search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆந்திர மாநிலம்"

    • விடுதியில் தங்கி உள்ள மற்ற மாணவர்களுக்கும் வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
    • பெற்றோர்கள் விடுதிக்கு வந்து மாணவ-மாணவிகளை வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அனகா பள்ளி மாவட்டம், அரட்ல கோட்டோவை சேர்ந்தவர் கிரண் குமார். கிறிஸ்தவ பாதிரியாரான இவர் கோடபு ரத்லா என்ற இடத்தில் கொட்டகை அமைத்து கிறிஸ்தவ ஆலயம் நடத்தி வருகிறார்.

    பிரார்த்தனை நடந்து வரும் இடத்தில் பல்வேறு ஊர்களை சேர்ந்த ஏழை பழங்குடியின மாணவ-மாணவிகள் தங்கி பள்ளிக்கு செல்வதற்காக விடுதி நடத்தி வருகிறார். விடுதியில் 97 மாணவ, மாணவிகள் தங்கி அருகில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சனிக்கிழமை இரவு ஒருவர் தனது வீட்டு நிகழ்ச்சியில் மீதமான சிக்கன் பிரியாணி மற்றும் சமோசாக்களை விடுதியில் தங்கியுள்ள மாணவ மாணவிகளுக்கு கொடுத்தனர். விடுதியில் உள்ள மாணவ மாணவிகள் சிக்கன் பிரியாணி மற்றும் சமோசாவை சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றனர்.

    நள்ளிரவில் விடுதியில் தங்கி 1-ம் வகுப்பு படித்து வரும் ஜோஸ்வா (வயது 6) என்ற மாணவருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அவரை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பரிதாபமாக இறந்தார்.

    விடுதியில் தங்கி உள்ள மற்ற மாணவர்களுக்கும் வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பாதிரியார் கிரண்குமார் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் அளித்தார். பெற்றோர்கள் விடுதிக்கு வந்து மாணவ-மாணவிகளை வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர்.

    பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மாணவிகள் ஜென்மேலி பவானி (8), சத்தா(6) ஆகியோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.

    35 மாணவ- மாணவிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    போலீசார் பாதிரியார் கிரண் குமாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவிகளை மந்திரி வாங்கலடி அனிதா நேரில் சென்று ஆறுதல் கூறி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என டாக்டர்களுக்கு உத்தரவிட்டார்.

    விடுதியில் தங்கி இருந்து இறந்த மாணவ-மாணவிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

    ஆந்திராவில் அனுமதி இல்லாமல் நடத்தப்படும் அனாதை இல்லங்கள், ஆதரவற்ற இல்லங்கள் உடனடியாக மூடப்படும் என அறிவித்துள்ளார்.

    • கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் வீட்டின் சுவர்களில் விரிசல் விழுந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் கொத்தப்பேட்டையில் மூதாட்டி ஒருவர் இன்று அதிகாலை குழந்தைகளுக்கு பால் காய்ச்சுவதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார்.

    நேற்று இரவு கியாஸ் சிலிண்டரை சரியாக மூடாததால் இரவு முழுவதும் கியாஸ் கசிந்து அறையில் பரவி இருந்தது.

    மூதாட்டி கியாஸ் அடுப்பை பற்ற வைத்த போது கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    இதில் சிக்கிய மூதாட்டி மற்றும் அவரது 2 பேத்திகள் பரிதாபமாக உயிரிழந்தனர். கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் வீட்டின் சுவர்களில் விரிசல் விழுந்தது.

    கியாஸ் சிலிண்டர் வெடிக்கும் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது மூதாட்டியும் அவரது 2 பேத்திகளும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவர்களின் பிணங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடும்பத்தினர் இடிப்பாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், நந்தியாலா மாவட்டம், சின்ன வங்காலை சேர்ந்தவர் குருசேகர ரெட்டி (வயது 45) கூலி தொழிலாளி.இவரது மனைவி தஸ்தகீரம்மா (38). மகள்கள் பவித்ரா (16), குரு லட்சுமி (10). குருசேகர ரெட்டி குடிசை வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்று இரவு குடும்பத்தினர் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    தற்போது ஆந்திராவில் பலத்த மழை பெய்து வருவதால் குருசேகர ரெட்டியின் வீட்டு மண் சுவர் மழையில் நனைந்து நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்தது.

    இதில் குருசேகர ரெட்டியின் குடும்பத்தினர் இடிப்பாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இடிபாடுகளை அகற்ற முயன்றனர்.

    போலீசார் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இன்று காலை இடிப்பாடுகளை அகற்றினர். அப்போது குருசேகர ரெட்டி, அவரது மனைவி, 2 மகள்கள் பிணமாக மீட்கபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • கோவில் வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் நாக தேவதை அம்மன் சிலை உள்ளது.
    • கிராம மக்கள் திரண்டு வந்து சாமி சிலை மீது பாம்பு ஆடுவதை கண்டு பக்தி பரவசம் அடைந்தனர்.

    ஆந்திர மாநிலம், பெத்த பள்ளி அடுத்த ஒடேலாவில் சம்பு லிங்கேஸ்வரர், ஆபத் சகாயஆஞ்சநேயர் கோவில் உள்ளது.

    கோவில் வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் நாக தேவதை அம்மன் சிலை உள்ளது. கோவில் பூசாரி நாக தேவதை அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது திடீரென நல்ல பாம்பு ஒன்று வந்து நாக தேவதை அம்மன் சிலையின் மீது அமர்ந்தது. பின்னர் சாமி சிலையின் மீது படம் எடுத்து ஆடியது. இந்த செய்தி ஊர் முழுவதும் காட்டு தீ போல் பரவியது. ஏராளமான கிராம மக்கள் திரண்டு வந்து சாமி சிலை மீது பாம்பு ஆடுவதை கண்டு பக்தி பரவசம் அடைந்தனர். சாமியை வணங்கி சென்றனர்.

    இதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மீனவர்கள் கிரேன் உதவியுடன் மீனை கரைக்கு கொண்டு வந்தனர்.
    • மீனவர்கள் சென்னை வியாபாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், மச்சிலிப்பட்டினம் அடுத்த சில்காலண்டி மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க சென்றனர்.

    நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது மீனவர்கள் வலையில் பெரிய மீன் ஒன்று சிக்கியது.

    இதனை கண்ட மீனவர்கள் வலையில் சிக்கிய மீனை கரைக்கு இழுத்து வந்தனர். கரைக்கு கொண்டு வந்து பார்த்தபோது சுமார் 1500 கிலோ எடையுள்ள தேக்கு மீன் சிக்கி இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து மீனவர்கள் கிரேன் உதவியுடன் மீனை கரைக்கு கொண்டு வந்தனர். இது குறித்து மீனவர்கள் சென்னை வியாபாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சென்னை வியாபாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மீனை வாங்கி லாரியில் ஏற்றி சென்னைக்கு கொண்டு வந்தனர்.

    • மனைவிகள் இருவரும் தாங்களாகவே முன்வந்து அவருக்கு 3-வது திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
    • திருமணத்திற்கு வந்தவர்களுக்கு விருந்து வைத்து அசத்தினர்.

    ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம் பெடப்பயலு கிராமத்தை சேர்ந்தவர் பாண்டண்ணா.

    இவர் முதலில் பர்வதம்மா என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால் முதல் மனைவியின் சம்மதத்துடன் அப்பலம்மா என்பவரை பாண்டண்ணா 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2007-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் பாண்டண்ணாவுக்கு 2-வது குழந்தை வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

    தற்போது குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என இரண்டாவது மனைவி தெரிவித்தார். ஆனால் பாண்டண்ணா 2-வது குழந்தை கட்டாயம் வேண்டும் என அடம் பிடித்தார்.

    இதனால் மனைவிகள் இருவரும் தாங்களாகவே முன்வந்து அவருக்கு 3-வது திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

    அதே ஊரை சேர்ந்த லாவ்யா என்ற இளம் பெண்ணை அவருக்கு திருமணம் செய்து வைக்க நிச்சயம் செய்தனர். இதைத் தொடர்ந்து பத்திரிகை அடித்து உற்றார் உறவினர்கள் மற்றும் ஊர் முழுவதும் கொடுத்தனர். தங்களது படத்துடன் கணவர் மற்றும் 3-வது மனைவி படத்தை வைத்து வரவேற்பு டிஜிட்டல் பேனர்களையும் அவர்கள் வைத்தனர். உற்றார் உறவினர்கள் முன்னிலையில் கணவருக்கு 3-வது திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு வந்தவர்களுக்கு விருந்து வைத்து அசத்தினர்.

    கணவரின் சந்தோஷத்திற்காக 2 மனைவிகள் சேர்ந்து 3-வது திருமணம் செய்து வைத்த வாழ்த்து பேனர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஆந்திர மாநிலம் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது.
    • அமராவதி கட்டுமான பணிகளுக்கு விரைந்து நடவடிக்க நிதி பங்களிப்பை கேட்க வேண்டும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் என். டி. ஆர் மாவட்டம் விஜயவாடாவில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடந்தது.

    பாராளுமன்ற சபாநாயகர் தேர்தல் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா என்னிடம் போனில் பேசினார். நான் தெலுங்கு தேசம் கட்சிக்கு சபாநாயகர் பதவி தேவையில்லை. அரசுக்கு நிதி மட்டுமே வேண்டும் என்று கூறினேன்.

    ஆந்திர மாநிலம் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல உதவி வேண்டுமென கேட்டேன். ஆந்திர மக்கள் கூட்டணியை நம்பி ஆட்சியை கொடுத்ததாக அவரிடம் தெரிவித்தேன். மேலும் பதவிகள் கேட்டால் மாநில நலன்கள் பாதிக்கப்படும். மாநில நலன்களே நமக்கு முக்கியம்.


    ஒவ்வொரு எம்.பி.க்கும் 3 துறைகளை ஒதுக்குகிறேன். அந்தந்த துறைகளில் உள்ள நிதி மற்றும் திட்டங்களை மாநிலத்திற்கு கொண்டுவர வேண்டும். எம்.பி.க்கள் சம்பந்தப்பட்ட மத்திய மந்திரிகளுடன் பேசி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    தெலுங்கு தேசம் கட்சிக்கு 16 எம்.பி.க்கள் பலம் இருப்பதால் மாநிலத்திற்கு கூடுதல் நிதி கிடைக்க முயற்சி எடுக்க வேண்டும். போலாவரம், அமராவதி கட்டுமான பணிகளுக்கு விரைந்து நடவடிக்க நிதி பங்களிப்பை கேட்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பாராளுமன்ற சபாநாயகர் பதவியை சந்திரபாபு நாயுடு கேட்டு அடம்பிடிப்பதாக தகவல் வந்த நிலையில் சந்திரபாபு நாயுடு தற்போது பதவியை விரும்பவில்லை எனக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வெற்றி, தோல்விகளை கணித்து வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக பல கோடி ரூபாய் பந்தயம் கட்டினர்.
    • தேர்தலில் பவன் கல்யாண் வெற்றி பெற்று துணை முதல் மந்திரியாக பொறுப்பேற்றுள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் பவன் கல்யாண் பிதாபுரம் தொகுதியில் போட்டியிட்டார்.

    அவரது வெற்றி, தோல்விகளை கணித்து வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக பல கோடி ரூபாய் பந்தயம் கட்டினர்.

    இது ஒருபுறம் இருக்க பிதாபுரம் தொகுதியின் ஒய். எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பிரமுகர் முத்ரகடா பத்மநாபம் என்பவர் தேர்தலில் பவன் கல்யாண் வெற்றி பெற்றால் என்னுடைய பெயரை மாற்றிக் கொள்வேன் என சவால் விட்டார்.

    தேர்தலில் பவன் கல்யாண் வெற்றி பெற்று துணை முதல் மந்திரியாக பொறுப்பேற்றுள்ளார். இதனால் முத்தரகடா பத்மநாபம் தன்னுடைய பெயரை முத்ர கடா பத்மநாப ரெட்டி என மாற்றிக் கொண்டார். இந்த பெயரை அரசிதழ் மூலமாக மாற்றியதை அவர் உறுதி செய்தார்.

    இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பாக பேசப்பட்டது.

    • சந்திரபாபு நாயுடு தனது மனைவி புவனேஸ்வரியுடன் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
    • சந்திரபாபு நாயுடு மீது வழக்குகள் உள்ளதால் அவர் வெளிநாடு செல்ல ஆந்திர மாநில ஐடி அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் கடந்த 13-ந் தேதி சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது.

    இந்த நிலையில் முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு தனது மனைவி புவனேஸ்வரியுடன் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

    அங்கு அவர் மருத்துவ சிகிச்சை செய்து கொண்டு சில நாட்கள் ஓய்வெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    முன்னதாக சந்திரபாபு நாயுடு மீது வழக்குகள் உள்ளதால் அவர் வெளிநாடு செல்ல ஆந்திர மாநில ஐடி அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்ட பிறகு சந்திரபாபு நாயுடு வெளிநாடு செல்ல அனுமதித்தனர்.

    • 2-ம் நூற்றாண்டுகளில் இது போன்ற தவளை இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
    • தவளைகள் இலங்கையில் மட்டுமே காணப்படுகின்றன.

    ஆந்திர மாநிலம், பலமனேறு அருகே உள்ள கவுண்டன்யா வனப்பகுதியை ஒட்டி கவுனிதிம்மேபள்ளி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள குளத்தில் இந்திய புவியியல் ஆய்வு மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அறிய வகையை சேர்ந்த முதுகு தங்கம் போல் மின்னும் தவளையை கண்டு பிடித்தனர்.

    2-ம் நூற்றாண்டுகளில் இது போன்ற தவளை இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இதுபோன்ற தவளைகள் இலங்கையில் மட்டுமே காணப்படுகின்றன. இந்த தவளையின் முதுகு தங்க நிறத்திலும் உடல் மேல் பகுதி கருமையாகவும் உள்ளது. இதனுடைய அறிவியல் பெயர் ஹைரா கிராசிலிஸ் என்பதாகும்.

    இந்திய துணை கண்டத்தில் இதுவரை 19 வகையான தங்க முதுகு தவளைகள் கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • இருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மூன்று வாலிபர்கள் பைக்கில் ஒன்றாக சென்றனர். அவர்கள் வைசாக் - என்ஏடி மேம்பாலத்தில் பைக்கில் அதிவேகமாக சென்றுள்ளனர். அப்போது மேம்பாலத்தின் மேலே வளைவில் திரும்பிய போது டிவைடரில் பைக் மோதி மூன்று வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டு மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்தனர்.

    கீழே விழுந்த வாலிபர்களை அங்குள்ள பொதுமக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் இருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இவர்கள் பைக் ஓட்டி செல்லும் காட்சிகள் அங்கே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் பார்ப்போரின் மனதை பதற வைப்பதாக உள்ளது.

    விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடேயே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவர் மட்டுமே பைக்கில் பயணிக்க வேண்டும் என்று போக்குவரத்து விதி இருக்கும் பட்சத்திலும், போலீசாரும் இதுகுறித்து எச்சரிக்கை விடுக்கும் நிலையிலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர் கதையாகிறது.



    • வாக்குப்பதிவு அன்று வாக்களித்துவிட்டு வரும் நபர்களுக்கு தனது கடையில் இலவசமாக முடி வெட்டுவேன்.
    • சலூன் கடைக்காரரின் இந்த வினோத அறிவிப்பு ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் வருகிற 13-ந் தேதி பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடக்கிறது.

    இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் விசாகப்பட்டினத்தை சேர்ந்த சலூன் கடை உரிமையாளர் ஒருவர் ஓட்டு போடுபவர்களுக்கு இலவசமாக முடி வெட்டப்படும் என அறிவித்துள்ளார்.

    விசாகப்பட்டினம் நகரில் உள்ள ஆர்.கே. சலூன் உரிமையாளர் ராதாகிருஷ்ணன். வாக்குப்பதிவு அன்று வாக்களித்துவிட்டு வரும் நபர்களுக்கு தனது கடையில் இலவசமாக முடி வெட்டுவேன்.

    பொதுமக்கள் ஓட்டு போட்டதும் எனது கடைக்கு வந்து இலவசமாக முடி வெட்டிக் கொள்ளலாம். மேலும் விசாகப்பட்டினத்தில் முத்தியாலம்மா கோவில் அருகிலுயும் எனக்கு மற்றொரு கடை உள்ளது. அங்கு சென்று பொது மக்கள் இலவசமாக முடி வெட்டிக் கொள்ளலாம்.

    இந்த சலுகையை பெற வாக்கு அளித்ததற்கான ஆதாரத்தை காண்பிக்க வேண்டும். பொதுமக்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

    சலூன் கடைக்காரரின் இந்த வினோத அறிவிப்பு ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×