என் மலர்
திருவாரூர்
- சத்தம் காரணமாக அதிர்வும் ஏற்பட்டதால் வீட்டைவிட்டு மக்கள் வௌியேறினர்.
- மன்னார்குடி, கமலபுரம், வடபாதி மங்கலம் பகுதியில் சத்தம் உணரப்பட்டது.
திருவாரூரில் வானில் திடீரென ஒலித்த பலத்த சத்தத்தால் மக்கள் பீதியமடைந்துள்ளனர். சத்தம் காரணமாக அதிர்வும் ஏற்பட்டதால் வீட்டைவிட்டு மக்கள் வௌியேறினர்.
மன்னார்குடி, கமலபுரம், வடபாதி மங்கலம் பகுதியில் சத்தம் உணரப்பட்டது. சத்தம் கேட்ட அதே நேரத்தில் விமானமும் சென்றதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்திய விமானப்படை வீரர்கள் மேற்கொண்ட பயிற்சி காரணமாக சத்தம் எழுந்ததாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரனம் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், "பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரை இந்திய விமானப்படை பயிற்சியில் ஈடுபட்டனர்" என்றார்.
- மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 5 பேரை கைது செய்தனர்.
- போலீசார் கைப்பற்றிய கஞ்சா 2 கிலோ வீதம் 200 பார்சல்கள் சுமார் 400 கிலோ உள்ளது.
திருவாரூர்:
திருவாரூரில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூர் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஆந்திராவைச் சேர்ந்த 5 பேர் அறை எடுத்து தங்கி இருப்பதாகவும் ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்ட 400 கிலோ கஞ்சா இலங்கைக்கு கடத்தப்பட உள்ளதாகவும், சென்னை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் போலீசார் அதிரடியாக தனியார் தங்கும் விடுதியில் நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 2 கார்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியைச் சேர்ந்த பால கோலானு விஷ்ணுவர்த ரெட்டி என்பவரின் ஆதார் அடையாள அட்டையை கொடுத்து இந்த தனியார் தங்கும் விடுதியில் 2 கார்களில் வந்த 5 பேர் தங்கியுள்ளது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 5 பேரையும் கைது செய்தனர்.
மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தங்கும் விடுதிக்குள் சென்ற போது, 5 பேரை அழைத்துச் செல்வதற்காக வந்த நபர் அங்கிருந்து தப்பி விடுதியின் கேட்டில் ஏறி சாலையில் ஓடிவிட்டார்.
அவரை பின்தொடர்ந்து போலீசார் ஒருவரும் விரட்டி பிடிக்க முயற்சி செய்கிறார். இந்த சி.சி.டி.வி. காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போலீசார் கைப்பற்றிய கஞ்சா 2 கிலோ வீதம் 200 பார்சல்கள் சுமார் 400 கிலோ உள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.1 கோடியாகும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கஞ்சா முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்தி காடுகள் வழியாக படகு மூலமாகவும் நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் இருந்து படகுகள் மூலமாகவும் இலங்கைக்கு கடத்திச் செல்லப்படுவதாகவும் தெரிகிறது.
மேலும் இது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறதா என்கிற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக ஆந்திராவைச் சேர்ந்த இந்த நபர்களிடமிருந்து நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் கஞ்சாவை பெற்று இலங்கைக்கு அனுப்பி இருக்கலாம் என்கிறரீதியிலும் ஆந்திராவைச் சேர்ந்த 5 பேரிடம் தனியார் தங்கும் விடுதியில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஆந்திராவில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சா தொடர்ந்து எவ்வாறு பல சோதனை சாவடிகளை கடந்து எடுத்து வரப்படுகிறது என்பது குறித்தும் இதுவரை இந்த கும்பல் எத்தனை முறை இதே போன்று இலங்கைக்கு கஞ்சா கடத்தி இருக்கிறது என்பது குறித்தும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று திருவாரூர் நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
- தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 50 சதவீதம் டாக்டர்கள் இல்லை.
- அரசால் வினியோகிக்கப்படும் சத்துமாவு குழந்தைகள் மற்றும் கருவுற்ற பெண்களுக்கு வழங்கப்படவில்லை.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்துள்ள ஜாம்புவானோடையில் பிரசித்தி பெற்ற சேக்தாவூது ஆண்டவர் தர்கா அமைந்துள்ளது.
இங்கு ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு நேற்று மாலை இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்வில் பங்கேற்க சசிகலா வருகை தந்தார். முன்னதாக அவர் சேக்தாவூது ஆண்டவர் சமாதிக்கு சென்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். தொடர்ந்து, அங்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்களுடன் ஒன்றாக அமர்ந்து இப்தார் நோன்பு திறந்தார்.
பின்னர், சசிகலா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் நடக்கும் 4 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் ஏதும் முழுமையாக நடைபெறவில்லை. தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 50 சதவீதம் டாக்டர்கள் இல்லை.
இதனை நான் அடிக்கடி கூறிய பிறகு, தற்போது கிராம சுகாதார நிலையங்களில் சுமார் 2 ஆயிரத்து 500 டாக்டர்களை அரசு நியமனம் செய்துள்ளது. ஆனால், அவர்களின் கீழ் பணிபுரியும் செவிலியர்களை இன்னும் நியமனம் செய்யவில்லை.
அரசால் வினியோகிக்கப்படும் சத்துமாவு குழந்தைகள் மற்றும் கருவுற்ற பெண்களுக்கு வழங்கப்படவில்லை. ஏழைகளுக்கு பயன்படுகிற எந்த வசதியையும் தி.மு.க. அரசு சரிவர செய்யவில்லை, 5 ஆண்டுகளுக்கு நமக்கு லைசன்சு கொடுத்து விட்டனர், நம்மை யாரும் எதுவும் கேட்ட முடியாது என தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.
நமது பணிகளை, செயல்திட்டங்களை திறம்பட செய்துவிட்டு, மத்திய அரசிடம் நிதி கேட்டல் நியாயம். ஆனால், அதற்கு மாறாக குழாய் அடி சண்டை போல மத்திய, மாநில அரசுகள் மோதிக்கொள்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
- குழந்தைகளிடம் கையெழுத்து வாங்கக்கூடாது.
- ஏற்கனவே மிஸ்டுகால் கொடுத்து 1 கோடி பேரை சேர்த்தார்கள்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு துறை அலுவலர்களுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. பின்னர், உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்திற்கு இதுவரை 3 முறை அரசு முறை பயணமாக வந்துள்ளேன். அரசு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் திருப்திகரமாக உள்ளது.
திருத்துறைப்பூண்டி நகரில் சுமார் 3.5 ஏக்கர் பரப்பளவில் முதல்வர் விளையாட்டு அரங்கம் அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், திருவாரூரில் ரூ.18 கோடி மதிப்பில் 12 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 3 நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
திருத்துறைப்பூண்டி வீரன் நகர் பகுதியில் உள்ள நரிக்குறவர் இன மக்கள் வீட்டு மனை கேட்டு கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்ற முதலமைச்சர் 77 குடும்பத்தினருக்கு பட்டா வழங்குவது மட்டுமல்லாமல் ரூ.5 லட்சம் மதிப்பில் அவர்களுக்கு வீடும் கட்டித்தர உத்தரவிட்டு உள்ளார்.
ஒன்றிய அரசின் மும்மொழி கொள்கை, இந்தி திணிப்பு ஆகியவற்றை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருவதால் அமலாக்கத்துறை மூலம் சோதனை நடத்தி வருகிறது.
குழந்தைகளிடம் கையெழுத்து வாங்கக்கூடாது. நாங்கள் நீட் தேர்வுக்கு கிட்டத்தட்ட 1 கோடி கையெழுத்து வாங்கினோம். அப்போது பள்ளி மாணவர்களை தவிர்த்துவிட்டு தான் கையெழுத்து வாங்கினோம்.
ஏற்கனவே மிஸ்டுகால் கொடுத்து 1 கோடி பேரை சேர்த்தார்கள். அதனுடைய தொடர்ச்சியாக இதை பார்க்கிறேன் என்று கூறினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மார்ச் 8-ந்தேதி முதலமைச்சர் ரூ. 3,019 கோடி மதிப்பிலான கடன்களை வழங்க உள்ளார்.
- ரூ. 1 லட்சத்து 5 ஆயிரம் கோடி வங்கி கடனாக பெற்று தந்துள்ளோம்.
திருவாரூர்:
திருவாரூர் அருகிலுள்ள பழவனக்குடி கிராமத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் குழு கூட்டமைப்பைச் சேர்ந்த பெண்களை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-
சுய தொழில் தொடங்க ஊக்குவிப்பது வங்கி கடன் வழங்குவது என துறைக்கு அமைச்சராக, முதலமைச்சர் இருந்தபோது பல்வேறு முன்னேற்றங்களை செய்துள்ளார்.
கிராமப்புறங்களில் 3.30 லட்சம் குழுக்களும், நகர்ப்புறங்களில் 1.50 லட்சம் என மொத்தம் 4 லட்சத்து 80 ஆயிரம் குழுக்கள் செயல்பட்டு வருகிறது.
இதில் 54 லட்சம் மகளிர்கள் உறுப்பினராக செயல்பட்டு வருகின்றனர். இந்த அரசு பொறுப்பேற்ற நாட்களில் இருந்து ரூ. 1 லட்சத்து 5 ஆயிரம் கோடி வங்கி கடனாக பெற்று தந்துள்ளோம்.
மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் மார்ச் 8-ந்தேதி சென்னையில் முதலமைச்சர் ரூ. 3,019 கோடி மதிப்பிலான கடன்களை வழங்க உள்ளார்.
இப்படி வழங்கப்படுகின்ற இந்த கடன்களை எந்த அளவிற்கு பயனுள்ள வகையில் செலவிடுகின்றார்கள்.
அதன் மூலம் அவர்கள் வாழ்வாதாரம் எந்த அளவுக்கு மேம்பட்டுள்ளது என்பது குறித்து மாவட்ட வாரியாக நிகழ்ச்சிக்கு செல்லும் பொழுது ஆய்வு செய்ய வேண்டும், அவர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தி இருக்கிறார்.
குறிப்பாக மகளிர் சுய உதவி குழுக்கள் வாழ்வாதார மேம்பாடு, மகளிர் உரிமைத்தொகை, காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டங்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். அதன்படி திருவாரூர் மாவட்டம் பழவனக்குடி கிராமத்தில் இந்த ஆய்வினை தொடங்கி உள்ளோம்.
இங்குள்ள 30 குழுக்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் மகிழ்ச்சியுடன் தங்களது செயல்பாடுகளை பகிர்ந்து கொண்டனர்.
அது மட்டுமல்லாமல் உள்ளூர் தேவைகளாக வாய்க்கால்கள் தூர்வார வேண்டும், பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்க வேண்டும், பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட கலெக்டருடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திராவிட மாடல் அரசு அமைய காரணமாக இருந்த பெண்களை சந்தித்து பேசியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாகை மாவட்டத்திற்கு வருகிறார்.
- திருவாரூர் மாவட்டத்தில் முக்கிய விருந்தினர்கள் செல்லும் வழித்தடத்தை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாகை மாவட்டத்திற்கு வருகிறார். இதனையொட்டி இன்று, நாளை (திங்கட்கிழமை) ஆகிய 2 நாட்கள் திருவாரூர் மார்க்கமாக நாகைக்கு செல்ல இருப்பதால் திருவாரூர் மாவட்டத்தில் முக்கிய விருந்தினர்கள் செல்லும் வழித்தடத்தை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.
இதை மீறி இந்த வழிதடத்தில் சிவில் ரிமோட் பைலட் விமான அமைப்பு மற்றும் டிரோன் கேமரா போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
- பச்சைப்பயிர் செடிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
- சம்பா பயிரானது அறுவடை நேரத்தில் மழையினால் சாய்ந்து சேதம் அடைந்து மகசூல் இழப்பு ஏற்பட்டது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் சம்பா அறுவடைக்குப் பிறகு பச்சைபயிறு சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முறமாக ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 55 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி மேற் கொள்ளப்பட்டுள்ளது. இந்த சாகுபடிக்கு முற்றிலும் தண்ணீர் தேவைப்படாது. தற்பொழுது 35 நாட்களான பச்சைப் பயிறு சங்கு வைத்து பூக்கும் தருவாயில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. பகல் முழுவதும் விட்டு விட்டு மழை கொட்டியது. இன்று 2-வது நாளாகவும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் சாகுபடி வயல்களில் பச்சைப் பயிர்களை தண்ணீர் சூழ்ந்து தேங்கி நிற்கிறது. இதனால் பச்சைப்பயிர் செடிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பூக்கள் அனைத்தும் கொட்டி பழுப்பு நிறத்தில் மாறியுள்ளது.
குறிப்பாக கமலாபுரம், வடபாதிமங்கலம், கொரடாச்சேரி, கூத்தா நல்லூர், கோட்டூர், பூந்தாலங்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவிலான பயிர் செடிகள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. மொத்தம் 10 ஆயிரம் ஏக்கர் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், சம்பா பயிரானது அறுவடை நேரத்தில் மழையினால் சாய்ந்து சேதம் அடைந்து மகசூல் இழப்பு ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு பச்சைப் பயிறு சாகுபடி செய்த நிலையில் தற்போது பெய்த மழையின் காரணமாக அதுவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு டானிக் மற்றும் பூச்சி மருந்துகள் சுமார் ரூ.4000-க்கு தெளித்து செலவு செய்தோம். எனவே அரசு உடனடியாக பாதிப்புகளை பார்வையிட்டு பயிர் காப்பீட்டு தொகை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.
- மொழி மூலம் பிரிவினையை உருவாக்குவது மாநில அரசு அல்ல, மத்திய அரசுதான்.
- மும்மொழி கொள்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கடுமையாக கண்டிக்கிறது.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் வருகை தந்தார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக அரசு இருமொழி கொள்கையை கடைபிடிப்பது என்பது மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வந்த பிறகு நடைபெறவில்லை. காமராஜர், அண்ணா காலங்களில் இருந்து தற்போது வரை இருமொழி கொள்ளை தான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மத்திய பா.ஜ.க. அரசு இந்தி மொழியை திணிக்கவும், இந்தி பேசுகிற மாநிலங்களில் சமஸ்கிருத்தை திணிக்கவும் மும்மொழி கொள்கையை கொண்டு வர நினைக்கிறது. மொழி மூலம் பிரிவினையை உருவாக்குவது மாநில அரசு அல்ல, மத்திய அரசுதான். எனவே, மும்மொழி கொள்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கடுமையாக கண்டிக்கிறது.
5 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதி கொடுத்துவிட்டு, கேரளா மற்றும் தமிழகத்திற்கு பேரிடர் நிவாரண நிதி வழங்காதது பா.ஜ.க. ஆட்சி இல்லாத மாநிலங்களை தண்டிப்பது போன்றதாகும். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணாக உள்ளது.
த.வெ.க. தலைவர் விஜய்க்கு, மத்திய அரசு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அளித்திருப்பது எதற்கு? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- நூற்றுக்கணக்கான லாரிகள் நீண்ட தூரத்திற்கு சாலையில் அணிவகுத்து நிற்கின்றன.
மன்னார்குடி:
கட்டுமான தொழிலுக்கு பயன்படும் பி சாண்ட், எம் சாண்ட், ஜல்லி, அரளை உள்ளிட்ட பொருட்களின் கடுமையான விலையேற்றத்தை கண்டித்தும் விலையேற்றத்திற்கு காரணமான கிரஷர் கம்பெனிகளை கண்டித்தும் , தமிழக அரசு விலையேற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தும் விதமாகவும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு ஒப்பந்தக்காரர்கள் கூட்டமைப்பு அகில இந்திய கட்டுனர் சங்கம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, கட்டுமான தொழிலாளர் மத்திய சங்கம் ஆகியவற்றின் சார்பில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இன்று கரூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து எம் சாண்ட் ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களை ஏற்றி வந்த லாரிகளை மன்னார்குடி அருகே உள்ள கோவில்வெண்ணி, செருமங்கலம், காரிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒப்பந்தக்காரர்கள் ஏராளமானோர் திரண்டு மறித்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக நூற்றுக்கணக்கான லாரிகள் நீண்ட தூரத்திற்கு சாலையில் அணிவகுத்து நிற்கின்றன. தொடர்ந்து லாரிகள் அங்கேயே நிற்பதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இதற்கான பாராட்டு சான்றிதழ் நேற்று வழங்கப்பட்டது.
- சான்றிதழை முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோரிடம் வழங்கினார்.
முத்துப்பேட்டை:
இந்தியாவிலேயே சிறந்த போலீஸ் நிலையமாக தேர்வு செய்யப்பட்ட முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு மத்திய மண்டல ஐ.ஜி. ஜோசி நிர்மல் குமார் சான்றிதழ் வழங்கினார்.
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் கடந்த 2024-ம் ஆண்டிற்கான இந்தியாவில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களின் பணிகளையும் ஆராய்ந்து போலீஸ் நிலையங்களின் வருடாந்திர தர வரிசையில் சிறந்த போலீஸ் நிலையமாக தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தை மத்திய அரசு தேர்வு செய்யப்பட்டு அங்கீகரித்துள்ளது.
இதற்கான பாராட்டு சான்றிதழ் நேற்று வழங்கப்பட்டது. இதனையொட்டி முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. ஜோசி நிர்மல் குமார், அதற்கான சான்றிதழை முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோரிடம் வழங்கினார்.
அப்போது தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கருண் கரட், முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த், மாவட்ட குற்றப்பதிவேடுகள் கூட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பிலிப் பிராங்களின் கென்னடி மற்றும் தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. ஜோசி நிர்மல் குமார் கூறுகையில்:-
இன்றியமையாத காவல் துறை பணியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அனைத்தையும் முறையாக கையாண்டு, சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதில் காவல் துறையின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பையும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சேவைக்கான அர்ப்பணிப்பு, அசைக்க முடியாத முயற்சிகளுக்கும் நான் மனதார பாராட்டுகிறேன் என்றார்.
- நெல் கோட்டைக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- நெற்கதிர்கள் அரிசியாக்கப்பட்டு வேதாரண்யேஸ்வரருக்கு நிவேத்தியம் செய்யப்படும்.
வேதாரண்யம்:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள குன்னலூர் கிராமத்தில் சுமார் 200 ஏக்கரில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
அங்கிருந்து வரும் நெல்லை கொண்டு தினமும் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரருக்கு நிவேத்தியம் செய்யப்படுகிறது. இங்கு விளைந்த அறுவடை செய்து முதல் நெல்லை தைப்பூசத்தன்று அங்கிருந்து நெல் கோட்டையாக கட்டி சுவாமிக்கு அளிக்கும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டு தைப்பூச தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கோட்டையாக கட்டி நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு எடுத்து வந்தனர்.
முன்னதாக களஞ்சியம் விநாயகர் கோவிலின் முன்வைத்து சிவகுமார் குருக்கள் சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர், மேள தாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வேதாரண்யம் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டது.
தொடர்ந்து, வேதாரண்யேஸ்வரர் சன்னதியின் முன்பு வைக்கப்பட்டு, நெல் கோட்டைக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், பக்தர்களுக்கு பிரசாதமாக நெற்கதிர்கள் வழங்கப்பட்டது.
பின்னர், அந்த நெற்கதிர்கள் அரைத்து அரிசியாக்கப்பட்டு இன்று வேதாரண்யேஸ்வரருக்கு நடக்கும் 2-ம் கால பூஜையில் நிவேத்தியம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
நெல் கோட்டை ஊர்வலத்தின் போது வேதாரண்யம் கோவில் நிர்வாகத்தினர், யாழ்பாணம் வரணி ஆதீனம், செவ்வந்தி நாத பண்டாரசந்நிதி, இளையவர் சபேசன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- ஆழித்தேரோட்டம் உலக பிரசித்தி பெற்றது.
- ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை மிக்கது.
திருவாரூர்:
திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும், சர்வ தோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் திகழ்கிறது.
மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலின் ஆழித்தேரோட்டம் உலக பிரசித்தி பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை மிக்கது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர தேரோட்டம் வருகிற ஏப்ரல் மாதம் 7-ந்தேதி (ஆயில்ய நட்சத்திரத்தன்று) நடைபெற உள்ளது. இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பங்குனி உத்திர திருவிழாவிற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக கோவிலில் உள்ள ருண விமோசனர் சன்னதியின் அருகில் உள்ள கல் தூணிற்கு மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து, சிவவாத்தியங்கள் முழங்க திருஞானசம்பந்தர் புறப்பாடு நடைபெற்று, தேரடியில் உள்ள ஆழித்தேர் அருகில் வைக்கப்பட்ட 5 பனஞ் சப்பைகளுக்கு பால், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர் மாலை மற்றும் மாவிலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர், பூஜை செய்யப்பட்ட பனஞ் சப்பைகள் விநாயகர், முருகன், அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களுக்கு எடுத்து செல்லப்பட்டது. அதிக உயரமுள்ள பனஞ்சப்பை ஆழித்தேர் எனப்படும் தியாகராஜர் தேரில் வைக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.