search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரங்கசாமி"

    • சமூக அமைப்பினரின் இந்த போராட்டம் புதுச்சேரி குடிமைப்பணி அதிகாரிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • முதலமைச்சர் ரங்கசாமியை அரசு அதிகாரிகள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் அரசிதழ் பதிவு பெறாத குரூப் 'பி' பணியிடங்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

    ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு இந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போதைய இந்த அறிவிப்புக்கு அரசு சார்பு செயலாளர்கள் 2 பேர் தான் காரணம் என்று கூறி அவர்களது வீடுகளை சமூக அமைப்பினர் முற்றுகையிட்டு ஒப்பாரி போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    சமூக அமைப்பினரின் இந்த போராட்டம் புதுச்சேரி அரசு குடிமைப்பணி அதிகாரிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    தனிப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுவது குறித்து அவர்கள் ஒருவருக்கொருவர் அதிருப்தி தெரிவித்துக்கொண்டனர்.

    இந்த நிலையில் குடிமைப்பணி அதிகாரிகள் சங்க தலைவரான தொழில் துறை இயக்குனர் ருத்ர கவுடுவுடன் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது இதுதொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து முறையிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கோரிமேட்டில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமியின் வீட்டிற்கு சென்றனர். அங்கு முதலமைச்சர் ரங்கசாமியை முற்றுகையிட்டனர்.

    அப்போது முதலமைச்சர் ரங்கசாமியிடம் அரசின் அறிவிப்புக்காக தனிப்பட்ட அதிகாரிகளின் வீட்டு முன்பு போராட்டம் நடத்துவது என்பது அதிகாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், அதிகாரிகளின் குடும்பத்தினர் மிகவும் மன உளைச்சலுடன் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

    ஓய்வு பெற குறுகிய காலமே உள்ள அதிகாரிகள் இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால் விருப்ப ஓய்வு பெறும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்றும் கூறினார்கள். தங்களுக்கும் குழந்தைகள் இருப்பதால் அவர்களும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

    எனவே அதிகாரிகள் வீடுகள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஜாமீனில் வர முடியாத பிரிவில் வழக்கு தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    இதையடுத்து முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரிகள் வீடுகள் முன்பு போராட்டம் நடத்தியவர்கள் குறித்து போலீசாரை அழைத்து பேசுவதாகவும், அதிகாரிகளுக்கு எப்போதும் அரசு பாதுகாப்பாக இருக்கும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார். முதலமைச்சர் ரங்கசாமியின் உறுதிமொழியை ஏற்று அதிகாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    முதலமைச்சர் ரங்கசாமியை அரசு அதிகாரிகள் முற்றுகையிட்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • புதுச்சேரி சுதந்திரம் அடைந்தாலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் யூனியன் பிரதேசமாக உள்ளது.
    • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் வேண்டும் என்பதாகும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு சார்பில் சுதந்திரத் தினத்தை முன்னிட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு தேநீர் விருந்து அளிக்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் நடந்தது.

    விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி தியாகிகளுக்கு சால்வை அணிவித்து, பரிசுப் பொருட்களை வழங்கினார். விழாவையொட்டி நடந்த கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஜவகர் சிறுவர் இல்ல மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    புதுச்சேரி சுதந்திரம் அடைந்தாலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் யூனியன் பிரதேசமாக உள்ளது. இதனால் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பொதுமக்கள் விரும்புவது புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து முழு அதிகாரம் வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் வேண்டும் என்பதாகும். இதன் மூலம் புதுச்சேரிக்கு மேலும் வளர்ச்சியை கொண்டுவர முடியும்.

    அதற்காக தான் மாநில அந்தஸ்து, முழு அதிகாரம் வேண்டும் என்று சட்டசபையில் ஆண்டு தோறும் தீர்மானம் கொண்டு வந்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கிறோம். பிரதமர் மற்றும் உள்துறை மந்திரியை சந்தித்து வலியுறுத்தி வருகிறோம்.

    இப்போது புதுச்சேரியில் முழு அதிகாரம் கவர்னருக்கு தான் உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முழு அதிகாரம் தேவை. மாநில அந்தஸ்து பெறுவதற்கான அனைத்து தகுதிகளும் தற்போது புதுச்சேரிக்கு உள்ளது. மாநில அந்தஸ்து கிடைத்தால் புதுச்சேரிக்கு கூடுதல் வளர்ச்சியை கொண்டு வர முடியும்.

    புதுச்சேரியில் தியாகிகளுக்கான பென்ஷன் தொகை ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். மேலும் தியாகிகளுக்கு மனை பட்டா வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கூட்டுறவு சர்க்கரை ஆலையைத் திறந்து எத்தனால் தயாரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • கூட்டுறவு நூற்பாலையையும் தனியார் பங்களிப்புடன் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் எம்.எல்.ஏ.க்கள் பேசினர்.

    அப்போது வளர்ச்சி திட்டங்களில் உள்ள குறைபாடுகள், தொகுதிக்கு தேவையான திட்டங்கள், அரசின் செயல்பாடுகள் ஆகியவற்றை சுட்டிகாட்டியும் கோரியும் பேசினர்.

    இதனை தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் பதில் அளித்து பேசினர்.

    இதையடுத்து முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் தங்கள் துறைகளில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டனர். அதில் பிரதான அம்சங்கள் வருமாறு:-

    குடிசை மாற்று வாரியத்தின் மூலம் காமராஜர் கல்வீடு கட்டும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். பிரதமர் கல்வீடு கட்டும் திட்டத்திலும் மத்திய அரசு உயர்த்தி அளித்துள்ள, ரூ.2¼ லட்சத்துடன், சேர்த்து ரூ.5 லட்சம் வழங்கப்படும்.

    சட்டமன்றத்திற்கான அடிக்கல் நாட்டி கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்படும். கூட்டுறவு சர்க்கரை ஆலையைத் திறந்து எத்தனால் தயாரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல் கூட்டுறவு நூற்பாலையையும் தனியார் பங்களிப்புடன் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    நெல்லுக்கான ஊக்கதொகை கிலோவுக்கு ரூ.2 அதிகரிக்கப்படும். கால்நடை விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் மாட்டு தீவனம் ஆண்டு முழுவதும் வழங்கப்படும்.

    மாணவர்களின் ஊட்டச்சத்து அதிகரிக்க வாரம் 5 நாட்களும் சிறுதானிய பிஸ்கட், சிறுதானியம், வேர்க்கடலை, எள், பொட்டு கடலை மிட்டாய் ஆகியவை மாலை சிற்றுண்டியாக வழங்கப்படும்.

    பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், கலை, அறிவியல், வேளாண், சட்டம் போன்ற பிற பிரிவுகளில் சென்டாக் மூலம் சேரும் மாணவர்களுக்கு காமராஜர் நிதியுதவி திட்டம் விரிவுபடுத்தப்படும்.

    அரசு மற்றும் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 10 சதவீத அரசு பள்ளி இடஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.ஏ.எம்.எஸ். படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு முழு கல்வி கட்டண விலக்கு அளிக்கப்படும்.

    • திட்டங்களை விரைவாக செயல்படுத்த மாநில அந்தஸ்து தேவை.
    • எம்.பி.க்கள் புதுச்சேரிக்காக கேள்வி எழுப்பி மாநில அந்தஸ்து தர வலியுறுத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    சபையில் பேசிய அனைத்து எம்.எல்.ஏ.க்களும் புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து பெறுவது குறித்து பேசினர். மக்களின் எண்ணமும் அதுவாக தான் உள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு மத்திய அரசை வலியுறுத்தி கொண்டே உள்ளோம்.

    பல முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியுள்ளோம். கடந்த முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியபோது மத்திய அரசு மாநில அந்தஸ்து தர வாய்ப்பில்லை என்று அறிவித்துவிட்டது.

    எம்.எல்.ஏ.க்கள் தெரிவிக்கும் குறைகளை சரி செய்யவும், கேட்கும் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றவும் மாநில அந்தஸ்து தேவை.

    மத்திய அரசை கேட்டு வலியுறுத்தி வருகிறோம். அரசு என்றால் சட்டசபை என இல்லாமல் கவர்னர் ஒப்புதலும் மிக அவசியம். மறைவாக இருந்த இதை உச்சநீதிமன்றம் வரை சென்று கவர்னருக்கு தான் அதிகாரம் என வெளிப்படையாக தெரிவிக்க செய்து விட்டனர். அதன் காரணமாக அனைத்தும் காலதாமதம் ஆகிறது.

    கோப்புகளை பார்க்கும் எல்.டி.சி., முதல் தலைமைச் செயலர் வரை அவர்கள் என்ன நினைக்கின்றார்களோ அதுதான் நிறைவேற வேண்டும் என நினைக்கின்றனர்.

    அதனால் கோப்பு தேங்கி கிடக்கிறது. இப்படி இருந்தால் மக்கள் எண்ணங்கள் எப்படி நிறைவேறும்? இதனை சுட்டி காட்டி மத்திய அரசிடம் மாநில அந்தஸ்து கேட்டு வலியுறுத்துகிறோம்.

    திட்டங்களை விரைவாக செயல்படுத்த மாநில அந்தஸ்து தேவை. எம்.பி.க்கள் புதுச்சேரிக்காக கேள்வி எழுப்பி மாநில அந்தஸ்து தர வலியுறுத்த வேண்டும்.

    இதன் மூலம் வருவாய் மற்றும் மத்திய அரசின் உதவி அதிகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதனால் மாநில அந்தஸ்து பெற தயக்கம் இல்லை.

    மாநில அந்தஸ்து பெற்றால் சிரமமின்றி புதுச்சேரிக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியும். அரசு பொறுப்பேற்ற போது, காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் 3 மாதத்தில் நிரப்பலாம் என நினைத்தால், 3 ஆண்டு முடிந்தும் நிரப்ப முடியாத நிலை உள்ளது.

    மாநில அந்தஸ்து தான் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. எனவே நமது எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்த வேண்டும். இந்தியா கூட்டணிக்கும் அதிக எம்.பி.,க்கள் கிடைத்துள்ளனர். அவர்களும் பாராளுமன்றத்தில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க வலியுறுத்த வேண்டும்.

    நாமும் டெல்லி சென்று பிரதமர் உள்ளிட்டோரை சந்தித்து பேசலாம். புதுச்சேரி மாநிலம் பெரிய அளவில் வளர்ச்சி காண மாநில அந்தஸ்து வேண்டும்.

    கடந்த காலத்தில் கருத்து வேறுபாடுகளை கோப்புகளில் கவர்னர் வெளிப்படுத்த தொடங்கினர். அதுவும் வளர்ச்சிக்கு தடையானது.

    இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார்.

    • பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களில் ஒரு பிரிவினர் போர்க்கொடி.
    • மக்களுக்கு வெறுப்பை உண்டாக்கும் நோக்கத்தில் செயல்படுகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் ஆளுங்கூட்டணியின் தோல்விக்கு பிறகு என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா இடையிலான விரிசல் அதிகரித்துள்ளது.

    முதலமைச்சர் ரங்கசாமியின் செயல்பாடுகளால்தான் தேர்தலில் தோல்வியடைந்தோம். எனவே முதலமைச்சருக்கு தரும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என்றும் பா.ஜனதா அமைச்சர்களை மாற்ற வேண்டும் என பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களில் ஒரு பிரிவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

    பா.ஜனதா தேசிய தலைவர் நட்டா, மத்திய மந்திரி மெக்வால், அமைப்பு செயலர் சந்தோஷ் ஆகியோரை சந்தித்தும் புகார் கூறினர். மத்திய மந்திரி அமித்ஷாவை சந்திக்க முயற்சித்தனர். ஆனால் நேரம் கிடைக்கவில்லை.

    அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் பா.ஜனதா மேலிட பார்வையாளர் சுரானா முயற்சியும் தோல்வியடைந்தது.

    இந்த நிலையில் புதுவை சட்டசபையில் இன்று முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார்.

    புதுவை சட்டசபைக்கு அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஓரணியாக வந்தனர். முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, சட்டசபை வளாகத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்று நல்லாட்சி அளித்து வருகிறார். அவர் தலைமையில் நடந்த நிதி ஆய்வுக்குழு கூட்டத்தில் புதுவை முதலமைச்சர் கலந்து கொள்ளவில்லை. புதுவையில் பா.ஜனதா மீது மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தோடு முதலமைச்சர் ரங்கசாமி செயல்பட்டு, பட்ஜெட் தாக்கல் செய்வது வருத்தம் அளிக்கிறது.

    ஆந்திரா, பீகாருக்கு பல கோடி மத்திய அரசு வழங்கியுள்ளது. அவர்கள் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கும் முன்பாக ஒரு வாரம் டெல்லியில் முகாமிட்டு, ஒவ்வொரு துறை அமைச்சரையும் சந்தித்து மாநில வளர்ச்சிக்காக நிதி ஒதுக்க கோரினர். அந்த அடிப்படையில்தான் மத்திய அரசு நிதியை வாரி வழங்கியுள்ளது.

    புதுவை முதலமைச்சரும் மாநிலம் வளர்ச்சியடைய வேண்டும் என நினைத்திருந்தால், மத்திய அரசின் நிதிஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு நமக்கு தேவையான நிதியை பெற்றிருக்க முடியும்.

    ஒவ்வொரு மத்திய அமைச்சர்களையும் துறை வாரியாக சந்தித்து ஒவ்வொரு திட்டத்தின் மூலமாகவும் ரூ.50 கோடி என பெற்றிருந்தால்கூட புதுவை மாநில பட்ஜெட் தொகையை விட கூடுதலாக ரூ.2 ஆயிரம் கோடி கிடைத்திருக்கும்.

    பிரதமர் பதவியேற்பு, நிதிஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது, பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளை புறக்கணிப்பது, மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்ற பொய்யான கூற்றை மக்களிடையே உருவாக்குவதன் மூலம் புதுவையில் பா.ஜனதா மீது மக்களுக்கு வெறுப்பை உண்டாக்கும் நோக்கத்தில் முதலமைச்சர் ரங்கசாமி செயல்பட்டு வருகிறார்.

    புதுவையில் அளவுக்கு அதிகமான ரெஸ்டோபார்களுக்கு தொகுதி எம்.எல்.ஏ.க்களை கலந்து ஆலோசிக்காமல் அனுமதி வழங்குகிறார். மருத்துவமனை, அரசு பள்ளிகள், வழிபாட்டு தலங்கள் உள்ள இடங்களில் ரெஸ்டோபார் அமைக்க அனுமதி வழங்கியதுதான் முதல்- அமைச்சர் ரங்கசாமி 3 ஆண்டு செய்த சாதனை.

    முதல்- அமைச்சர் மத்திய அரசை நேரடியாக சந்தித்து, மாநில வளர்ச்சிக்கான முழு நிதியையும் பெற்று புதுவையை ஒரு முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வருகிற 31-ந்தேதி காலை 9.30 மணிக்கு புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது.
    • அன்றைய தினம் சபையில் கவர்னர் உரையாற்றுகிறார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    பாராளுமன்ற தேர்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக அரசின் 5 மாத செலவினத்துக்கு ரூ.4 ஆயிரத்து 634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    தேர்தல் முடிந்தவுடன் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்காக மாநில திட்டக்குழு கூட்டம் கடந்த மாதம் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் கூடியது. கூட்டத்தில் ரூ.12 ஆயிரத்து 700 கோடிக்கு வரைவு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.

    புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் பெற வேண்டும். இதற்காக கோப்பு மத்திய உள்துறை, நிதி அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புதுச்சேரி அரசின் ரூ.12 ஆயிரத்து 700 கோடி பட்ஜெட்டுக்கு மத்திய உள்துறை, நிதித்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.

    இதைத்தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யும் கோப்புக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார். இதன்படி வருகிற 31-ந்தேதி (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அன்றைய தினம் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் உரையாற்றுகிறார்.

    ஆகஸ்டு 2-ந் தேதி காலை 9.30 மணிக்கு நிதித் துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்த தகவலை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இன்று தெரிவித்தார்.

    15-வது சட்டசபையின் 5-வது கூட்டம் வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் சபையில் கவர்னர் உரையாற்றுகிறார். 1-ந் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது. மறுநாள் 2-ந் தேதி காலை 9.30 மணிக்கு நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். பட்ஜெட்கூட்ட தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும்.

    இவ்வாறு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தெரிவித்தார்.

    • அரசியல் கட்சிகளும் ரேசன்கடைகளை திறக்க வலியுறுத்தி வந்தன.
    • பருப்பு, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ரேசன் கடைகள் மூடப்பட்டன.

    ரேசன் கடைகளில் வழங்கி வந்த இலவச அரிசிக்கு பதிலாக பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வந்தது. ஆனால் ரேசன் கடைகளை திறந்து இலவச அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வந்தது.

    அரசியல் கட்சிகளும் ரேசன் கடைகளை திறக்க வலியுறுத்தி வந்தன. நடந்து முடிந்து பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர் ரங்கசாமியிடம் ரேசன் கடைகளை எப்போது திறப்பீர்கள்? என பெண்கள் கேள்வி எழுப்பினர்.

    அப்போது விரைவில் ரேசன்கடைகள் திறக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார். இதையடுத்து கடந்த 7 ஆண்டாக மூடிக்கிடக்கும் ரேசன்கடைகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான கோப்புக்கு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் அனுமதியும் அளித்துள்ளார். இதையடுத்து ரேசன்கடைகளை திறந்து மீண்டும் இலவச அரிசி, அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

    புதுச்சேரியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள சிகப்பு ரேசன்கார்டுதாரர்களுக்கு 20 கிலோ அரிசியும், மஞ்சள் ரேசன்கார்டுதாரர்களுக்கு 10 கிலோ அரிசியும் கடந்தகாலத்தில் வழங்கப்பட்டு வந்தது. தற்போது சிகப்பு ரேசன்கார்டுக்கு 20 கிலோ இலவச அரிசியும், மஞ்சள் ரேசன்கார்டுக்கு கிலோ ரூ.1 விலையில் 20 கிலோ அரிசியும் வழங்கப்பட உள்ளது.

    இதோடு பருப்பு, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில் புதுவை முதலமைச்சர் ரங்கசாமி, புதுவையை ஒட்டியுள்ள தமிழக பகுதியான சின்ன முதலியார்சாவடி ரேசன்கடைக்கு சென்றார். வீட்டில் டென்னிஸ் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த அவர் அந்த உடையிலேயே சென்றார்.

    அங்கு ரேசன்கடை ஊழியர்களிடம் வழங்கப்படும் அரிசி, பருப்பு ஆகியவற்றை கேட்டு பெற்று அதன் தரத்தை பார்வையிட்டார். தொடர்ந்து ரேசன்கடைகளில் மாதந்தோறும் என்ன பொருட்கள் வழங்கப்படுகிறது? என்ற விபரத்தையும் கேட்டறிந்தார்.

    புதுவையில் ரேசன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்க டெண்டர் விடப்பட்டு, அரிசி கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதற்காகவே தமிழக ரேசன் கடையில் வழங்கப்படும் அரிசியை முதலமைச்சர் ரங்கசாமி பார்வையிட்டுள்ளார்.

    • ரங்கசாமிக்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ.க்கள் போர்கொடி உயர்த்தியுள்ளது.
    • தீயணைப்பு துறை பணியிடங்கள், வயது தளர்வு குறித்து கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பா.ஜனதா அமைச்சர் நமச்சிவாயம் தோல்வியடைந்தார்.

    தேர்தல் தோல்வி ஆளும் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. டெல்லி சென்ற புதுவை பாஜக, ஆதரவு மற்றும் நியமன எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் முதலமைச்சர் ரங்கசாமிக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என கட்சி தலைவர் நட்டா, அமைப்பு பொது செயலாளர் சந்தோஷ் ஆகியோரை சந்தித்து வலியுறுத்தினர்.

    ரங்கசாமிக்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ.க்கள் போர்கொடி உயர்த்தியுள்ளது புதுவை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரங்கசாமி அரசுக்கு நெருக்கடி உருவாகி உள்ளது.

    அதே நேரத்தில் ஆட்சியில் இடம் பெற்றுள்ள பா.ஜனதாவை சேர்ந்த சபாநாயகர், அமைச்சர்கள், 2 நியமன எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் கைகோர்க்கவில்லை. இதனால் புதுவை பா.ஜனதா பிளவுபட்டிருப்பது பகிரங்கமாகியுள்ளது.

    இந்த நிலையில் புதுவை அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள பா.ஜனதா அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாக கூறினார்.

    அவர் மேலும் கூறியதாவது:-

    பிரதமர் மோடி கொடுத்த பணியை தற்போது செய்து கொண்டிருக்கிறோம். பிரதமர் எந்த வேலை கொடுத்தாலும், சிறப்பாக செய்வோம். பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் டெல்லி சென்றுள்ளது குறித்து கட்சித்தலைவரிடம்தான் கேட்க வேண்டும். எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒற்றுமையாகத்தான் உள்ளோம்.

    சிவப்பு ரேசன்கார்டுகள் நீக்கப்படாது. விநியோகம் செய்யப்பட்டுள்ள ரேசன்கார்டுகள் குறித்து கணக்கெடுப்பு நடக்கிறது. அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து உரிய முடிவெடுப்போம். தீயணைப்பு துறை பணியிடங்கள், வயது தளர்வு குறித்து கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது. அதிகாரிகளை டெல்லிக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பாஜக மாநில தலைவர் செல்வகணபதி ராஜ்யசபா கூட்டத்தில் பங்கேற்க டெல்லியில் உள்ளார்.
    • டெல்லியில் முகாமிட்டுள்ள பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்குள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தோல்விக்கு பிறகு என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணியில் விரிசல் உருவாகியுள்ளது.

    முதலமைச்சர் ரங்கசாமிக்கு எதிராகவும், பா.ஜனதா அமைச்சர்களுக்கு எதிராகவும், பாஜக எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அரசு மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுதான் தேர்தல் தோல்விக்கு காரணம் என அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    அரசின் அனைத்து மட்டத்திலும் ஊழல் புரையோடியிருப்பதாகவும், புரோக்கர்கள் மூலம் ஆட்சி நடப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். இதை கட்சி மேலிடத்துக்கு தெரிவிப்பதற்காக பாஜக எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு, ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கர், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

    நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசினார். இதனால் பாஜக தலைவர்களை சந்திக்க முடியவில்லை.

    இந்த நிலையில் இன்று ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேசுகிறார். இதனால் நேற்றைய தினம் மத்திய மந்திரியும், புதுவை பொருப்பாளருமான அர்ஜூன்ராம் மெக்வாலை மட்டும் சந்தித்து பேசினர்.

    இன்று பிற்பகலுக்கு பிறகு புதுவை பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா தலைவர் நட்டா மற்றும் கட்சித் தலைவர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர்.

    அதற்கு முன்பாக டெல்லியில் முகாமிட்டுள்ள பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்குள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

    அதில் புதுவையில் இதே நிலையில் ஆட்சி நீடித்தால், பாராளுமன்றத்தில் தோல்வியடைந்தது போல 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜக தோல்வியடையும் வாய்ப்பு உள்ளது. எனவே கட்சித்தலைமை உரிய முடிவெடுக்க வேண்டும். தேவைப்பட்டால் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தெரிவிக்கலாம் என்ற யோசனையை முன்வைக்க ஆலோசித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனிடைய பாஜக மாநில தலைவர் செல்வகணபதி ராஜ்யசபா கூட்டத்தில் பங்கேற்க டெல்லியில் உள்ளார். அவரும் கட்சித் தலைவரை சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.

    • பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஆதங்கத்தை கவர்னரிடம் குமுறியுள்ளனர்.
    • என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர். காங்கிரஸ் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    புதுவை அமைச்சரவை யில் முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் சேர்த்து என்.ஆர்.காங்கிரஸ் 4 அமைச்சர்களும், பா.ஜனதா தரப்பில் 2 அமைச்சர்களும், சபாநாயகரும் உள்ளனர். என்.ஆர்.காங்கிரசுக்கு 10 எம்.எல்.ஏ.க்களுக்கும் பா.ஜனதாவுக்கும் 6 எம்.எல்.ஏ.க்கள் பலமும் உள்ளது.

    இதோடு புதுவை சட்ட மன்றத்தில் உள்ள 6 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களில் 3 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவை ஆதரிக்கின்ற னர். இவர்களோடு பா.ஜனதாவுக்கு 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். ஆட்சி அமைந்தது முதலே என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணியில் அவ்வப்போது உரசல் ஏற்பட்டு வருகிறது.

    முதல்- அமைச்சர் ரங்கசாமி மீது பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையிலும் சட்ட சபைக்கு வெளியிலும் பகிரங்கமாக பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வருகின்றனர்.

    புதிய மது ஆலைக்கு அனுமதி வழங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக சட்டசபையிலேயே பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் குற்றம்சாட்டினர். அதோடு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை கூட தங்களுக்கு முதல்- அமைச்சர் ரங்கசாமி அளிப்பதில்லை என்றும் புகார் செய்தனர்.

    வளர்ச்சிப் பணிகளில் தங்கள் தொகுதி புறக்கணிக்கப்படுவதாக கூறி சட்டசபை வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டமும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் நடத்தியுள்ளனர். கடந்த 3 ஆண்டு கால ஆட்சியில் தொடர்ந்து சலசலப்புகள் இருந்தாலும் ஆட்சி தொடர்ந்தது.

    இந்தநிலையில் பாராளுமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி சார்பில் பா.ஜனதா அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தேர்தல் தோல்வி என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணியில் விரிசலை வெளிப்படுத்தியுள்ளது.

    அதோடு தங்கள் கட்சி அமைச்சர்களுக்கு எதிராகவே பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் போர்கொடி உயர்த்தி உள்ளனர். தேர்தல் தோல்விக்கு பிறகு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி அமைச்சர் பதவியை சுழற்சி முறையில் வழங்க வேண்டும் என்றும் அரசு நிர்வாகத்தில் இல்லாத எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய பதவி வழங்க வேண்டும் என்றும் பா.ஜனதா மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி.யிடம் வலியுறுத்தினர்.

    இதன் தொடர்ச்சியாக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள், நியமன எம்.எல்.ஏ.க்கள் நேற்று கவர்னர் சி.பி.ராதா கிருஷ்ணனை கவர்னர் மாளிகையில் சந்தித்தனர். அப்போது பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஆதங்கத்தை கவர்னரிடம் குமுறியுள்ளனர்.

    ஆனால், கவர்னருடனான சந்திப்பு குறித்து கேட்ட போது தொகுதியில் வளர்ச்சி பணிகளை துரிதப் படுத்தவும், குடியிருப்பு, பள்ளி, கல்லூரிகளிடை யிலான ரெஸ்டோ பார் களை அகற்றவும் கவர்னரி டம் வலியுறுத்தியதாக தெரிவித்தனர்.

    அதேநேரத்தில் நேற்று மாலை பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுடன் கவர்னரை சந்தித்த திருபு வனை தனி தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன் பேசிய ஆடியோ வெளியானது. இதில் அங்காளன் எம்.எல்.ஏ. கவர்னரை சந்தித்து பேசிய விரங்களை தெரிவித்துள் ளார்.

    அதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, பா.ஜனதா அமைச்சர்கள் மீது ஊழல் புகார்களையும் புரோக்கர் கள் துணையோடு முதல்- அமைச்சர், அமைச்சர்கள் லஞ்சம் பெறுவதாகவும் கவர்னரிடம் எம்.எல்.ஏ.க்கள் புகார் தெரிவித்ததாக பகிரங்கமாக தெரிவித்துள் ளார்.

    இதேநிலை நீடித்து கூட்டணி ஆட்சி தொடர்ந் தால் சட்டமன்ற தேர்தலில் படு தோல்வியை சந்திக்க வேண்டியதிருக்கும். கூட்டணி தர்மத்தை மதிக்காத முதல்-அமைச்சர் ரங்கசாமியை ஏன் ஆதரிக்க வேண்டும்? என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் என தெரிவித்ததாகவும் அங்காளன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

    இந்த ஆடியோ புதுவை மக்களிடம் வைரலானது. மேலும் பா.ஜனதா தலைமையை சந்தித்து பேச எம்.எல்.ஏ.க்கள் நேரம் கேட்டு கடிதமும் எழுதியுள்ளனர். இதனால் புதுவையை ஆளும் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

    இது புதுவை முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.
    • இதுபோன்ற பண்டிகைகள் சமூகங்களுக்கு இடையேயான பிணைப்புகளை வலுப்படுத்தி நல்லிணக்க உணர்வை வளர்க்க உதவுகின்றன.

    இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    பக்ரீத் பண்டிகை என்பது உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய மக்களால் தியாகத்தின் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. தியாகம், இரக்கம், நன்றியுணர்வு போன்ற மனித மாண்புகளின் முக்கியத்துவத்தை நினைவூட்டும் இதுபோன்ற பண்டிகைகள் சமூகங்களுக்கு இடையேயான பிணைப்புகளை வலுப்படுத்தி நல்லிணக்க உணர்வை வளர்க்க உதவுகின்றன.

    பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடும் இந்த புனிதமான நாளில் அல்லாஹ்வின் ஆசீர்வாதமும் கருணையும் அனைவரது குடும்பத்திலும் அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டும் என்று கூறி, அனைவருக்கும் பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

     

    • விஷ வாயு பரவிய பகுதிகளில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • உடனடியாக அப்பகுதியில் 10 தெருக்களில் வசிக்கும் மக்கள் வெளியேறும்படி மைக் மூலம் எச்சரிக்கப்பட்டது.

    புதுச்சேரியில் உள்ள ரெட்டியார்பாளையம் கனகன் ஏரிக்கு அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. அந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் விஷவாயு உற்பத்தியாகி பாதாள சாக்கடை வழியாக வீடுகளில் உள்ள கழிவறைக்குள் புகுந்துள்ளது.

    இதனால் ரெட்டியார்பாளையம் புதுநகர் 4-வது தெருவில் கழிவறைக்கு சென்றவர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். இதில் மூதாட்டி செந்தாமரை, அவரின் மகள் காமாட்சி, செல்வராணி ஆகியோர் உயிரிழந்தனர்.

    விஷ வாயு தாக்கியதால் பாதிக்கப்பட்ட பாக்கியலட்சுமி, ஆரோக்கியதாஸ், பாலகிருஷ்ணா ஆகியோர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விஷ வாயு பரவிய பகுதிகளில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து அந்த பகுதியில் உள்ள வீடுகளில் கழிவறை வழியாக விஷவாயு பரவலாம் என முன்னெச்சரிக்கை விடப்பட்டது. அரசு தரப்பில் உடனடியாக அப்பகுதியில் 10 தெருக்களில் வசிக்கும் மக்கள் வெளியேறும்படி மைக் மூலம் எச்சரிக்கப்பட்டது.

    இந்நிலையில், விஷவாயு தாக்கி உயிரிழந்த, மூவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ரங்கசாமி நிவாரணம் அறிவித்துள்ளார். உயிரிழந்த சிறுமிக்கு ₹30 லட்சம், இறந்த 2 பெண்களுக்கு தலா ₹20 லட்சம் என அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

    ×