search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    குலசை தசரா திருவிழா: நவநீதகிருஷ்ணர் கோலத்தில் அம்மன் வீதி உலா
    X

    குலசை தசரா திருவிழா: நவநீதகிருஷ்ணர் கோலத்தில் அம்மன் வீதி உலா

    • நவநீதகிருஷ்ணர் கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா.
    • இ்க்கோலத்தில் அம்மனை தரிசித்தால் வாழ்நாள் கூடும்.

    தூத்துக்குடி:

    பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.

    5-ம் நாளான நேற்று முன்தினம் இரவில் காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இ்க்கோலத்தில் அம்மனை தரிசித்தால் வாழ்நாள் கூடும் என்பது ஐதீகம். இதனால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்து அம்மனை வழிபட்டனர்.

    6-ம் நாளான நேற்று காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    தசரா திருவிழாவையொட்டி பல்வேறு நாட்கள் விரதம் இருந்து காப்பு அணிந்த பக்தர்கள், நேர்த்திக்கடனாக சிவன், பிரம்மன், விஷ்ணு, முருகபெருமான், கிருஷ்ணர், ராமர், லட்சுமணர், நாராயணர், அனுமர், காளி போன்ற பல்வேறு சுவாமி வேடங்களையும், அரசன், குறவன், கரடி, கிளி உள்ளிட்ட வேடங்களையும் அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர்.

    மேலும் ஒவ்வொரு ஊரிலும் விரதம் இருக்கும் பக்தர்கள், அங்குள்ள கோவிலில் பிறை அமைத்து குழுவாக தங்கியிருந்து அம்மனை வழிபடுகின்றனர். அவர்கள் பல்வேறு வேடங்களையும் அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர். தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் வேடம் அணிந்த தசரா பக்தர்கள் வீதி வீதியாக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர். இதனால் தசரா திருவிழா களைகட்டியது.

    10-ம் நாளான வருகிற 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 12 மணியளவில் மகிஷாசூரனை அம்மன் வதம் செய்யும் மகிஷாசூரசம்ஹாரம் நடக்கிறது. தொடர்ந்து விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து காணிக்கை வசூலித்த பக்தர்கள், கோவில் உண்டியலில் காணிக்கையை செலுத்தி, கடலில் புனித நீராடி விரதத்தை முடித்து கொள்கின்றனர்.

    Next Story
    ×