search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sayana Ekadasi"

    • புண்ணிய தினத்தில் மகாவிஷ்ணுவை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
    • சிறுவர்-சிறுமிகளுக்கு நல்ல கல்வி அறிவு கிடைக்கும்.

    புதன்கிழமையும் அனுஷம் நட்சத்திரமும் ஒன்றாக சேர்ந்து வரும் தினத்தை புதானூராதா புண்ணிய கால தினம் என்று சொல்வார்கள். இது விசேஷமான தினமாகும். இந்த புண்ணிய தினம் இன்று.

    இந்த தினத்தை அட்சய திருதியை தினத்துக்கு சமமானதாக சொல்வார்கள். அதாவது இன்றைய தினம் நாம் ஒரு நல்ல செயலை செய்தால் அது பல மடங்கு பெருகி நமக்கு பலனாக வந்து கை கொடுக்கும் என்பது ஐதீகம்.

    இந்த புண்ணிய தினத்தில் மகாவிஷ்ணுவை வழிபாடு செய்வது மிகவும் நல்லது. இன்று பெருமாள் ஆலயங்களுக்கு செல்லும்போது தயிர் சாதம் தயாரித்து ஊறுகாயுடன் சேர்த்து வைத்து வழிபட வேண்டும். பிறகு அந்த தயிர் சாதம்-ஊறுகாயை ஆழ்வார்கள் சன்னதியில் வைத்து பக்தர்களுக்கு தானமாக கொடுக்கலாம்.

    இந்த தானத்தால் குடும்பத்தில் உள்ள சிறுவர்-சிறுமிகளுக்கு நல்ல கல்வி அறிவு கிடைக்கும். சிலருக்கு சனி தோஷம் மிகவும் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும். அத்தகைய நிலையில் இருப்பவர்கள் இந்த புதானூராதா புண்ணிய கால வழிபாட்டை செய்தால் சனி தோஷத்தில் இருந்து சற்று ஆறுதல் பெறலாம்.

    மேலும் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் கிடைக்க செய்யும் ஆற்றலும் இந்த வழிபாட்டுக்கு உண்டு.

    • பிரகாரங்களை வலம் வந்து வழிபடுவது லட்சபிரதட்சணம் எனப்படும்.
    • அறிந்தும் அறியாமல் செய்த பாவங்கள் நம்மை விட்டு விலகும்.

    ஆலய வழிபாட்டில் இறைஅருளை பெற எத்தனையோ வழிகள் இருந்தாலும் ஆலய பிரகாரங்களை வலம் வந்து தரிசனம் செய்யும் முறைக்கு அதிக பலன்கள் தரும் ஆற்றல் உண்டு. எனவேதான் ஆலயத்துக்கு சென்றதும் பிரகாரங்களை அவசியம் சுற்றி வர வேண்டும் என்றார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வரும் சயன ஏகாதசி தொடங்கி கார்த்திகை மாதம் வரும் உத்தான ஏகாதசி வரை தினமும் ஆலயங்களுக்கு சென்று பிரகாரங்களை வலம் வந்து வழிபட வேண்டும் என்று நமது முன்னோர்கள் வகுத்து வைத்து இருக்கிறார்கள்.

    பிரகாரங்களை வலம் வந்து வழிபடும் இந்த வழிபாட்டை லட்சபிரதட்சணம் என்று அழைக்கிறார்கள். ஜூலை மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை செய்ய வேண்டிய இந்த வழிபாட்டின் போது லட்சம் தடவைக்கு மேல் ஆலய பிரகாரங்களை வலம் வந்து விட முடியும் என்று நமது முன்னோர்கள் கணித்துள்ளனர். எனவே இதற்கு லட்சபிரதட்சண வழிபாடு என்று சொல்கிறார்கள்.

    ஆண்டுக்கு ஒரு தடவையே வரும் இந்த சிறப்பான வழிபாடு இன்று விஷ்ணு சயனிக்கும் ஏகாதசி அன்று தொடங்குகிறது. 12.11.2024 வரை தினமும் இந்த பிரகாரம் வலம் வரும் வழிபாட்டை செய்ய வேண்டும்.

    ஆலயத்தில் அரச மரம், துளசி இருந்தால் அவற்றை காலையில் மட்டுமே வலம் வந்து வழிபட வேண்டும். இந்த வழிபாட்டை வேதவியாசர் ஒரு தடவை தர்மருக்கு அறிவுறுத்தி செய்ய வைத்ததாக புராணங்களில் சொல்லப்பட்டு உள்ளது.

    ஆலயத்தை வலம் வரும் இந்த வழிபாட்டை செய்து முடித்தால் மிகுந்த பலன்கள் கிடைக்கும். குறிப்பாக அறிந்தும் அறியாமல் செய்த பாவங்கள் நம்மை விட்டு விலகும்.

    • ஆடி மாதம் மகாவிஷ்ணு சயன கோலத்தில் இருக்கும் ஏகாதசி.
    • நைவேத்தியமாக பால் பாயாசம் படைத்து வழிபடலாம்.

    விரதங்களில் மிக மிக உயர்ந்தது ஏகாதசி விரதம் என்று சொல்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் 24 அல்லது 25 ஏகாதசி விரதங்கள் வரும். இந்த ஏகாதசி விரதங்களில் சில ஏகாதசி விரதங்கள் மிகுந்த பலன்களை தரும் ஆற்றலை கொண்டது.

    குறிப்பாக ஆடி மாதம் மகாவிஷ்ணு சயன கோலத்தில் இருக்கும் ஏகாதசி. அடுத்து மகாவிஷ்ணு படுக்கையில் திரும்பி படுக்கும் பரிவர்த்தனை ஏகாதசி மற்றும் மகாவிஷ்ணு படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் உத்தான ஏகாதசி ஆகிய 3 ஏகாதசிகளும் மிகவும் சிறப்பானவை.

    ஆனி மாத அமாவாசைக்கு பிறகு வரும் சயன ஏகாதசியான இன்று குடும்பத்தில் யார் யாருக்கு முடியுமோ அவர்கள் அனைவரும் முழு உபவாசம் இருக்க வேண்டும். இயலாதவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிட்டு உண்ணாவிரத நோன்பு இருக்கலாம்.

    இன்று மாலை சூரியன் மறைந்த பிறகு மகாலட்சுமியுடன் கூடிய மகாவிஷ்ணு படத்தை பூஜை அறையில் அலங்கரித்து வைத்து நைவேத்தியம் படைத்து தீபதூபங்கள் காட்டி வழிபட வேண்டும். மகாவிஷ்ணுவை அலங்கரிக்கும்போது தாமரை அல்லது மல்லிகைப்பூவை பயன்படுத்துவது நல்லது.

    நைவேத்தியமாக பால் பாயாசம் படைத்து வழிபடலாம். பூஜைகள் முடிந்ததும் மகாவிஷ்ணு போற்றி சொல்ல வேண்டும். இன்றைய தினம் இந்த வழிபாட்டை செய்தால் ஆண்டு முழுவதும் ஏகாதசி விரதம் இருந்ததற்கு சமமான பலன்கள் கிடைக்கும்.

    பிரம்மகத்தி தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் விலகிச் செல்லும். மேலும் நல்ல வீடும், அமைதியான வாழ்க்கையையும் இந்த வழிபாடு பெற்று தரும். 

    சயன ஏகாதசியான இன்று மேற்கொள்ளப்படும் விரதத்திற்கு கோபத்ம விரதம் என்று பெயர். காலை மற்ற கடமைகளை முடித்து விட்டு பூஜை அறையில் 3 கோலங்கள் போட்டு தாமரை மலர்களால் அலங்கரித்து அதன் நடுவில் மகாலட்சுமியுடன் மகாவிஷ்ணு இருக்கும் படத்தை வைத்து வழிபட வேண்டும்.

    33 முறை வலம் வந்து 33 முறை வழிபட வேண்டும். படம் இல்லாமல் கலசம் வைத்தும் இந்த வழிபாட்டை செய்யலாம். பிறகு 33 நபர்களுக்கு பிரசாதம் அளிப்பது சாப்பிட செய்ய வேண்டும். இந்த பூஜை செய்பவர்களுக்கு பாவங்கள் விலகும். பேரன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்று பத்ம புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×