ஐ.பி.எல்.(IPL)

CSK அணியில் அவரை தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும்- ஹர்பஜன்சிங்

Published On 2025-04-01 10:32 IST   |   Update On 2025-04-01 10:32:00 IST
  • திரிபாதிக்கு அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.
  • பேட்டிங் செய்யும் போது நீங்கள் அதிகமாக உடலைக் குலுக்கினால் எப்போது பந்தைப் பார்ப்பீர்கள்.

சென்னை:

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 3 தோல்வி பெற்றுள்ளது. மும்பையை வீழ்த்தியது. பெங்களூரு, ராஜஸ்தான் ஆகிய அணிகளிடம் தோற்றது.

சென்னை அணியில் ராகுல் திரிபாதி , ரச்சின் ரவீந்திரா தொடக்க வீரர்களாக களம் இறங்கி வருகிறார்கள். இதில் ரவீந்திரா சிறப்பாக விளையாடினார். ஆனால் திரிபாதி போதுமான ரன்களை குவிக்கவில்லை.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வீரராக நியூசிலாந்தை சேர்ந்த கான்வேயை களம் இறக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

சென்னை அணி தொடர்ச்சியாக 2 போட்டிகளில் தோல்வியடைந்து உள்ளது. அவர்கள் அதிக தவறுகளைச் செய்கிறார்கள். ராகுல் திரிபாதியை தொடக்க வீரராக களம் இறக்குகிறார்கள்.

அவர் தனது உடலை அதிகமாக குலுக்குகிறார். ஆனால் அதற்கு தகுந்த ரன்கள் அடிக்கவில்லை. இப்படி சொல்வதற்கு மன்னித்து கொள்ளுங்கள். திரிபாதி மிகவும் கடினமாக உழைக்கக்கூடிய வீரர். ஆனால் அவர் ஆடும் லெவனில் இருக்க கூடாது என்பதில் நான் தெளிவாக சொல்கிறேன். பேட்டிங் செய்யும் போது நீங்கள் அதிகமாக உடலைக் குலுக்கினால் எப்போது பந்தைப் பார்ப்பீர்கள்? அவரிடம் இருந்து ரன்கள் வரவில்லை. அதற்கான நோக்கமும் தற்போது அவரிடம் தெரியவில்லை.

ருதுராஜ் கெய்க்வாட், சரியான தொடக்க வீரர் ஆவார். அவர் திரிபாதிக்காக 3-வது இடத்தில் களம் இறங்குகிறார். எப்போதும் தொடக்க ஜோடி சென்னை சூப்பர் கிங்சுக்கு ஒரு பெரிய பலமாக இருந்து வருகிறது. மேத்யூ ஹைடன், டுவைன் ஸ்மித், மைக் ஹசி, பிரண்டன் மெக்கல்லம், கான்வே ஆகியோர் தொடக்க வீரர்களாக இருந்தனர்.

தற்போது சென்னை அணியில் கான்வே இருக்கிறார். ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அணியைத் தேர்ந்தெடுக்கும் போது அவர்கள் இதுவரை எதுவும் தெரியாமல் இருந்தனர். திரிபாதிக்கு அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்று நான் நினைக்க வில்லை. ஆனால் கான்வே நிச்சயமாக இடம் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News