என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பவன் கல்யாண் படம் வெளியான தியேட்டரில் திரைக்கிழிப்பு
    X

    பவன் கல்யாண் படம் வெளியான தியேட்டரில் திரைக்கிழிப்பு

    • பவன் கல்யாண் நடிபில் வெளியான டோலி பிரேமா படம் நேற்று மறு வெளியீடு செய்யப்பட்டது.
    • அப்போது படம் பார்க்க வந்தவர்கள் கூச்சலிட்டு, திரையை கிழித்தும் சேர்களை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர்.

    ஆந்திராவின் பிரபல நடிகர் பவன் கல்யாண் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு டோலி பிரேமா என்ற திரைப்படத்தில் நடித்தார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான பவன் கல்யாண் ஜனசேனா என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.

    ஆளும் கட்சியான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியையும், முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் உள்ள குறைகளை சுற்றி காட்டி வராகி பாதயாத்திரை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நடிகர் பவன் கல்யாண் நடித்த டோலி பிரேமா திரைப்படம் ஆந்திராவில் உள்ள திரையரங்குகளில் நேற்று மறு வெளியீடு செய்யப்பட்டது.

    நடிகர் பவன் கல்யாண் ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் டோலி பிரேமா படத்தை கண்டு ரசித்தனர். நேற்று இரவு விஜயவாடாவில் உள்ள திரையரங்கில் டோலி பிரேமா திரையிடப்பட்டது. அப்போது படம் பார்க்க வந்தவர்கள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர். திரையரங்கின் திரையை கிழித்தும் சேர்களை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர்.

    இதனை தடுக்க வந்த திரையரங்க ஊழியர்களையும் சரமாரியாக தாக்கினர். இது குறித்து ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் ரகளையில் ஈடுபட்ட நபர்கள் தப்பிச் சென்றனர். இதுகுறித்து திரையரங்க நிர்வாகிகள் கூறுகையில் நடிகர் பவன் கல்யாண் ரசிகர்கள் இந்த செயலில் ஈடுபடவில்லை. டோலி பிரேமா திரைப்படத்திற்கு பொதுமக்களிடையே அமோக வரவேற்பு உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் சதி செய்து ரகளையில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

    Next Story
    ×