ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது என்றும் அமைச்சரவையின் ஆலோசனையின்படியே செயல்பட வேண்டும் என்றும் கூறிய நீதிபதிகள், 10 மசோதாக்களையும் ஜனாதிபதிக்கு அனுப்பிய ஆளுநரின் நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

    பின்னர் சுப்ரீம் கோர்ட்டுக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி, ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்ட 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அத்துடன் சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அதன்படி சட்டசபைகளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயித்தனர்.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வரவேற்றன.

     

    அதேநேரம் இந்த தீர்ப்பு தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பி சுப்ரீம் கோர்ட்டின் விளக்கம் கேட்டிருந்தார்.

    இந்த கேள்விகள் தொடர்பாக 5 நீதிபதிகள் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டின் அரசியல்சாசன அமர்வு விசாரித்தது. தலைமை நீதிபதி கவாய், நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம் நாத், நரசிம்மா, சுந்துர்கர் அடங்கிய இந்த அமர்வில் நடந்த விசாரணை நிறைவடைந்து கடந்த செப்டம்பர் 11-ந்தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த வழக்கில் கடந்த மாதம் 20-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜனாதிபதி எழுப்பியிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

    அதன்படி மசோதாக்கள் மீது முடிவு எடுக்க ஜனாதிபதி மற்றும் மாநில ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என நீதிபதிகள் அதிரடியாக தீர்ப்பு அளித்தனர்.

    5 நீதிபதிகளும் ஒருமித்த வகையில் வழங்கிய தீர்ப்பில் அவர்கள் கூறியதாவது:-

    மாநில சட்டசபைகள் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களை, ஆளுநர்கள் அரசியல் சட்டப்பிரிவு 200-ன் கீழ் தங்களுக்கு வழங்கப்பட்டு உள்ள அதிகாரத்தை மீறி நீண்ட காலம் கிடப்பில் போட முடியாது.

    அந்தவகையில், மாநில அரசில் 2 நிர்வாக அதிகார மையங்கள் இருக்க முடியாது என பஞ்சாப் அரசுக்கு எதிராக ராம் கபூர் என்பவர் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே அளித்த தீர்ப்பில் உடன்படுகிறோம்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் மாநிலத்தின் முதன்மை அதிகார அமைப்பாக இருக்க முடியும்.

    மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட அனுமதிப்பது என்பது சட்டசபை அதிகாரத்தை மதிப்பிழக்கச்செய்வதாகவும், கூட்டாட்சி கொள்கைக்கு எதிராகவும் அமையும் என கருதுகிறோம்.

    அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200-ன் கீழ் மசோதாக்கள் தொடர்பாக ஆளுநர்களுக்கு 3 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. அதாவது ஒப்புதல் அளிப்பது, ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பது அல்லது ஒப்புதலை நிறுத்தி வைப்பது, தனது கருத்துடன் சட்டசபைக்கு திருப்பி அனுப்புவது ஆகியவை.

    இதில் ஒன்றை தேர்வு செய்தாக வேண்டும். இதில் மத்திய அரசு கூறுவது போல 4-வது வாய்ப்பு இல்லை. இதில் அமைச்சரவையின் ஆலோசனை இல்லாமல் தன் விருப்புரிமையுடன் செயல்பட முடியும்.

    நிதி மசோதாவாக இல்லாத பட்சத்தில் அந்த மசோதாவுக்கான ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியும் அல்லது கருத்துகளுடன் சட்டமன்றத்துக்கு மீண்டும் அனுப்பி வைக்கலாம்.

    அதேநேரம் இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் ஜனாதிபதி, ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிப்பது அரசியல் சாசனத்தின் நெகிழ்வுத்தன்மைக்கு எதிரானது.

    மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் அரசியல் சாசனத்தில் ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிக்காத நிலையில், சுப்ரீம் கோர்ட்டு கெடு விதிப்பது பொருத்தமாக இருக்காது.

    மசோதாக்கள் சட்டமாகி நடைமுறைக்கு வராத நிலையில், அவை குறித்த ஆளுநர்கள், ஜனாதிபதியின் முடிவுகளை கோர்ட்டு விசாரணைக்கு உட்படுத்த முடியாது. சட்டமாகாத மசோதாக்களின் பொருளடக்கம் குறித்து கோர்ட்டு விசாரிக்க முடியாது.

    மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநர்களின் செயல்பாடுகள் கோர்ட்டு விசாரணைக்கு உட்பட்டதல்ல. எனவே, ஆளுநர்களின் முடிவுகளை கோர்ட்டுகள் ஆய்வு செய்ய முடியாது. இது மசோதாக்கள் மீது ஜனாதிபதி எடுக்கும் முடிவுகளுக்கும் பொருந்தும்.

     

    மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் அரசியல் சாசனத்தில் ஜனாதிபதிக்கு கெடு விதிக்காத நிலையில், சுப்ரீம் கோர்ட்டு விதித்த கெடு ஜனாதிபதியையும் கட்டுப்படுத்தாது.

    இருப்பினும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநர்களின் காலதாமதம், விளக்கமற்ற நிலை நிலவும்போது குறிப்பிட்ட காலத்துக்குள் ஒப்புதல் அளிக்கும் வகையில், ஆளுநர்களின் விருப்புரிமை குறித்து கருத்து தெரிவிக்காமல் முடிவுகளை எடுக்க அளவான உத்தரவுகளை கோர்ட்டு பிறப்பிக்க முடியும்.

    ஆளுநர்களுக்கு எதிராக உரிமையியல் வழக்கு தொடர முடியாத வகையில் அரசியல் சாசனத்தின் 361-வது பிரிவு பாதுகாப்பு அளித்துள்ளது. இருப்பினும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநர்களின் காலதாமதம், விளக்கமற்ற நிலை நிலவும்போது கோர்ட்டு அளவாக தலையிட முடியும்.

    ஆளுநர்கள் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கும் ஒவ்வொரு மசோதாவுக்கும் ஒப்புதல் அளிப்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டின் ஆலோசனையை ஜனாதிபதி பெற தேவையில்லை.

    அதேநேரம் மசோதா குறித்த தெளிவில்லாதபோது அல்லது சுப்ரீம் கோர்ட்டின் ஆலோசனை தேவைப்படும்போது, ஜனாதிபதி அரசியலமைப்பு சாசனத்தின் 143-வது பிரிவின் கீழ் சுப்ரீம் கோர்ட்டின் ஆலோசனையை கேட்டுப்பெறலாம்.

    ஆளுநர்களின் அரசியலமைப்பு அதிகாரங்களையும், அவர்களின் உத்தரவுகளையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்புப்பிரிவு 142-ன் கீழ் எந்த வகையிலும் மாற்ற முடியாது.

    அந்தவகையில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்ததாக கொள்ளப்படும் என்ற கோட்பாட்டை சுப்ரீம் கோர்ட்டு சிறப்பு அதிகாரம் அனுமதிக்கவில்லை.

    ஆளுநர்களின் ஒப்புதல் இல்லாமல் ஒரு மசோதா சட்டமாகுமா என்ற கேள்விக்கே இடமில்லை. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் சட்டமியற்றும் பணியை ஐகோர்ட்டுகளோ, சுப்ரீம் கோர்ட்டோ பறித்துக்கொள்ள முடியாது.

    அரசியல்சாசன முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை குறைந்தபட்சம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் என்ற விதி தொடர்பான கேள்வி நடைமுறைக்கு பொருத்தமற்றதாக இருப்பதால் பதில் அளிக்கவில்லை.

    சுப்ரீம் கோர்ட்டின் சிறப்பு அதிகாரம் குறித்து ஏற்கனவே விரிவாக பதில் அளித்து விட்டதால், குறிப்பிட்ட பாணியில் பதில் அளிப்பது சாத்தியமில்லை.

    மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நிலவும் தாவாக்களை தீர்வுகாணும் சுப்ரீம் கோர்ட்டின் வரம்பு எல்லை குறித்த கேள்வியும் நடைமுறைக்கு பொருத்தமற்றதாக இருப்பதால் பதில் அளிக்கவில்லை என்று தீர்ப்பில் விளக்கம் அளித்துள்ளது.

    இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

    • சென்னை உரிமையியல் நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை நிராகரித்து தள்ளுபடி செய்து ஒரு உத்தரவை பிறப்பித்தது.
    • உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமியும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    புதுடெல்லி:

    அ.தி.மு.க. கட்சியின் முதன்மை உறுப்பினர்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குப் பதிலாக, 2022-ம் ஆண்டு பொதுக்குழுவால் கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து திண்டுக்கல்லைச் சேர்ந்த எஸ். சூரியமூர்த்தி சென்னை 4-வது உரிமையியல் நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தார்.

    அதேவேளையில் சூரிய மூர்த்தி தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்க வேண்டும் எனக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    ஆனால் சென்னை உரிமையியல் நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை நிராகரித்து தள்ளுபடி செய்து ஒரு உத்தரவை பிறப்பித்தது.

    உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமியும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பாலாஜி, சூரிய மூர்த்தி அ.தி.மு.க.வின் உறுப்பினரே இல்லை என்றும் உறுப்பினர் அல்லாத ஒருவர் கட்சி விவகாரங்களில் கேள்வி எழுப்ப முடியாது என்ற எடப்பாடி தரப்பு வாதத்தையும் ஏற்று சென்னை சிவில் நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டதோடு, உரிமையியல் நீதிமன்றத்தில் சூரிய மூர்த்தி தாக்கல் செய்த மனுவையும் நிராகரித்து உத்தரவிட்டார்.

    இதனையடுத்து, சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சூரிய மூர்த்தி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    • தேவைப்பட்டால் மட்டும் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக நேரில் அழைக்கலாம்.
    • விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க செந்தில்பாலாஜி தரப்புக்கு அறிவுறுத்த ED சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    அரசு வேலை வாங்கி தர பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் ஜாமின் தளர்வுகளை வழங்கியுள்ளது.

    தேவைப்பட்டால் மட்டும் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக நேரில் அழைக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ED விசாரணைக்காக அழைக்கும்பேது அதிலிருந்து விலக்கு தேவை என்றால் செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அனுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க செந்தில்பாலாஜி தரப்புக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என ED சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    செந்தில் பாலாஜி வழக்கிற்கு இடைஞ்சலாக இருக்கிறார் என்றால் நீங்கள் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    • மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பு வக்கீல்கள் ஆஜராகி, கோர்ட்டு 3 முறை உத்தரவிட்டும் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதிக்கப்படவில்லை.
    • கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாதது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    திருப்பரங்குன்றம் மலையில் உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1-ந்தேதி ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவை நிறைவேற்றவில்லை என்று அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    அதன் பேரில் இந்த வழக்கு தொடர்ந்த மனுதாரர் ராம ரவிக்குமார் மற்றும் அவரது குழுவினர் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் அவர்களுக்கு பாதுகாப்பாக மத்திய பாதுகாப்பு படையினர் செல்ல வேண்டும் என்றும் கடந்த 3-ம் தேதி மாலை 6.30 மணி அளவில் நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

    ஆனால் அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் தீபம் ஏற்றாமல் திரும்பினர். இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் நேற்று தள்ளுபடி செய்தனர். பின்னர் நேற்று மாலையில் தன்னுடைய உத்தரவை நிறைவேற்றியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட வழக்கை நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் விசாரித்தார். அப்போது மீண்டும் நேற்று மாலை 7 மணிக்குள் ராம ரவிக்குமார் குழுவினர் தீபம் ஏற்றுவதற்கு உரிய வசதிகளை மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செய்து தர வேண்டும் என்றும் அது தொடர்பான நடவடிக்கையை இன்று காலை 10:30 மணி அளவில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதனுக்கு நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று காலை 10.30 மணி அளவில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

    அப்போது மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் யாரும் ஆஜராகவில்லை.

    பின்னர் மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பு வக்கீல்கள் ஆஜராகி, கோர்ட்டு 3 முறை உத்தரவிட்டும் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதிக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் நேற்று தீபம் ஏற்ற வலியுறுத்திய ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானவர்களை காவல்துறை கைது செய்துள்ளது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் உள் நோக்கத்துடன் செயல்படுகிறது.

    எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தீபம் ஏற்ற உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் அறிவுறுத்த வேண்டும் என்று வாதாடினார்கள்.

    பின்னர் அரசு தரப்பு வக்கீல்கள் ரவீந்திரன், வீரா கதிரவன் உள்ளிட்டோர் ஆஜராகி, பல ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் மலையில் உச்சியில் குறிப்பிட்ட இடத்தில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது அதே இடத்தில் தான் இந்த ஆண்டும் தீபம் ஏற்றப்பட்டது. ஆனால் புதிதாக ஒரு இடத்தில் தீபம் ஏற்ற கோருவது ஏற்புடையதல்ல.

    இது தொடர்பான வழக்கில் டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனு மீது சுப்ரீம் கோர்ட்டு உரிய உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என நீதிபதி முன்பு வாதாடினார்கள்.

    இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்த காரணத்தால் இந்த வழக்கை வருகிற செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைக்கிறேன். இந்த கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாதது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    அதேபோல கடந்த 3-ந் தேதி பிறப்பித்த உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலையில் ராம ரவிக்குமார் தரப்பினருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மத்திய படை கமாண்டர் தங்களுக்கு பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற முடியாதது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

    திருப்பரங்குன்றம் வழக்கை விரைந்து விசாரிக்குமாறு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூரியகாந்த் முன்பு தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.

    இந்நிலையில், ஆவணம் சரியாக கொடுக்கப்பட்டிருந்தால் வரிசை அடிப்படையில் பட்டியலிடப்படும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூரியகாந்த் தெரிவித்துள்ளார்.

    • வழக்கை மீண்டும் கையிலெடுத்த நீதிபதி, 144 தடை உத்தரவை ரத்து செய்து மீண்டும் தீபத்தூணில் தீபமேற்ற உத்தரவிட்டார்.
    • நயினார் நாகேந்திரனும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்

    திருவண்ணாமலை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உள்ள சிவன், முருகன் மற்றும் விஷ்ணு கோயில்களில் கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகை கார்த்திகை தீபம். நேற்று கார்த்திகை தீபத்தையொட்டி திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டது. அதுபோல மதுரை திருப்பரங்குன்றத்திலும் ஏற்றப்பட்டது.

    ஆனால் சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் 15 மீ தொலைவில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு மாறாக வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது. இதனால் உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள சிஐஎஸ்எஃப் வீரர்களை கூட்டிக்கொண்டு மனுதாரர் தர்காவுக்கு அருகில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

    இதனிடையே மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றாததைக் கண்டித்து பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழல் நிலவியது. அசம்பாவிதங்களை தவிர்க்க அப்பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. போலீசார், போராட்டக்காரர்கள் தள்ளுமுள்ளு என தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவ சிஐஎஸ்எஃப் வீரர்கள் மலைமீது ஏற அனுமதி மறுக்கப்பட்டது.

    நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திருந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து இன்று தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு விசாரிக்கப்பட்டது. இதில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தமிழ்நாடு அரசின் மனுவை தள்ளுபடி செய்து, தனி நீதிபதியே வழக்கை விசாரிப்பார் என உத்தரவிட்டனர்.

    அதனைத்தொடர்ந்து வழக்கை மீண்டும் கையிலெடுத்த நீதிபதி, 144 தடை உத்தரவை ரத்து செய்து மீண்டும் தீபத்தூணில் தீபமேற்ற உத்தரவிட்டார். காவல்துறை முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக்கையை நாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் எனவும் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து மீண்டும் பாஜவினர் மற்றும் இந்து அமைப்பினர் சிலர் தீபமேற்ற மலைமீது ஏற முயன்றனர். ஆனால் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக அவர்களிடம் போலீசார் தெரிவித்து மலையேற அனுமதி மறுத்தனர். இதனால் மீண்டும் போலீசாருக்கும் - திருப்பரங்குன்றம் மலைப்பாதை முன்பு கூடியவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    போராட்டக்காரர்கள் கலையவில்லை என்றால் கைது நடவடிக்கை தொடரும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இதனிடையே சம்பவ இடத்திற்கு தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விரைந்தனர். நயினார் நாகேந்திரனும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கலைந்து செல்லுமாறு விடுத்த கோரிக்கையை ஏற்காமல் போராட்டத்தை தொடர்ந்த நிலையில் நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

    இதற்கிடைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் ரகுபதி, 2014-ம் ஆண்டின் தீர்ப்பின்படி திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது. 2014-ல் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி அரசு செயல்பட்டு வருகிறது.

    திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஏற்கனவே இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பு உள்ளது; இது தனி நீதிபதியின் தீர்ப்பு.

    2014ல் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து அறியாமல் புதிதாக ஒரு வழக்கை தொடுத்து தற்போது தீர்ப்பை பெற்றுள்ளனர்.

    திருப்பரங்குன்றத்தில் திடீர் பிரச்சனையை உருவாக்குகிறார்கள். மத ஒற்றுமை, மத நல்லிணத்துக்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாடு திகழ்கிறது.

    ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போது பெற்ற தீர்ப்பையே மறந்து எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். பா.ஜ.க.வுக்கு முழு அடிமை என்பதை உறுதிசெய்திருக்கிறார் பழனிசாமி.

    திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது என தெரிவித்தார்.

    இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

    தமிழக அரசு வழங்கிய மேல்முறையீட்டு மனுவில், கார்த்திகை தீபம் ஏற்ற அரசு எந்த தடையும் விதிக்கவில்லை.

    100 ஆண்டுகளாக தீபம் ஏற்றப்படும் இடத்தை மாற்றி, வேறு இடத்தில் ஏற்ற வேண்டும் எனக் கேட்பதுதான் பிரச்னையாக உள்ளது.

    2014ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் எங்கு தீபம் ஏற்ற வேண்டும் என்பது கூறப்பட்டுள்ளது. அதன்படியே அரசு செயல்படுகிறது.

    புதிதாக தீபம் ஏற்றக் கோரும் இடம் தர்காவுக்கு 15 மீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் தேவையில்லாத சச்சரவுகளை தவிர்க்கவே, அங்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

    • ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின் கீழ் சேர்க்க பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவு
    • இதுபோன்ற வழக்குகளை சிறப்பு நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டும் என்றும் கருத்து

    நாடு முழுவதும் நிலுவையில் உள்ள ஆசிட் வீச்சு வழக்குகள் தொடர்பான விவரங்களை நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    ஆசிட் வீச்சில் இருந்து தப்பிய ஷாஹீன் மாலிக் என்பவர் தாக்கல் செய்த பொது நல வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. மேலும் கடந்த 2009ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மாலிக்கின் வழக்கு தற்போது வரை விசாரணையில் இருப்பது வெட்கக்கேடானது எனவும் கருத்து தெரிவித்தனர்.

    கடந்த 2009ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மாலிக் வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதி, "சட்ட அமைப்பை எவ்வளவு கேலிக்கூத்தாக்குவது இது. 16 வருடம் இப்படிப்பட்ட ஒரு வழக்கு நிலுவையில் இருப்பது வெட்கக்கேடானது. ஒரு நாட்டின் தேசிய தலைநகராலேயே இதை கையாள முடியவில்லை என்றால், வேறு யார் செய்வார்கள்? இது தேசத்திற்கே அவமானம்" என தலைமை நீதிபதி தெரிவித்தார்.

    மேலும் இந்த வழக்கு ஏன் முடிவுக்கு வரவில்லை என்பதை விளக்கி, பொதுநல மனுவிலேயே ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கும் உத்தரவிட்டார். விசாரணையின்போது, ஆசிட் வீச்சில் இருந்து தப்பியவர்கள் எதிர்கொள்ளும் கடுமையான சவால்களை மாலிக் விவரித்தார். அவர்களில் பலர் நிரந்தர காயங்களுடன் வாழ்கின்றனர். செயற்கை உணவு குழாய்கள் தேவைப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களை மாற்றுத்திறனாளிகளாக அங்கீகரிக்க வேண்டும் என்றும், அதனால் சில நலத்திட்டங்களை பெறமுடியும் எனவும் வாதிட்டார். 

    இதனைத்தொடர்ந்து ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின் கீழ் சேர்க்க சட்டம் அல்லது தேவைப்பட்டால் அவசரச் சட்டம் மூலம் சட்டத்தை திருத்துவது குறித்து பரிசீலிக்குமாறு தலைமை நீதிபதி மத்திய அரசை வலியுறுத்தினார். மேலும் சரியான நேரத்தில் நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக இதுபோன்ற வழக்குகளை சிறப்பு நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    இந்த விவகாரம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும் என்று மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிமன்றத்தில் உறுதியளித்தார். 

    • தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.
    • விசாரணை நடவடிக்கைகள் தொடங்கவிருந்த நிலையில் எடியூரப்பா உயர் நீதிமன்றத்தை அணுகினார்.

    கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நவம்பர் 13 அன்று கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எடியூரப்பா தனது வீட்டில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக சதாசிவ நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பின்னர் அதை சிஐடியிடம் ஒப்படைத்தனர்.

    சிஐடி போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து, விசாரணை நடவடிக்கைகள் தொடங்கவிருந்த நிலையில் எடியூரப்பா உயர் நீதிமன்றத்தை அணுகினார்.

    இருப்பினும், உயர் நீதிமன்றம் நடவடிக்கைகளை ரத்து செய்ய மறுத்ததால், அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். இந்த சூழலில் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதித்து எடியூரப்பாவுக்கு சத்தமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  

    • கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டதோடு ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை தடைபட்டது.
    • சிறப்பு விசாரணை குழு விசாரணையும் ரத்து செய்யப்பட்டது.

    சென்னை:

    கரூரில் த.வெ.க கட்சியின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியானார்கள். இவ்விவகாரம் தொடர்பாக த.வெ.க சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் மனுதாக்கல் செய்துள்ளது.

    கரூர் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறையின் விசாரணை சரியான திசையில்தான் சென்று கொண்டிருந்தது. எந்த வகையிலும் பாரபட்சமின்றி விசாரணை என்பது நடத்தப்பட்டு வந்தது. சென்னை ஐகோர்ட்டுதான் சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. அதுவும் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி தலைமையில் விசாரணை குழுவை அமைத்தது.

    மேலும் அந்த விசாரணையை கோர்ட்டு கண்காணிப்பதாகவும் தெரிவித்திருந்தது. அதேவேளையில் மாநில அரசானது தன்னுடைய சட்டபூர்வமான அதிகாரத்தின் அடிப்படையில் ஒரு நபர் ஆணையத்தை விசாரணைக்காக அமைத்திருந்தது. அந்த ஆணைய விசாரணை முழு சுதந்திரமாகவும் தொடங்கி நடைபெற்று வந்திருந்தது. இந்த நிலையில் கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டதோடு ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை தடைபட்டது. சிறப்பு விசாரணை குழு விசாரணையும் ரத்து செய்யப்பட்டது.

    எனவே நீதியை நிலைநாட்டும் வகையில் நடுநிலையான ஒரு உத்தரவை கோர்ட்டு இந்த விவகாரத்தில் பிறப்பிக்க வேண்டும். அந்த வகையில் சி.பி.ஐ விசாரணை ரத்து செய்துவிட்டு தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தொடர அனுமதிக்க வேண்டும். ஒரு நபர் ஆணையத்தின் விசாரணையை தொடர்வதற்கு அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ராஜஸ்தானை தொடர்ந்து குஜராத் உயர் நீதிமன்றமும் ஆறுமாதம் இடைக்கால ஜாமின் வழங்கியது
    • ஆசாராம் நிலையாக இருப்பதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பு வழக்கறிஞர் வாதம்

    பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆசாராம் பாபுவிற்கு வழங்கப்பட்டுள்ள ஜாமினை ரத்து செய்யக்கோரி, பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    குஜராத் மாநிலத்தை சேர்ந்த மதபோதகர் ஆசாராம் பாபு (86). இவருக்கு ராஜஸ்தானின் ஜோத்பூர் உள்ளிட்ட பல இடங்களில் ஆசிரமங்கள் உள்ளன. கடந்த ஆகஸ்ட் 2013 -ல் ஜோத்பூருக்கு அருகிலுள்ள மனாய் கிராமத்தில் உள்ள ஆசிரமத்தில், 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, குஜராத்தின் சூரத்தில் உள்ள மற்றொரு ஆசிரமத்தில் இரண்டு சகோதரிகளை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆசாராம் மற்றும் அவரது மகன் நாராயண் சாய் மீது குற்றம் சாட்டப்பட்டது. 

    இந்த வழக்கிலும் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு, மருத்துவ காரணங்களுக்காக ஜனவரி 7, 2025 அன்று இடைக்கால ஜாமின் பெற்றார். பின்னர் இந்த ஜாமின் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து ஜாமினை நீட்டிக்கக் கோரிய அவரது மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்டில் சரண்டைந்தார்.

    இச்சூழலில் அக்டோபர் 29 அன்று, சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் இருந்த ஆசாராமுக்கு மருத்துவ காரணங்களுக்காக ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ஆறு மாதம் ஜாமின் வழங்கியது. ஒரு வாரம் கழித்து, நவம்பர் 6 ஆம் தேதி, குஜராத் உயர் நீதிமன்றமும் ஆசாராமுக்கு ஆறு மாதம் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. 

    இந்நிலையில் ஆசாராமிற்கு வழங்கப்பட்டுள்ள ஜாமினை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பின் வழக்கறிஞர் அல்ஜோ ஜோசப், ஆசாராம் உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், ஆசாராம் நாடு முழுவதும் பயணம் செய்து வருவதாகவும், அவரது ஜாமினை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

    ஆகஸ்ட் மாதம், உயர்நீதிமன்றம் ஒரு மருத்துவக் குழுவை அமைத்ததாகவும், அதன் அறிக்கையில் ஆசாராம் நிலையாக இருப்பதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறியதாகவும் வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். மருத்துவ காரணங்களுக்காக ஜாமின் பெற்ற ஆசாராம், அகமதாபாத், ஜோத்பூர் மற்றும் இந்தூர் உள்ளிட்ட பிற இடங்களுக்கு பயணம் செய்து வருவதாகவும் ஜோசப் வாதிட்டார். 

    ×