என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
வழிபாடு
![பங்குனி உத்திரம்: திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பந்தக்கால் நடும் விழா- ஏப்ரல் 7-ந்தேதி ஆழித்தேரோட்டம் பங்குனி உத்திரம்: திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பந்தக்கால் நடும் விழா- ஏப்ரல் 7-ந்தேதி ஆழித்தேரோட்டம்](https://media.maalaimalar.com/h-upload/2025/02/11/9189738-newproject29.webp)
பங்குனி உத்திரம்: திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பந்தக்கால் நடும் விழா- ஏப்ரல் 7-ந்தேதி ஆழித்தேரோட்டம்
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg)
- ஆழித்தேரோட்டம் உலக பிரசித்தி பெற்றது.
- ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை மிக்கது.
திருவாரூர்:
திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும், சர்வ தோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் திகழ்கிறது.
மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலின் ஆழித்தேரோட்டம் உலக பிரசித்தி பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை மிக்கது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர தேரோட்டம் வருகிற ஏப்ரல் மாதம் 7-ந்தேதி (ஆயில்ய நட்சத்திரத்தன்று) நடைபெற உள்ளது. இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பங்குனி உத்திர திருவிழாவிற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக கோவிலில் உள்ள ருண விமோசனர் சன்னதியின் அருகில் உள்ள கல் தூணிற்கு மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து, சிவவாத்தியங்கள் முழங்க திருஞானசம்பந்தர் புறப்பாடு நடைபெற்று, தேரடியில் உள்ள ஆழித்தேர் அருகில் வைக்கப்பட்ட 5 பனஞ் சப்பைகளுக்கு பால், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர் மாலை மற்றும் மாவிலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர், பூஜை செய்யப்பட்ட பனஞ் சப்பைகள் விநாயகர், முருகன், அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களுக்கு எடுத்து செல்லப்பட்டது. அதிக உயரமுள்ள பனஞ்சப்பை ஆழித்தேர் எனப்படும் தியாகராஜர் தேரில் வைக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.