என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவாரூர் அருகே இலங்கைக்கு கடத்த இருந்த 400 கிலோ கஞ்சா பறிமுதல்- 5 பேர் கைது

- மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 5 பேரை கைது செய்தனர்.
- போலீசார் கைப்பற்றிய கஞ்சா 2 கிலோ வீதம் 200 பார்சல்கள் சுமார் 400 கிலோ உள்ளது.
திருவாரூர்:
திருவாரூரில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூர் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஆந்திராவைச் சேர்ந்த 5 பேர் அறை எடுத்து தங்கி இருப்பதாகவும் ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்ட 400 கிலோ கஞ்சா இலங்கைக்கு கடத்தப்பட உள்ளதாகவும், சென்னை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் போலீசார் அதிரடியாக தனியார் தங்கும் விடுதியில் நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 2 கார்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியைச் சேர்ந்த பால கோலானு விஷ்ணுவர்த ரெட்டி என்பவரின் ஆதார் அடையாள அட்டையை கொடுத்து இந்த தனியார் தங்கும் விடுதியில் 2 கார்களில் வந்த 5 பேர் தங்கியுள்ளது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 5 பேரையும் கைது செய்தனர்.
மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தங்கும் விடுதிக்குள் சென்ற போது, 5 பேரை அழைத்துச் செல்வதற்காக வந்த நபர் அங்கிருந்து தப்பி விடுதியின் கேட்டில் ஏறி சாலையில் ஓடிவிட்டார்.
அவரை பின்தொடர்ந்து போலீசார் ஒருவரும் விரட்டி பிடிக்க முயற்சி செய்கிறார். இந்த சி.சி.டி.வி. காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போலீசார் கைப்பற்றிய கஞ்சா 2 கிலோ வீதம் 200 பார்சல்கள் சுமார் 400 கிலோ உள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.1 கோடியாகும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கஞ்சா முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்தி காடுகள் வழியாக படகு மூலமாகவும் நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் இருந்து படகுகள் மூலமாகவும் இலங்கைக்கு கடத்திச் செல்லப்படுவதாகவும் தெரிகிறது.
மேலும் இது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறதா என்கிற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக ஆந்திராவைச் சேர்ந்த இந்த நபர்களிடமிருந்து நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் கஞ்சாவை பெற்று இலங்கைக்கு அனுப்பி இருக்கலாம் என்கிறரீதியிலும் ஆந்திராவைச் சேர்ந்த 5 பேரிடம் தனியார் தங்கும் விடுதியில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஆந்திராவில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சா தொடர்ந்து எவ்வாறு பல சோதனை சாவடிகளை கடந்து எடுத்து வரப்படுகிறது என்பது குறித்தும் இதுவரை இந்த கும்பல் எத்தனை முறை இதே போன்று இலங்கைக்கு கஞ்சா கடத்தி இருக்கிறது என்பது குறித்தும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று திருவாரூர் நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.