என் மலர்tooltip icon

    வழிபாடு

    தீபாவளியன்று மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம்-தங்கக்கவசம் அணிவிப்பு
    X

    தீபாவளியன்று மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம்-தங்கக்கவசம் அணிவிப்பு

    • வருகிற 25-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை ஐப்பசி கோலாட்ட திருவிழா தொடங்குகிறது.
    • கந்த சஷ்டி விழா வருகிற 25-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெறும்.
    • பவித்திர உற்சவம் அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடக்கிறது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஐப்பசி பூரம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி காலை 10 மணிக்கு மூலவர் மீனாட்சி அம்மனுக்கும், உற்சவர் மீனாட்சி அம்மனுக்கும் ஏற்றி இறக்குதல் சடங்குகள் நடந்து தீபாராதனை காட்டப்படும். பின்னர் உச்சிகாலத்தில் ஆலவட்டத்துடன் உற்சவர் அம்மன் சேத்தி(இருப்பிடம்) வந்து சேருவார்.

    தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி அன்று காலை, மாலை என இரு வேளைகளிலும் மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம், தங்கக்கவசமும், சுந்தரேசுவரர் சுவாமிக்கு வைர நெற்றிப்பட்டையும் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு தீபாவளி சிறப்பு தரிசனம் நடைபெறும்.

    மேலும் 25-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை கோவிலில் ஐப்பசி மாத கோலாட்ட திருவிழா தொடங்குகிறது. அதையொட்டி 25-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை மாலை 6 மணிக்கு மீனாட்சி அம்மன் ஆடி வீதியில் சுற்றி வந்த பிறகு மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் பத்தியுலாத்தி பின்பு கொலுச்சாவடி வந்து சேருவார்.

    29-ந்தேதி மாலை 6 மணிக்கு மீனாட்சி அம்மன் வௌ்ளி கோ ரதத்தில் எழுந்தருளி 4 சித்திரை வீதிகளில் வீதி உலா நடைபெறும். ஐப்பசி விழாவின் 6-ம் நாளான 30-ந் தேதி மாலை 6 மணிக்கு மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ஆடி வீதியில் புறப்பாடு நடைபெறும்.

    கோவிலில் பவித்திர உற்சவம் அடுத்த மாதம் 4-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை நடக்கிறது. இந்த உற்சவத்தில் சந்திரசேகரர், சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வலம் வந்து சேத்தியாவார். 8-ந் தேதி உச்சி காலத்தில் சுந்தரேசுவரருக்கு ஐப்பசி அன்னாபிஷேகம் நடைபெறும்.

    மீனாட்சி அம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா வருகிற 25-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெறும். 31-ந் தேதி காலை 7 மணிக்கு கூடல்குமாரர் சன்னதியில் முத்துக்குமாரசுவாமி எழுந்தருளி வௌ்ளிக்கவசம் மற்றும் பாவாடை சாத்துப்படியும் விசேஷ அபிஷேகம், அலங்காரம், சண்முகார்ச்சனையும் நடைபெறும்.

    ஐப்பசி மாத திருவிழாவை யொட்டி வருகிற 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை மீனாட்சி அம்மன் கோவிலில் உபய திருக்கல்யாணம், தங்கரதம் உலா ஆகியவை நடைபெறாது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், துணை கமிஷனர் அருணாச்சலம் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×