search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamukkam Maidan"

    • செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கிய புத்தகத் திருவிழா வரும் செப்டம்பர் 16 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
    • இந்த விவகாரம் சர்ச்சையானதால் நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் பட்டியலில் இருந்து ராமரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

    மதுரையில் தமுக்கம் மைதானத்தில் வைத்து தமிழக அரசு சார்பில் கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கிய புத்தகத் திருவிழா வரும் செப்டம்பர் 16 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. புத்தகக் கண்காட்சியில் பார்வையாளர்களை ஈர்க்க பிரபலங்களும் மேடைப் பேச்சாளர்களும் அழைக்கப்படுவது வழக்கம்.

    அந்த வகையில் மதுரையில் தற்போது நடக்கும் புத்தகத் திருவிழாவில் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ், மதுரை எம்பி சு. வெங்கடேசன், பேச்சாளர்கள் ஞானசம்பந்தன், ஐ லியோனி, பர்வீன் சுல்தானா உள்ளிட்டோர் அழைக்கப்பட்டனர். அவர்களுடன் தொலைக்காட்சி நகைச்சுவை நடிகர் ராமர் அழைக்கப்பட்டிருந்தார்.

    ராமர் மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர். நகைச்சுவை என்ற தனித்திறமையால் அவரை அழைத்தோம், அவருக்கென்று தனி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படவில்லை, பர்வீன் சுல்தானா பேசிய பிறகு சிறிது நேரம் அவர் பேசுவார் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் வாசகர்களுக்கான புத்தகக் கண்காட்சியில் புத்தகம் சார்ந்த எழுத்து சார்ந்த நபர்களை அழைக்காமல் தொலைக்காட்சி பிரபலங்களை அழைப்பதற்குப் பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தது.

    இந்நிலையில் இந்த விவகாரம் சர்ச்சையானதால் நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் பட்டியலில் இருந்து ராமரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் புகைப்படம் இடம்பெற்ற விளம்பரங்கள் மற்றும் போஸ்டர்கள் காகிதம் கொண்டு மறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நிகழ்ச்சியில் ராமர் பங்கேற்கவில்லை மாட்டார் என்று கூறப்படுகிறது. 

    ×