search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    திருவனந்தபுரம் வெங்கானூர் பவுர்ணமிக்காவு தேவி கோவில்
    X

    திருவனந்தபுரம் வெங்கானூர் பவுர்ணமிக்காவு தேவி கோவில்

    • இந்த கோவில் பழமையான தலவரலாற்றை கொண்டுள்ளது.
    • 65அடி உயரத்தில் பவுர்ணமி தேவியின் பஞ்சலோக சிலை உள்ளது.

    தலவரலாறு

    திருவனந்தபுரம் வெங்கானூரில், சாவடிநடை பவுர்ணமிக்காவு தேவி கோவில் உள்ளது. இந்த கோவில் பழமையான தலவரலாற்றை கொண்டுள்ளது. முன்காலத்தில், கேரளாவில் திருவிதாங்கூர் பிரதேசத்தை விழிஞ்ஞத்தை மையமாக கொண்டு ஆய்ராஜவம்சத்தினர் ஆண்டு வந்தனர். இவர்களின் போர் தேவதையாக பவுர்ணமிக்காவு தேவி இருந்து வந்தார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஆய் ராஜவம்சத்தின் வெற்றிக்கு பவுர்ணமிக்காவு தேவிதான் காரணம் என்பதை உணர்ந்த சோழ மன்னர்கள், தேவியின் சிலை மற்றும் ஆபரணங்களை அபகரிக்க திட்டமிட்டனர்.

    இதை அறிந்த ஆய்மன்னர்கள் விழிஞ்ஞம் கோவிலில் இருந்து, தேவியின் சிலையை எடுத்து அருகில் உள்ள அடர்ந்த காட்டு பகுதியில் உள்ள ஒரு மரச்சுவட்டில் நிறுவினர். சிலையை வனப்பகுதிக்கு மாற்றியதால், ஆய் மன்னர்கள் வியாபாரம், போர் ஆகியவற்றிற்கு செல்வதற்கு முன்பாக, யாகங்கள், பூஜைகள் செய்ய இந்த புதிய இடத்திற்கு வந்து சென்றனர்.

    பிற்காலத்தில் வந்த ஆய்ராஜவம்ச மன்னர்கள் பவுர்ணமி காவு தேவியை வழிபடவும், முக்கியத்துவம் அளிக்கவும் தவறிவிட்டனர். இவர்களின் செயல் அம்மனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

    அம்மனின் கோபம்

    அம்மனின் கோபத்தால் ஆய் ராஜவம்சத்தில் ஓயாத துன்பங்கள், எதிர்பாராத விபத்துகள், தீராத வறுமை ஏற்பட்டது. ஆய் ராஜவம்சம் நாளடைவில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது. இந்த நிலையில் இந்த பகுதியில் புதிய ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய ராஜ வம்சத்தினர் அம்மனை ஆராதிக்க ஏராளமான பூசாரிகளை நியமித்தனர். அவர்களின் ஆராதனை சடங்குகளாலும் அம்மன் திருப்தி அடையவில்லை. நாளடைவில் ஆய் ராஜவம்சத்தினர் பவுர்ணமிகாவு ேதவியை வணங்கி வழிபட்ட இடங்கள் மற்றும் அதை சார்ந்த பகுதிகள் பல்வேறு குடும்பங்கள், தனிமனிதர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. ஆனாலும் அம்மனின் கோபம் தணியாத காரணத்தால் அந்த பகுதிகளிலும், குடும்பங்களிலும் பலவித பிரச்சினைகள் ஏற்பட்டன.

    இந்த நிலையில் அம்மனின் மகத்துவத்தை அறிந்த வேத மகா பண்டிதர்கள், அம்மனை சாந்தமாக்கவும், அவர் திருப்தி அடையவும் வேண்டி பூஜைகள் வழிபாடுகளை நடத்த தொடங்கினர். இதன் பலனாக பவுர்ணமிக்காவு தேவி அவர்களுடன் இணக்கமானார். அதைத்தொடர்ந்து தேவ பிரசன்னம் மூலம் அம்மன் கொடுத்த உத்தரவின் பேரில், கோவில் புனரமைக்கப்பட்டு பிரதிஷ்டை நடைபெற்றது. பிரம்மஸ்ரீ பூஞ்சார் மித்ரன் நம்பூதிரிப்பாடு படை காளியம்மாவை மறு பிரதிஷ்டை செய்தார். கோவிலில் உள்ள பிரதான பிரதிஷ்டையான படை காளியம்மனை அனைவரும் வணங்கி செல்கின்றனர்.

    இங்கு 51 அக்சர தேவதைகளின் சிலைகள், மிகப்பெரிய பஞ்சமுக கணபதி சிலை, 55 அடி உயரத்தில் சிவனின் சிலை, ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய நாகராஜா சிலை, 65அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்ட பவுர்ணமி தேவியின் பஞ்சலோக சிலை போன்றவை அமைந்துள்ளன.

    கோவிலுக்கு செல்லும் வழிகள்

    இந்த கோவில் திருவனந்தபுரத்தில் இருந்து திருவல்லம், வாழ முட்டம் வழி வெங்கானூர் சாவடி நடை உச்ச கடை செல்லும் வழியில் உள்ளது. அதேபோல் திருவனந்தபுரம், பள்ளிச்சல் வழியாக விழிஞ்ஞம் செல்லும் வழியில் பெரிங்கமலை சாவடிநடை சாலையில் இந்த கோவில் உள்ளது. நெய்யாற்றின்கரை, பாலராமபுரம் வழியாக வரும்போது உச்சகடை - சாவடிநடை சாலையில் இந்த கோவில் உள்ளது. பிரபஞ்சயாகத்துக்கான ஏற்பாடுகளை பவுர்ணமிக்காவு மடாதிபதி சின்கா காயத்ரி தலைமையில், கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    Next Story
    ×