உள்ளூர் செய்திகள்

சூலூரில் கார் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து- போலீஸ் இன்ஸ்பெக்டர் மகன் பலி

Published On 2022-12-26 08:15 GMT   |   Update On 2022-12-26 08:15 GMT
  • அதிகாலை 4.30 மணிக்கு கார் சூலூர் பகுதியில் வந்தபோது ஹரியின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
  • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயத்துடன் இருந்த ஹரியை மீட்டு சூலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

கோவை:

கோவை காந்திபுரத்தை சேர்ந்தவர் மருதாசலம்.

இவர் திருப்பூர் மாவட்டம் குண்டடத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மகன் கார்த்திக் ஸ்ரீபதி(வயது18). இவர் கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவரது நண்பர் ஹரி(18). இவர் பெங்களூரில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். தற்போது விடுமுறைக்கு கோவைக்கு வந்துள்ளார்.

நேற்று கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாடுவதற்காக கார்த்திக் ஸ்ரீபதி தனது நண்பர் ஹரியுடன் காரில் செங்கம்பள்ளிக்கு சென்றார். அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாடி முடித்து விட்டு, இன்று அதிகாலையில் கோவை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

காரை ஹரி ஓட்டினார். கார்த்திக் ஸ்ரீபதி அருகில் அமர்ந்து இருந்தார்.

அதிகாலை 4.30 மணிக்கு கார் சூலூர் பகுதியில் வந்த போது ஹரியின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் இருந்த கார்த்திக் ஸ்ரீபதி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஹரி படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து சூலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயத்துடன் இருந்த ஹரியை மீட்டு சூலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இறந்த கார்த்திக் ஸ்ரீபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News