search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சிவராத்திரி: வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சிவராத்திரி: வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி

    • வெள்ளியங்கிரி 7-வது மலையில் சுயம்புலிங்கம் உள்ளது.
    • மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்துச் செல்லக்கூடாது.

    கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் பூண்டியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. மிகவும் புகழ்பெற்ற இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    வெள்ளியங்கிரி 7-வது மலையில் சுயம்புலிங்கம் உள்ளது. இது தென்கைலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. அந்த சுயம்பு லிங்கத்தை தரிசிக்க சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி ஆகிய நாட்களில் ஏராளமான பக்தர்கள் 7 மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    பக்தர்கள் நடந்து செல்லும் மலைப்பாதை அடர்ந்த வனப்பகுதி ஆகும். இங்கு வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகம் இருக்கும். மலை மேல் அடிக்கடி காலநிலை மாற்றமும் ஏற்படும். ஜூன் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை வெள்ளியங்கிரி மலை மீது ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவது இல்லை.

    இந்த நிலையில் சிவராத்திரி நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. எனவே வெள்ளியங்கிரி மலை ஏற அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்து உள்ளது.

    இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    ஆண்டுதோறும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி ஆகிய 2 விழாக்களுக்கு மட்டுமே வெள்ளியங்கிரி மலை மீது செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். தற்போது சிவராத்திரி விழாவுக்காக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 20-ந் தேதி வரை 4 நாட்கள் மட்டும் மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.

    பிளாஸ்டிக் பாட்டில்களை மலையில் வீசுவதை தடுக்க புதிய திட்டத்தை அமல்படுத்த உள்ளோம். அதன்படி பக்தர்கள் மலை மீது கொண்டு செல்லும் பிளாஸ்டிக் பாட்டிலுக்கு ரூ.20 வசூலித்து ஸ்டிக்கர் ஒட்டப்படும். பக்தர்கள் மலையில் இருந்து இறங்கும் போது ஸ்டிக்கர் ஒட்டிய பாட்டிலை வனத்துறையிடம் கொடுத்து ரூ.20-ஐ திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

    இதன் மூலம் வனப்பகுதியில் பாட்டில்கள் வீசுவது தடுக்கப்படும். எனவே மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை மலையில் வீசுவதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×