என் மலர்tooltip icon

    ஈரோடு

    • பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நள்ளிரவில் பரபரப்பான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.
    • கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம், முக்கிய கடை வீதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

    ஈரோடு:

    சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறையினர் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது சோதனையில் ரூ.1000 கோடி வரை ஊழல் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின.

    இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் ஈரோடு மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நள்ளிரவில் பரபரப்பான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.

    அந்தப் போஸ்டரில் ஆயிரம் ரூபாய் கொடுப்பதுபோல் கொடுத்து ஆயிரம் கோடி அமுக்கிய அந்த தியாகி யார்? பாட்டிலுக்கு 10 ரூபாய், விற்பனையில் ஆயிரம் கோடி ஊழல், உரிமம் பெறாத பார் மூலம் 40 ஆயிரம் கோடி ஊழல் போன்ற வாசகத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.

    கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம், முக்கிய கடை வீதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதேபோல் பவானி, பெருந்துறை, கவுந்தப்பாடி, சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டு இருந்தது. இதனைப் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

    • சேலத்தில் பிரபல ரவுடியாக செல்லதுரை என்பவர் இருந்துள்ளார்.
    • செல்ல துரையை கொலை செய்ய திட்டமிட்ட ஜான் வெளியூரில் இருந்து ரவுடிகளை அழைத்து வந்து கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் செல்லதுரையை‌ கொலை செய்துள்ளார்.

    ஈரோடு:

    சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் ஜான் (வயது 30). இவர் இவரது மனைவி சரண்யாவுடன் திருப்பூரில் வசித்து வந்தார். ஜான் மீது கொலை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் அண்மையில் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த ஜான், தினமும் காலை சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்துள்ளார்.

    அதேபோல நேற்று தனது மனைவி சரண்யாவுடன் காரில் சேலத்திற்கு வந்து கையெழுத்து போட்டுவிட்டு மீண்டும் திருப்பூர் சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து 2 கார்களில் 10 பேர் கொண்ட கும்பல் சென்றுள்ளது. ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே நெடுஞ்சாலையில் மனைவியுடன் சென்று கொண்டிருந்த ரவுடி ஜான் கார் மீது பின்னால் வந்த கார் மோதியுள்ளது.

    அப்போது விபத்து ஏற்படுத்திய காரில் இருந்து வெளியேறிய 4 பேர் கும்பல் ஜானை காரில் வைத்தே சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தது. இதனை தடுக்க சென்ற மனைவி சரண்யாவிற்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சித்தோடு போலீசார் அங்கு ரத்த காயத்துடன் ஊர்மக்கள் பிடித்து வைத்திருந்த கார்த்திகேயனை கைது செய்தனர்.

    இதையடுத்து கார்த்திகேயன் அளித்த தகவலின் பேரில் காரை பின்தொடர்ந்து சென்றபோது, கொலையாளிகள் சென்ற கார் நின்றது. பின்னர் காரில் இருந்த சதீஷ், சரவணன் மற்றும் பூபாலன் ஆகியோர் காட்டு பகுதியில் தப்பியோடியுள்ளனர். அப்போது சித்தோடு இன்ஸ்பெக்டர் ரவி தனது கைத்துப்பாக்கி மூலம் வாகனத்தில் மூன்று முறை சுட்டு எச்சரித்துள்ளார்.

    பின்னர் மூவரும் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் காவலர் யோகராஜை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ரவி தற்காப்பிற்காக மூவரின் காலில் சுட்டு பிடித்து பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    கொலை குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சேலத்தில் பிரபல ரவுடியாக செல்லதுரை என்பவர் இருந்துள்ளார். கொலையான ஜானுவும், செல்ல துரையும் இணைந்து கொலை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இந்நிலையில் செல்ல துரையை கொலை செய்ய திட்டமிட்ட ஜான் வெளியூரில் இருந்து ரவுடிகளை அழைத்து வந்து கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் செல்லதுரையை கொலை செய்துள்ளார்.

    இதற்கு பழி தீர்க்க ரவுடி செல்லதுரையின் தம்பி ஜீவகன் முடிவெடுத்துள்ளார். இதற்காக கடந்த 2020ம் ஆண்டு முதல் காத்திருந்த ஜீவகன் நேற்று தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து 2 கார்களில் ரவுடி ஜானின் காரை பின்தொடர்ந்து அவரை வெட்டி கொலை செய்துள்ளார்.

    இதில் கொலை கும்பலை சேர்ந்த கார்த்திகேயன், சதீஷ், பூபாலன், சரவணன் ஆகியோரை போலீசார் சுட்டு பிடித்தனர். இந்நிலையில் இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் சேலத்தில் பதுங்கி இருப்பதாக சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு பதுங்கி இருந்த பார்த்திபன், அழகரசன், பெரியசாமி, சிவகுமார், சேதுவாசன் ஆகிய 5 பேரை பிடித்து சித்தோடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த கொலையின் முக்கிய குற்றவாளியான ஜீவகன் இன்று தனது கூட்டாளி சலீம் என்பவருடன் ஈரோடு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதை தொடர்ந்து அவர்கள் இருவரும் நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைக்கப்பட்டனர். சித்தோடு போலீசார் அவர்களை காவலில் எடுத்த விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    • கொலை செய்யப்பட்ட ஜானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்த ஜான் மீது 2 கொலை வழக்கு உட்பட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது என தெரியவந்தது.

    ஈரோடு:

    சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜான் என்கிற சாணக்கியன். இவரது மனைவி ஆதிரா. ஜான் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவர் பிரபல ரவுடியாக வலம் வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை சேலத்தில் இருந்து ஜான் மற்றும் அவரது மனைவி ஆதிரா திருப்பூர் செல்வதற்காக காரில் புறப்பட்டு சென்றனர்.

    ஈரோடு மாவட்டம் நசியனூர் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாமி கவுண்டம்பாளையம் பிரிவு அருகில் இன்று மதியம் 12.15 மணிக்கு அவர்களது கார் சென்று கொண்டிருந்தது. அவர்களது காரை பின் தொடர்ந்து வந்த மர்மகும்பல் ஜான் சென்ற காரை வழிமறித்து நிறுத்தியது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் மர்மகும்பல் ஜானை சரமாரியாக வெட்டினர். இதை தடுக்க சென்ற அவரது மனைவி ஆதிராவுக்கும் அரிவாள் விட்டு விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஜான் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். பின்னர் அந்த மர்ம கும்பல் மற்றொரு காரில் ஏறி தப்பி சென்றது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆதிராவை மீட்டு நசியனூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட ஜானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் நேரில் சென்று பார்வையிட்டார். பழிக்கு பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்த ஜான் மீது 2 கொலை வழக்கு உட்பட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது என தெரியவந்தது. ஈரோட்டில் ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இதுவரை நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறந்துள்ளன.
    • தெரு நாய்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை, காஞ்சி கோவில் போன்ற பகுதிகளில் கடந்த சில மாதங்க ளாகவே பட்டிக்குள் இருக்கும் ஆடுகளை தெரு நாய்கள் கடித்துக் கொன்று வருவது தொடர் கதையாகி வருகிறது. இதுவரை நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறந்துள்ளன.

    இதையடுத்து நாய்களை கட்டுப்படுத்த கோரியும், உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தொடர்ந்து தெரு நாய்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

    இந்த நிலையில் கவுந்தப் பாடி அருகே கோழிப் பண்ணைக்குள் புகுந்து 100 கோழிகளை தெரு நாய்கள் கொன்றுள்ள சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த குட்டி பாளையத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம்.

    இவர் அதேபகுதியில் சொந்தமாக கோழிப் பண்ணை வைத்து நடத்தி வருகிறார். கோழிப் பண்ணைகளில் ஆயிரக்கணக்கான கோழிகளை வளர்த்து வருகிறார்.

    கோழிப்பண்ணை சுற்றி கம்பி வலைகள் அமைத்து அதில் கோழிகளை வளர்த்து வந்தார்.இந்நி லையில் சோம சுந்தரம் கோழிப் பண்ணைக்குள் தெரு நாய்கள் கூட்டம் திடீரென புகுந்தது.

    இதை தொடர்ந்து அந்த தெரு நாய்கள் அங்குள்ள கம்பி வலைகளை கடித்து உள்ளே புகுந்து 100-க்கும் மேற்பட்ட கோழிகளை கடித்துக் கொன்றுள்ளது. கோழிகள் அலறல் சத்தம் கேட்டு வந்த சோமசுந்தரம் அங்கு 100 கோழிகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக இது குறித்து கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது சோமசுந்தரம் இறந்த கோழிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    இதேபோல் கவுந்தப்பாடி அடுத்த மஜரா பாப்பாங் காட்டூர், பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் செந்தில் குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று அதிகாலை 4 ஆடுகளை தெரு நாய்கள் கடித்து கொன்றுள்ளது. இது தொடர்பாகவும் கவுந்தப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, கடந்த சில நாட்களாகவே எங்கள் பகுதியில் தெரு நாய்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளன. தற்போது கோழிப் பண்ணைக்குள் புகுந்து 100 கோழிகளை கொன்று உள்ளது. இதேப்போல் ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து ஆடுகளையும் கொன்று உள்ளது.

    தொடர்ந்து தெரு நாய்கள் அட்டகாசம் செய்து வருவ தால் எங்களுக்கு ஒரு வித அச்சம் ஏற்பட்டு உள்ளது. இதனால் நாங்கள் வாழ்வா தாரத்தை இழந்து தவித்து வருகிறோம். உடனடியாக மாவட்ட நிர்வாகம் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் இறந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • நீரில் 1048 டி.டி.எஸ். உப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
    • டேங்கர் லாரியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சுள்ளிப்பாளையம் பகுதியில் தனியார் பால் உற்பத்தி நிறுவனம் இயங்கி வருகிறது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் பாலை பதப்படுத்தி பாக்கெ ட்டுகளில் அடைத்தும், ஐஸ்கிரீம், பன்னீர், வெண்ணை, நெய் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி நாடு முழுவதும் சப்ளை செய்யப்படுகிறது.

    இந்நிறுவனத்திற்கு சொந்தமான டேங்கர் லாரியில் தொழிற்சாலையின் கழிவுநீரை ஏற்றி சுள்ளி பாளையம், மெஜஸ்டிக் நகர் பகுதியில் சாலை யோரத்திலும் விவசாய நிலத்திலும் திறந்து விட்டதை அப்பகுதி மக்கள் பார்த்தனர்.

    இதனால் கொதிப்படைந்த அப்பகுதி மக்கள் டேங்கர் லாரியை சிறை பிடித்ததுடன் அவர்களை விசாரித்தனர்.

    அந்த டேங்கர் லாரி டிரைவர், தனியார் பால் நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் உள்ள மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். இதை நம்பாத அப்பகுதி மக்கள் பாத்திரத்தில் தண்ணீரை பிடித்து பார்த்தபோது அது மஞ்சள் கலந்த நிறத்தில் இருந்ததுடன், ரசாயன வாடையும் அடித்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து அப்பகுதி மக்கள், அந்த நீரில் உள்ள உப்புத்தன்மையை பரிசோதிக்கும் டி.டி.எஸ். கருவியை கொண்டு வந்து நீரில் உள்ள உப்பின் அளவை பரிசோதித்தனர். அந்த நீரில் 1048 டி.டி.எஸ். உப்பு இருந்தது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து பெருந்துறை போலீசுக்கு தகவல் அளித்த அப்பகுதி மக்கள் டேங்கர் லாரியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் சுள்ளிபாளையம் மற்றும் மெஜஸ்டிக் நகர் பகுதி மக்கள் சார்பில் போலீசில் அளிக்கப்பட்ட புகாரில் கூறியிருப்பதாவது:-

    அண்மைக்காலமாக இந்த பால் உற்பத்தி நிறுவனத்தில் இருந்து வெளியேறும் புகையால் இப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இந்த ஆலையின் கழிவு நீராலும் லாரியில் கொண்டு வந்து கொட்டும் கழிவு நீராலும் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. இதனை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

    இதைத்தொடர்ந்து டேங்கர் லாரியை ஓட்டி வந்தவர்களிடமும், அந்த நிறுவனத்தின் அதிகாரி யையும் போலீசார் விசாரித்த போது, தனியார் பால் நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் வளர்க்கப்படும் மரக்கன்று களுக்கு தண்ணீர் ஊற்று வதற்காகவே டேங்கர் லாரி தண்ணீரை பயன்படுத்திய தாகவும், இனிமேல் அப்பகுதியில் தண்ணீரை விடுவதில்லை என எழுதிக் கொடுத்ததன் பேரில் அவர்களை எச்சரித்த போலீசார் டேங்கர் லாரியை விடுவித்தனர்.

    இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட நடவடிக்கை என்ன என்பதை அறிந்து கொள்ள பெருந்துறையில் உள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வனஜாவை பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை. நேரில் சென்ற போதிலும் அவரை பார்க்க முடியவில்லை.

    தனியார் பால் உற்பத்தி நிறுவனம் மீது தொடர்ந்து வரும் புகார்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

    • 21 பகுதிகளில் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.
    • வனத்துறை பணியாளர்களுடன், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்த பறவைகள் ஆர்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    ஈரோடு:

    நீர் நிலைகளில் வாழும் பறவைகளின் எண்ணிக்கை மற்றும் பரவல் குறித்த தரவுகளை சேகரித்து அவற்றை பாதுகாக்கும் முயற்சிகளை முன்னெ டுக்கும் விதமாக ஈர நில பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான ஈரநில பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று நடைபெற்றது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஈரோடு வனக்கோட்ட பகுதிகளில் இன்று காலை 6.30 மணி முதல் முற்பகல் 11 மணி வரை நீர் நிலைகளில் உள்ள பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

    இதில், ஈரோடு வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வெள்ளோடு பறவைகள் சரணாலயம், கொடுமுடி, அவல்பூந்துறை, கனகபுரம், வரட்டுப்பள்ளம், அந்தியூர் பெரிய ஏரி, தண்ணீர் பள்ளம் ஏரி, ஓடாந்துறை ஏரி, ஜர்தல் ஏரி, தாமரை க்கரை குளம், மணியாச்சி பள்ளம் உள்ளிட்ட 21 பகுதிகளில் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.

    இதில், வனத்துறை பணியாளர்களுடன், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்த பறவைகள் ஆர்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    • யானை போடர்பாளையம் கிராமத்துக்குள் புகுந்து மாதேவன் வீட்டை இடித்து சேதப்படுத்தியது.
    • வனப்பகுதி விட்டு வெளியேறிய ஒற்றை யானை சாலையோரம் உலாவிக் கொண்டிருந்தது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, மான், காட்டெருமை உட்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    குறிப்பாக தாளவாடி வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் வறட்சி காரணமாக யானைகள் உணவு, தண்ணீரை தேடி ஊருக்குள் புகுவதும், பயிர்களை சேதப்படுத்துவதும் தொடர்கதை ஆகி வருகிறது.

    இந்நிலையில் தாளவாடி அடுத்த கேர்மாளம் அருகே உள்ள போடர் பாளையத்தை சேர்ந்தவர் மாதேவன். கூலி தொழிலாளி. தனது குடும்பத்தினருடன் வெளியே சென்று இருந்தார். இந்நிலையில் நேற்று வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை போடர்பாளையம் கிராமத்துக்குள் புகுந்து மாதேவன் வீட்டை இடித்து சேதப்படுத்தியது.

    இந்நிலையில் நேற்று மாலை மாதேவன் வெளியூரிலிருந்து வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீடு இடிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் ஒற்றை யானை வீட்டை இடித்து சேதப்படுத்திய தகவலை கூறினர். நல்ல வாய்ப்பாக யானை வீட்டை இடித்து சேதப்படுத்திய நேரத்தில் மாதேவன் தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்ததால் அதிர்ஷ்டவசமாக அவர் குடும்பத்துடன் உயிர் தப்பினார்.

    இதேப்போல் திம்பம் மலைப்பாதையில் நேற்று இரவு வனப்பகுதி விட்டு வெளியேறிய ஒற்றை யானை சாலையோரம் உலாவிக் கொண்டிருந்தது.

    இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை சற்று தொலைவில் நிறுத்தினர். சிறிது நேரம் சாலையில் நின்று கொண்டிருந்த ஒற்றை யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பின்னரே அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

    • நெடுஞ்சாலை வழியாக தமிழகம்-கர்நாடக இடையே போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
    • சிறுத்தைகள் 27 கொண்டை ஊசி வளைவுகள் பகுதிகளில் இரவு நேரங்களில் நடமாடுவது வழக்கம்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவில் அருகே பண்ணாரி சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியை கடந்து சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது.

    இந்த நெடுஞ்சாலை வழியாக தமிழகம்-கர்நாடக இடையே போக்குவரத்து நடைபெற்று வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக கடந்து செல்கின்றன. திம்பம் மலைப்பாதை கடந்து கர்நாடக மாநிலத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்த மலைப்பாதையில் யானை, சிறுத்தை அதிக அளவில் வசித்து வருகின்றன. குறிப்பாக சிறுத்தைகள் 27 கொண்டை ஊசி வளைவுகள் பகுதிகளில் இரவு நேரங்களில் நடமாடுவது வழக்கம்.

    இந்நிலையில் நேற்று மாலை சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வழக்கம்போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது திடீரென வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து ஓடியது.

    அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவர் இதனை பார்த்து தனது வாகனத்தை சற்று தொலைவில் நிறுத்தி அந்த சிறுத்தை சாலையை கடந்து ஓடிய காட்சியை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டார். பின்னர் அந்த வீடியோவை அவர் சமூக வலைத்த ளங்களில் வெளியிட்டார். அது தற்போது வைரலானது.

    பண்ணாரி சோதனை சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும். வாகனங்களை எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் நிறுத்த வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

    • மூன்றரை ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த செட் தேர்வு மார்ச் மாதம் ஆசிரியர் வாரியத்தால் நடத்தப்பட உள்ளது.
    • செட் தேர்விற்கு பிறகு மார்ச் மாத இறுதியில் ஆயிரம் கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்க உள்ளோம்.

    ஈரோடு:

    ஈரோடு சிக்கய்ய நாயக்கர் (சி.என்.சி) கல்லூரி அரசு கல்லூரியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று உயர் கல்வித்துறை அமைச்சர் செழியன், தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி வளாகத்தில் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

    அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சி.என்.சி. கல்லூரியை நிர்வாகத்தினர் நடத்த முடியாத சூழ்நிலையில் தமிழக அரசு நடத்துவதற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக நீண்ட காத்திருப்பிற்கு பிறகு கிடைத்துள்ளது.

    மொத்தம் 52 ஏக்கர் கொண்ட இக்கல்லூரியில் 40 ஏக்கரில் விளையாட்டு அரங்கம், மிகப்பெரிய நூலகம் மற்றும் ஐ.ஏ.எஸ் அகாடமி அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். இது குறித்து உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் ஆய்விற்கு வந்துள்ளார் என்றார்.

    பின்னர் உயர்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் கோவி.செழியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பெரியாரால் உருவாக்கப்பட்டு மாணவர்களின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இக்கல்லூரி பல தலைவர்களை உருவாக்கியுள்ளது. நிர்வாக காரணங்களால் தற்போது தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இங்கு விளையாட்டு அரங்கம், மிகப்பெரிய நூலகம் மற்றும் ஐ.ஏ.எஸ் அகாடமி அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். இது பெரியாருக்கான பாராட்டிற்குரிய செயல். விரைவில் இத்திட்டத்தை செயல்படுத்த உயர்க்கல்வித்துறை பணிகளை துரிதப்படுத்தும்.

    ஈரோட்டில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் முதுகலை விரிவாக்க மையம் தொடர்ந்து நடத்த வழிவகை உள்ளதா என்பது குறித்து முதலமைச்சருடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு 2500 கவுரவ விரிவுரையாளர்கள் அறிவித்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இது போதிய அளவில் இல்லை. மூன்றரை ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த செட் தேர்வு மார்ச் மாதம் ஆசிரியர் வாரியத்தால் நடத்தப்பட உள்ளது. விரைவில் அதற்கான ஹால்டிக்கெட் வழங்கப்பட உள்ளது. 6 மாதத்திற்கு ஒருமுறை செட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதால் செப்டம்பர் அல்லது அக்டோபரில் நடத்தி ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப உள்ளோம். கடந்த அ.தி.மு.க. 10 ஆண்டுகள் ஆட்சியில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டது. தி.மு.க. ஆட்சி அமைந்த ஒன்றரை ஆண்டுகளில் 5 ஆயிரம் ரூபாய் உயர்த்தி தற்போது 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

    செட் தேர்விற்கு பிறகு மார்ச் மாத இறுதியில் ஆயிரம் கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்க உள்ளோம். ஜூன் மாதத்தில் 4 ஆயிரம் நிரந்தரப் பேராசிரியர்கள் நியமிக்க உள்ளோம். அதற்கான கேள்வித்தாள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஜூன் மாதத்தில் 4 ஆயிரம் பேராசிரியர்கள் பணி நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது.

    ஈரோட்டில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வந்துள்ளது. இதுகுறித்து முதலமைச்சரிடம் கலந்து பேசி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, எம்.பி.க்கள் கே.இ.பிரகாஷ், அந்தியூர் செல்வராஜ், சந்திர குமார் எம்.எல்.ஏ., மேயர் நகரத்தினம், மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட துணைச்செயலாளர் செந்தில்குமார், மண்டல தலைவர் பழனிச்சாமி, இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் திருவாசகம் உள்பட பலர் உடன் இருந்தனர். 

    • இருசக்கர வாகனத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்றார்.
    • ஆம்னி பஸ் கவிழ்ந்ததில் பஸ்சில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது.

    பெருந்துறை:

    கோவையில் இருந்து சேலம் நோக்கி இன்று காலை ஆம்னி பஸ் ஒன்று கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்த ஆம்னி பஸ் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கசாவடி அருகே வரும்போது இருசக்கர வாகனத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்றார்.

    இந்நிலையில் அந்த முதியவர் மீது மோதாமல் இருப்பதற்காக ஆம்னி பஸ் டிரைவர் 'பிரேக்' அடித்தார். இதனால் ஆம்னி பஸ் பின் தொடர்ந்து பல்லடத்தில் இருந்து வந்த அரசு பஸ் ஆம்னி பஸ்சின் பின்புறம் பலமாக மோதியது. மோதிய வேகத்தில் ஆம்னி பஸ் ஒரு பக்கமாக சாலையில் கவிழ்ந்தது.

    ஆம்னி பஸ் கவிழ்ந்தபோது அதன் அடியில் இருசக்கர வாகனத்தில் வந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இடிபாட்டில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற இன்ஸ்பெக்டர் தெய்வராணி தலைமையிலான பெருந்துறை போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள் உதவியுடன் மீட்பு பணியில் வேகமாக ஈடுபட்டனர். உயிரிழந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற தகவல் உடனடியாக தெரியவில்லை.

    ஆம்னி பஸ் கவிழ்ந்ததில் பஸ்சில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த பயணிகள் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • அந்த நிர்வாகியை செங்கோட்டையன் ஆதரவாளர்கள் தாக்கி விரட்டியதாக கூறப்படுகிறது.

    ஈரோடு மாவட்டம் கோபியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் அ.தி.மு.க.வினர் அடிதடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோபியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    அப்போது, அந்தியூர் நிர்வாகிகளுக்கு எந்த கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்படுவது இல்லை என்று கட்சி நிர்வாகி ஒருவர் புகார் கூறியதாக தெரிகிறது. அப்போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் முற்றியநிலையில், அது கைகலப்பாக மாறியது. இந்நிலையில் அந்த நிர்வாகியை செங்கோட்டையன் ஆதரவாளர்கள் தாக்கி விரட்டியதாக கூறப்படுகிறது.

    இதனிடையே, புகார் கூறியவரை செங்கோட்டையன் மேடைக்கு அழைத்துப் பேசியதாக கூறப்படும் நிலையில், திட்டமிட்டு மோதல் உருவாக்கப்பட்டது என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குற்றம்சாட்டியுள்ளார். 

    • செல்லாண்டியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
    • சேறு பூசிக்கொண்டு ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக வந்தனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி நகரில் காவல் தெய்வமாக செல்லியாண்டி அம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பொங்கல் மற்றும் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    கடந்த ஆண்டு கோவில் கும்பாபிஷேக திருப்பணி நடைபெற்ற நிலையில் சென்ற ஆண்டு கோவில் மாசி மாத திருவிழா நடைபெறவில்லை.

    கோவில் கும்பாபிஷேகம் டிசம்பர் மாதம் நடைபெற்று முடிந்த நிலையில் 48 நாட்கள் மண்டல பூஜை சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு மாசி மாத பொங்கல் மற்றும் தேர் திருவிழா பூச்சாட்டப்பட்டு கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

    விழாவையொட்டி நேற்று முன் தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை செல்லாண்டியம்மனுக்கு அபிஷேக விழா நடந்தது. இதில் பவானி, ஈரோடு மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் கருவறைக்கு சென்று பக்தர்கள் கொண்டு வந்த மஞ்சள் நீர் பால் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் தாங்களே அபிஷேகம் செய்தனர்.

    ஈரோடு மாவட்டம் பவானி நகரில் இருந்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரான செல்லியாண்டியம்மனுக்கு பால், இளநீர், மஞ்சள், திருமஞ்சனம் உட்பட பல்வேறு திரவிய ங்களால் மூலவருக்கு ஊற்றி விடிய விடிய சுமார் 15 மணி நேரத்தக்கும் மேலாக பக்தர்களே அபிஷேகம் செய்து சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி முக்கிய நிகழ்ச்சியான சக்தி அழைப்பு நிகழ்ச்சி மற்றும் பொங்கல் விழா இன்று (புதன்கிழமை) காலை கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி காலை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள எல்லை யம்மன் கோவிலில் இருந்து சக்தி அழைத்து வரப்பட்டது.

    மேளதாளங்கள் முழங்கள் குதிரைகளுடன் புதிய பஸ் நிலையம், மேட்டூர் ரோடு, அந்தியூர் பிரிவு உள்பட பல்வேறு ரோடுகள் வழியாக சக்தி அழைத்து வரப்பட்டது.

    இதில் சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காய்கறிகள், உப்பு, மிளகு, சில்லரை காசுகள் என பல்வேறு பொருட்களை வேண்டுதல்கள் நிறைவேற்றும் வகையில் சூறை வீசப்பட்டது. இதை பக்தர்கள் பலர் போட்டி போட்டு எடுத்துச் சென்றனர்.

    இதைத்தொடர்ந்து உள்ளூர், வெளியூர், வெளி மாநில பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து பல்வேறு விதமான வேடங்கள் அணிந்தும், பக்தர்கள் உடலில் சேறு பூசிக்கொண்டு ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக வந்தனர்.

    சிறுவர்கள், சிறுமிகள் என பலரும் சேறு பூசிக் கொண்டு நோய் எதுவும் அண்டாமல் இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

    மேலும் இளைஞர்கள் பலர் அம்மன் உள்பட பல்வேறு வேடங்கள் அணிந்து கொண்டு வந்தனர். பலர் உடலில் வர்ணம் பூசிக் கொண்டு தாயே செல்லாண்டியம்மா என பக்தி கோஷம் முழங்க மேளதாளங்களுக்கு ஏற்ற வகையில் ஆடிக் கொண்டே வந்தனர்.

    இதையடுத்து செல்லாண்டியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்று மதியம் பக்தர்கள் ஏராளமானோர் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.

    தொடர்ந்து இன்று மாலை பக்தர்கள் அலகு குத்தி கொண்டு, அக்னி சட்டி எடுத்து வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார்கள். இதனால் பவானி நகரம் முழுவதும் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்படு கிறது. இதனால் நகரமே விழா கோலம் பூண்டு உள்ளது.

    தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.

    ×