search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Under Review"

    பாகிஸ்தானுக்கு வழங்கப்படக்கூடிய பாதுகாப்பு நிதி அடுத்த ஆண்டு முதல் மிக குறைவான தொகைதான் வழங்கப்படும் என்று அமெரிக்க நாடாளுமன்ற வெளியுறவு விவகாரங்கள் குழுவின் முன் வெளியுறவு மந்திரி தெரிவித்துள்ளார். #MikePompeo
    வாஷிங்டன்:

    பாகிஸ்தானில் செயல்பட்டு வருகிற பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக அந்த நாட்டு அரசு பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. அது மட்டுமின்றி தலீபான், ஹக்கானி வலைச்சமூக அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு பாகிஸ்தான் சொர்க்கபுரியாக திகழ்கிறது என்றும் கூறுகிறது.

    இதன் காரணமாக அந்த நாட்டுக்கு வழங்கப்படக்கூடிய பாதுகாப்பு நிதி உதவி 1.15 பில்லியன் டாலரை (சுமார் ரூ.7 ஆயிரத்து 820 கோடி) வழங்காமல் கடந்த ஜனவரியில் அமெரிக்கா நிறுத்தி வைத்தது.

    புத்தாண்டில் ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், வரும் காலத்தில் பாகிஸ்தானுக்கான நிதி உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படும் என்று எச்சரித்தார்.

    இந்த நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற வெளியுறவு விவகாரங்கள் குழுவின் முன் வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ நேற்று பேசினார். அப்போது அவர் பாகிஸ்தான், அமெரிக்க தூதரக அதிகாரிகளை மோசமாக நடத்துவதாக குற்றம் சாட்டினார்.

    மேலும் டானா ரோஹ்ராபச்சர் என்ற எம்.பி.யின் கேள்விக்கு பதில் அளித்த மைக் பாம்பியோ, “2018-ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு குறைவான நிதியைத்தான் விடுவித்து உள்ளோம். மீதி தொகையை வழங்குவது பரிசீலனையில் உள்ளது. அடுத்த ஆண்டு மிக குறைவான தொகைதான் வழங்கப்படும் என்று யூகிக்கிறேன்” என்று கூறினார்.  #MikePompeo
    ×