என் மலர்
வழிபாடு

கொடுமுடி பகுதியில் ஷவரில் அமைத்து புனித நீராடிய பக்தர்கள்.
காவிரி ஆற்றில் குளிக்க தடை: கொடுமுடியில் ஷவரில் புனித நீராடிய பக்தர்கள்
- இன்று அதிகாலை முதல் பக்தர்கள் கொடுமுடியில் குவிய தொடங்கினர்.
- பலர் கொடுமுடிக்கு முளைப்பாரி எடுத்து வந்தனர்.
கொடுமுடியில் மிகவும் பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர், வீரநாராயணப் பெருமாள் கோவில் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி 18 திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இதையொட்டி ஆடி 18 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து காவிரியில் புனித நீராடியும், முளைப்பாரி ஆற்றில் விட்டும் காவிரி தாயை வணங்கியும், மகுடேசுவரரை தாசித்தும் செல்வது வழக்கம்.
இதற்காக இன்று அதிகாலை முதல் பக்தர்கள் கொடுமுடியில் குவிய தொடங்கினர். இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதையடுத்து கொடுமுடி காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் காவிரி ஆற்றில் துணி துவைக்க, நீராட, கால்நடைகள் குளிப்பாட்ட தடை விதிக்கப்பட்டது.
இதனால் ஆற்றங்கரை பகுதி முழுவதும் தடை ஏற்படுத்தி போலீஸ், தீயணைப்பு துறை வீரர்களை கொண்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். இதனால் பக்தர்கள் யாரும் எங்கும் சென்று காவிரி ஆற்றில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
மேலும் பலர் கொடுமுடிக்கு முளைப்பாரி எடுத்து வந்தனர். தடை விதித்துள்ளதால் ஆற்றங்கரை ஓரத்தில் செல்லும் புகளூரான் வாய்க்காலில் குளித்தும், முளைப்பாரி விட்டும் சென்றனர்.
இந்த நிலையில் வெளியூரில் இருந்து வந்த பக்தர்கள் குளிப்பதற்கு வசதியாக கொடுமுடி பேரூராட்சி சார்பாக கோவில் முன்பு ஷவர் அமைத்து சிறப்பு ஏற்பாடு செய்து இருந்தனர். இதையடுத்து பக்தர்கள் அந்த ஷவர் மூலம் புனித நீராடி மகுடேஸ்வரரை வழிபட்டனர்.






