இந்தியா (National)

ஆக்ரா மசூதியை ஆய்வு செய்வது தொடர்பாக தொல்லியல் துறை பதிலளிக்க வேண்டும்- அலகாபாத் உயர் நீதிமன்றம்

Published On 2024-07-06 04:04 GMT   |   Update On 2024-07-06 04:04 GMT
  • உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் ஷாஹி ஈத்கா மசூதி அமைந்துள்ளது.
  • இந்த வழக்கை நீதிபதி மயங்க் குமார் ஜெயின் விசாரித்தார்.

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் கிருஷ்ணர் கோவில் உள்ளது. அதையொட்டி ஷாஹி ஈத்கா மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதி கடந்த 1669-70-ம் ஆண்டில் அப்போதைய முகலாய மன்னர் ஓளரங்க சீப் உத்தரவின்படி கிருஷ்ண ஜென்மபூமி பகுதியில் கட்டப்பட்டது என்று புகார் எழுந்தது.

இதுகுறித்து மதுரா கோர்ட்டில் இந்து அமைப்பினர் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பான வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், கிருஷ்ண ஜென்மபூமியில் இருந்த தாகூர் கேசவ் தேவ் சிலையின் எச்சங்கள் ஆக்ராவில் உள்ள ஜமா மசூதியில் புதைக்கப்பட்டதாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், "1670 ஆம் ஆண்டு மதுராவில் உள்ள கேசவ் தேவ் கோவில் இடித்து விட்டு ஆக்ராவில் உள்ள ஜமா மசூதியின் கீழ் சிலையின் எச்சங்கள் புதைக்கப்பட்டுள்ளது. ஆதலால் மசூதியை ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வை மேற்பார்வையிட ஆணையராக வக்கீல் ஒருவரை இந்திய தொல்லியல் துறை நியமிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த வழக்கை நீதிபதி மயங்க் குமார் ஜெயின் விசாரித்தார். அப்போது இந்த மனு தொடர்பாக இந்திய தொல்லியல் துறை பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Tags:    

Similar News