search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆடி மாதம் வரும் 2 அமாவாசையிலும் தர்ப்பணம் செய்யலாம்...
    X

    ஆடி மாதம் வரும் 2 அமாவாசையிலும் தர்ப்பணம் செய்யலாம்...

    • இந்த ஆண்டு ஆடி மாதம் 2 அமாவாசை வருகிறது.
    • முன்னோர்களுக்கு தில தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமானது.

    தட்சிணாயண புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசை ஆடி அமாவாசை. சிறப்பான இந்த ஆடி அமாவாசை தினத்தில் கடலில் புனித நீராடல் செய்வதும், பித்ருக்களான நம் முன்னோர்களுக்கு தில தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமானது.

    இந்த ஆண்டு ஆடி மாதம் 2 அமாவாசை வருகிறது. ஜூலை 17-ந் தேதி முதல் அமாவாசையும், ஆகஸ்டு மாதம் 16-ந்தேதி 2-வது அமாவாசையும் வருகிறது. இந்த இரு அமாவாசை நாட்களிலும் பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும். 2-வது அமாவாசை வரும் ஆகஸ்டு 16-ந் தேதி பித்ரு பூஜைகள் செய்வது கூடுதல் பலன்களைத் தரும்.

    ஆடி முதல் மார்கழி முடிய உள்ள காலத்தில் நம்முடைய முன்னோர்களான பித்ருக்கள் நம்மைப் பார்ப்பதற்காக இந்த உலகத்துக்கு வருகின்றனர். அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து புறப்படும் நாள் ஆடி அமாவாசை. எனவே, அவர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பது போலவும், அவர்களை பூமிக்கு வரும்படி அழைப்பு விடுப்பதுபோலவும் ஆடி அமாவாசையன்று அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும் என்கிறது சாஸ்திரம்.

    சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும் நாளே அமாவாசை என்பது எல்லோருக்கும் தெரியும். சந்திரன் தேய்பிறை நிலையில் இருந்து விடுபட்டு வளர்பிறை நிலைக்கு செல்லும் நாள். முன்னோர்களுக்கு நாம் செய்யக் கூடியதான இந்த தர்ப்பண காரியங்களை நாம் சிரத்தையாகச் செய்தால், நமக்கு அனைத்து வளங்களும் கிடைக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

    அமாவாசை தினத்தில் நம்முடைய வீட்டினை சுத்தம் செய்து வீடுகளில் விளக்கேற்றி நம்மை காண வரும் முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து வரவேற்பதன் மூலம் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசி வழங்குவார்கள் அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தானம் தர வேண்டும். எள் என்பதை வடமொழியில் திலம் என்று கூறுவார்கள்.

    திலம் என்று சொல்லப்படும் எள்ளை தானமாகக் கொடுத்தாலே சகல பாவங்களும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. அமாவாசை நாளில் ஆடை தானம் செய்வதால் வாழ்வில் வேண்டிய பலன் உண்டாகும். புதிய ஆடைகளை தானம் செய்வதால் ஆயுள்விருத்தி, குழந்தைகள் சிறு வயதில் இறந்துவிடுவது தடுக்கப்படும்.

    முன்னோர்களுக்கு படையலிட்டு வழிபட்ட பின்னர் ஏழைகளுக்கும் இயலாதவர்களுக்கும் அன்னதானம் கொடுப்பது சிறப்பு. அமாவாசை நாளில் உணவின்றி தவிப்பவர்கள், ஏழைகள், பசியோடு இருப்பவர்களைத் தேடிச்சென்று தானம் கொடுங்கள். நம்முடைய வழிபாடும், தானமும் உள்ளன்போடு இருந்தால் முன்னோர்களின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும்.

    ஆடி மாதம் பவுர்ணமி தினமும் விசேஷமானதுதான். இந்த ஆண்டு ஆடி பவுர்ணமி ஆகஸ்டு 1-ந் தேதி வருகிறது. அன்று அம்மன் ஆலயங்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கும். ஞானக் கடவுளாம் ஹயக்ரீவர் அவதரித்தது ஆடி பவுர்ணமி என்பதால், அன்று அவரை வழிபடுவதால் அஞ்ஞானம் நீங்கும்; பிள்ளைகள் கல்வியில் ஜொலிப்பார்கள்.

    Next Story
    ×