இந்தியா (National)

தலித் மாணவனுக்கு ஐஐடியில் சீட் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Published On 2024-09-30 13:39 GMT   |   Update On 2024-09-30 13:39 GMT
  • 18 வயதான அதுல் குமாருக்கு தான்பாத் ஐஐடியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிடெக் படிப்பில் படிக்க இடம் கிடைத்தது.
  • வறுமையால் குறிப்பிட்ட கால அவகாசத்தில் அவரது பெற்றோரால் கல்விக் கட்டணம் செலுத்த முடியவில்லை

தான்பாத் ஐஐடி-யில் படிக்க இடம் கிடைத்து, வறுமை காரணமாக கல்விக் கட்டணம் செலுத்தாததால் சேர்க்கை மறுக்கப்பட்ட பட்டியலின மாணவனுக்கு சீட் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வருமானம் பெறும் குடும்பத்தைச் சேர்ந்த 18 வயதான அதுல் குமாருக்கு தான்பாத் ஐஐடியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிடெக் படிப்பில் படிக்க இடம் கிடைத்தது. ஆனால் வறுமை காரணமாக கல்விக் கட்டணமாக கட்டவேண்டிய ரூ.17,500 பணத்தை ஜூன் 24ஆம் தேதிக்குள் கட்ட அவரது பெற்றோர் தவறியதால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம், எஸ்.சி. எஸ்.டி ஆணையம் என எங்கும் தீர்வு கிடைக்காததால் உச்ச நீதிமன்றத்தை அம்மாணவனின் தந்தை நாடியிருந்தார்.

இந்த வழக்கில், இவ்வளவு திறமையான மாணவன் படிப்பை கைவிடுவதை நாங்கள் அனுமதிக்க முடியாது என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு தெரிவித்தது.

அதுல் குமாரை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிடெக் படிப்பில் சேர்க்குமாறு தன்பாத் ஐஐடியிடம் உச்ச நீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News