நாடு முழுவதும் ஜூன் மாதம் வரை வெயில் அதிகமாக இருக்கும்- இந்திய வானிலை ஆய்வு மையம்
- ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் இந்தியாவில வழக்கமாக 4 முதல் 7 வெப்ப அலை நாட்கள் தான் இருக்கும்.
- நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஏப்ரல் மாதம் வழக்கமான அதிகபட்ச வெப்பநிலையை விட அதிக வெப்பநிலை காணப்படும்.
புதுடெல்லி:
நாட்டின் பல பகுதிகளில் கோடை வெயில் வாட்டி எடுக்கிறது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சில இடங்களில் வெப்பநிலை 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது.இது மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், நாடு முழுவதும் ஜூன் மாதம் வரை வெயில் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வுத்துறை தலைவர் மிருத்யுஞ்சய் மொகாபத்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கமான அதிகபட்ச வெப்ப நிலையை விட அதிக வெப்பநிலை காணப்படும். இதைப்போல பெரும்பாலான பிராந்தியங்களில் குறைந்தபட்ச வெப்பநிலையும் இயல்பை விட அதிகமாக இருக்கும்.
அதேநேரம் மேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் சில பகுதிகளில் வழக்கமான வெப்பநிலை இருக்கும்.
ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வடக்கு மற்றும் கிழக்கு இந்தியா, மத்திய இந்தியா மற்றும் வடமேற்கு சமவெளிப்பகுதிகளில் வழக்கத்தை விட 2 முதல் 4 நாட்கள் வரை கூடுதலான வெப்ப அலை நாட்கள் இருக்கும்.
ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் இந்தியாவில வழக்கமாக 4 முதல் 7 வெப்ப அலை நாட்கள் தான் இருக்கும். ஆனால் இந்த முறை அதிக நாட்களை எதிர்பார்க்கலாம்.
ராஜஸ்தான், குஜராத், அரியானா, பஞ்சாப், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா, சத்தீஸ்கர், தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களும், தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களின் வட பகுதிகளும் இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்களை கொண்டிருக்கும்.
இந்த காலகட்டத்தில் கிழக்கு உத்தரபிரதேசம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா போன்ற மாநிலங்களில் 10 முதல் 11 வரை வெப்ப அலை நாட்கள் இருக்கும்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஏப்ரல் மாதம் வழக்கமான அதிகபட்ச வெப்பநிலையை விட அதிக வெப்பநிலை காணப்படும். எனினும் தெற்கு மற்றும் வடமேற்கு பிராந்தியங்களுக்கு உட்பட்ட சில பகுதிகளில் சாதாரண வெப்பநிலை இருக்கலாம்.
வடமேற்கு மற்றும் வடகிழக்கு பிராந்தியங்களை சேர்ந்த ஒருசில இடங்களை தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவே இருக்கும்.
இவ்வாறு மிருத்யுஞ்சய் மொகாபத்ரா கூறினார்.