உள்ளூர் செய்திகள்

விடுமுறை நாளில் திருச்செந்தூரில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

Published On 2024-08-18 06:51 GMT   |   Update On 2024-08-18 06:51 GMT
  • பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
  • தரிசனம் செய்ய சுமார் 4 மணி நேரம் ஆகியது.

திருச்செந்தூர்:

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

இன்று ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், விடுமுறை தினத்தையொட்டியும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

விடுமுறை நாட்களில் ஏராளமான கூட்டம் அலைமோதுவது வழக்கம். அந்த வகையில் இன்று வழக்கமான ஞாயிற்றுக்கிழமை வரும் கூட்டத்தை விட சற்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதனால் தரிசனம் செய்ய சுமார் 4 மணி நேரம் ஆகியது.

வழக்கம் போல் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப் பட்டது. 4.30 விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.

பக்தர்கள் வந்த வாகனங்களை நிறுத்த போக்குவரத்து போலிசார் திருச்செந்தூர்-நாகர்கோவில் சாலை ஓரத்திலும், கோவில் அருகில் காவல் நிலையம் அருகே உள்ள தனியார் இடத்திலும் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags:    

Similar News