search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NEET Irregularities"

    • இருஅவைகளிலும் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.
    • எதிர்க்கட்சகள் தங்களது பிரச்சினை குறித்து பேசலாம்.

    இந்தியாவில் மூன்றாவது முறையாக பிரதமர் பதவியேற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் பாராளுமன்ற கூட்டத் தொடர் கடந்த மாதம் 27 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரின் முதல் நாளில் இருஅவைகளிலும் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

    இதைத் தொடர்ந்து ஜனாதபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற இருந்தது. ஆனால் நீட் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. எனினும், ஜனாதிபதி உரை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சகள் தங்களது பிரச்சினை குறித்து பேசலாம் என்று தெரிவித்தார்.

    இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், ஜனாதிபதி உரை மீதான விவாதம் இரு அவைகளிலும் தொடங்க இருந்தது.

    இதனிடையே பாராளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

    அப்போது, "நாடாளுமன்றத்திற்கு நீட் முறைகேடு விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்ற செய்தியை மாணவர்களுக்கு அனுப்ப விரும்புகிறோம். எனவே இந்த செய்தியை அனுப்ப நாடாளுமன்றம் இதனை விவாதிக்க வேண்டும், என்று தெரிவித்தார்.

    இதற்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எழுந்து பதில் அளிக்கையில், "மக்களவை கூட்டம் சட்டத்துக்கும் விதி முறைகளுக்கும் உட்பட்டே செயல்படுகிறது" என்றார். எனினும் ராகுல் அந்த பதிலால் திருப்தி அடைய வில்லை. மீண்டும் நீட் விவாதம் குறித்து கேள்வி எழுப்பினார்.

    நீட் விவகாரம் தொடர்பாக நாள் முழுக்க இந்த சபையில் நாம் விவாதிக்க வேண்டும் என்று ராகுல்காந்தி கோரிக்கை விடுத்தார். அதற்கு அரசு தரப்பில் நீட் குறித்து உரிய முறையில் விவாதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் நாள் முழுக்க விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சபாநாயகர் ஏற்க வில்லை.

    இதையடுத்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக பாராளுமன்ற மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ஜனாதிபதி உரை மீதான விவாதத்துக்கு பாராளுமன்றத்தில் நாளையும் (செவ்வாய்க்கிழமை), மாநிலங்களவையில் நாளை மறுநாளும் (புதன்கிழமை) பிரதமா் மோடி பதில் அளிப்பாா் என எதிர்பாா்க்கப்படுகிறது.

    • நீட் குறித்து விவாதம் நடத்த கவன ஈர்ப்பு மசோதா தாக்கல்.
    • முறையாக விவாதிக்க பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொள்கிறேன்.

    இந்தியாவில் மருத்துவப்படிப்பில் சேர்வதற்காக நடத்தப்படும் நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக பெரும் சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கப்பட்டு, புதிய தலைவர் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    இது தொடர்பாக நாடு முழுக்க போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே 18-வது பாராளுமன்ற கூட்டத்தில் நீட் தேர்வு குறித்து விவாதம் நடத்த எதிர்கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மாணிக்கம் தாகூர் பாராளுமன்றத்தில் நீட் குறித்து விவாதம் நடத்த கவன ஈர்ப்பு மசோதாவை தாக்கல் செய்துள்ளர்.

    அந்த வகையில், மக்களவைக்கு செல்லும் போது பேசிய பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, "எதிர்கட்சிகளை சேர்ந்த அனைத்து கட்சி தலைவர்களும் நேற்று கூட்டம் நடத்தினோம். அந்த கூட்டத்தில் நீட் விவகாரம் பற்றி ஆலோசனை நடத்தினோம். பாராளுமன்றத்தில் நீட் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் நாட்டின் இளைஞர்கள் தொடர்பான ஒன்று என்பதால் இதனை முறையாக விவாதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொள்கிறேன்."

    "இளைஞர்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் நீங்களும் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்திய அரசாங்கமும், எதிர்கட்சிகளும் மாணவர்கள் குறித்த விவகாரத்தை பற்றி ஒன்றாக பேசுகிறார்கள் என்ற தகவல் பாராளுமன்றத்தில் இருந்து செல்ல வேண்டும்," என்று தெரிவித்தார்.

    • நாடு முழுக்க 24 லட்சம் பேர் நீட் தேர்வை எழுதினர்.
    • கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நாடு முழுக்க நீட் தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை சார்பில் இந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வு மே 5 ஆம் தேதி நடைபெற்றது. இதில் நாடு முழுக்க 24 லட்சம் பேர் எழுதினர். சமீபத்தில் இந்த தேர்வு முடிவுகள் வெளியாகின.

    இதனிடையே நீட் தேர்வில் ஏராளமான குளறுபடிகள் நடைபெற்றதாகவும், வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதோடு ஆள் மாறாட்டம், குறிப்பிட்ட தனியார் மையத்தில் இருந்து அதிகம் பேர் முதலிடம் பெற்றது என பல்வேறு குற்றச்சாட்டுக்களை மாணவர்கள் முன்வைத்தனர்.

    இந்த வரிசையில் 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில் இந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

    நீட் தேர்வு குளறுபடிகள் தொடர்பான பிரச்சினை பூதாகாரம் ஆகியுள்ள நிலையில், தேசிய தேர்வு முகமையின் தலைவரை மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தேசிய தேர்வு முகமையின் தலைவராக இருந்த சுபோத் குமார் சிங் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சிங் கரோலா புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    தேசிய தேர்வு முகமையின் தலைவர் மாற்றப்பட்டு இருப்பதோடு, நீட் தேர்வு முறைகேடுகள் குறித்த விசாரணை சிபிஐ-இடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம், கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது என இது தொடர்பான அனைத்து பிர்ச்சினைகள் குறித்த விசாரணையை சி.பி.ஐ. துவங்கியுள்ளது.

    முன்னதாக போட்டி தேர்வுகளை கண்காணிக்க உயர்மட்ட குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. மேலும், மத்திய அரசு தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டால் அதிகபட்சம் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 1 கோடி அபராதம் விதிக்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

    ஏற்கனவே நடைபெற்ற நீட் தேர்வு விவகாரத்தில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதை அடுத்து, இன்று நடைபெற இருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.  

    ×