search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அரங்கநாதனின் சயன திருக்கோலங்கள்
    X

    அரங்கநாதனின் சயன திருக்கோலங்கள்

    • சயனத் திருக்கோலங்கள் 8 வகைப்படும்.
    • இந்த சயன கோலங்களைப் பற்றி சிறிய குறிப்பாக இங்கே பார்க்கலாம்.

    தர்மத்தை நிலைநாட்டவும், அதர்மத்தை அழிக்கவும் கடவுள் எத்தனையோ அவதாரங்கள் எடுத்துள்ளார். பக்தர்கள் இந்த அவதாரங்களை எப்படி எல்லாம் காண வேண்டுமோ, அதற்கு இணங்க அந்த அவதாரங்களாகக் காட்சியளித்துள்ளார். எம்பெருமானின் சில திருத்தலங்களில் திருமால் நின்றகோலத்திலும், சில திருத்தலங்களில் இருந்த கோலத்திலும், சிலவற்றில் கிடந்த கோலத்திலும், சிலவற்றில் இயங்கியும் சேவை சாதிக்கின்றார். இவை ஸ்தானக மூர்த்தம் (நின்ற கோலம்); ஆச மூர்த்தம் (அமர்ந்த திருக்கோலம்); சயன மூர்த்தம் (கிடந்த திருக்கோலம்); யானக மூர்த்தம் (இயங்கும் திருக்கோலம்).

    இவற்றில் சயனத் திருக்கோலங்கள் 8 வகைப்படும். அவை:

    1. உத்தியோக சயனம், 2. தர்ப்ப சயனம், 3. தல சயனம், 4. புஜங்க சயனம், 5. போக சயனம், 6.மாணிக்க சயனம், 7. வடபத்ர சயனம், 8. வீரசயனம்

    இந்த சயன கோலங்களைப் பற்றி சிறிய குறிப்பாக இங்கே பார்க்கலாம்.

    உத்தியோக சயனம்

    திருக்குடந்தை (கும்பகோணம்) சாரங்கபாணி பெருமாள், ஆராவமுதன் என்னும் திருநாமத்துடன் பள்ளிகொண்டுள்ளார் (கிடந்த சயனம்). திருமழிசை ஆழ்வார் இவ்விடம் வந்தபோது சுவாமி தம்மைக் கவனிக்காமல் 'என்ன களைப்பில் தூங்குகிறாரோ' என்று பாடியுள்ளார்.

    தர்ப்ப சயனம்

    திருப்புல்லாணியில் தர்ப்பைப் புல்லின் மேல் சயன திருக்கோலத்தில் ஸ்ரீராமர் சேவை சாதிக்கிறார். பட்டாக்கத்தியுடன் வீர சயனராகப் பெருமாள் காட்சியளிக்கிறார். திருவடியில் ராவணனின் தூதுவரான சுகர், சாரணனும், பிருகுமுனிவர், வீர ஆஞ்சநேயரும் காட்சியளிக்கின்றனர்.

    தலசயனம்

    திருக்கடல்மல்லையில் திருமால் வெறுந்தரையில் சயனித்திருப்பதால் இது தலசயனமாகும்.

    புஜங்க சயனம்

    ஆதிசேஷன் மீது பெருமாள் பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பது (புஜங்க சயனம், புஜங்க - பாம்பு) பாம்பு போல் இருப்பதால் அது பாம்பணை எனப்பட்டது. எம்பெருமாள் பாற்கடலில் பாம்பணை மேல் பள்ளிக்கொண்டிருப்பது அவன் விந்து, நாத தத்துவங்களுக்கு மேற்பட்டவன் என்பதையும், அவற்றை இயக்க வல்லவன் அவனே என்பதையும் தெரிவிப்பது.

    உந்தியில் நான்முகனது தோற்றம் படைப்பை உணர்த்துகிறது. மிகப்பெரிய அனந்த சாயியை திருமயத்திலும், திருவனந்தபுரத்திலும், நாமக்கல்லிலும் தரிசிக்கலாம். செஞ்சிக்கு வடக்கிலுள்ள (சிங்கபுரம்) சிங்கவரம் என்னும் ஊரில் பாறையைக் குடைந்து அமைக்கப்பட்ட கோவிலில், அரங்கநாதர் பள்ளிகொண்டு விண்ணைப் பார்த்த வண்ணம் யோக சயனத்தில் உள்ளார். இவரது வலப்புறம் திரு மார்பில் திருமகள், கொப்பூழ்க்கொடித் தாமரையில் பிரம்மன், அருகில் கந்தருவர், திருவடிப்பக்கம் பிரகலாதன், பூதேவி ஆகியோர் காட்சியளிக்கின்றனர். திருவரங்கப் பெருமாளைப் பற்றி, தொண்டரடிப் பொடியாழ்வார் புகழ்ந்து பாடியுள்ளார். அதற்கேற்ற முறையில் பள்ளிகொண்டுள்ளார். 108 திவ்ய தேசங்களில் `கோவில்' என்று கூறப்படுவது இதுவே.

    போக சயனம்

    திருச்சித்திரக்கூடத்தில் மூர்த்தி, 4 திருக்கரங்களுடன் திடமான திருமேனியுடன் கரிய வண்ணத்துடன் காட்சியளிக்கிறார். சுவாமி திருமுடி அருகே திருமகள் அமர்ந்திருக்கிறாள். இடபுறத்தில் சிவபிரான் இருக்கிறார். இவ்வாறு அனைத்துப் பரிவாரங்களுடன் காட்சியளிக்கும் திருவுருவமே போக சயன மூர்த்தியாகும்.

    வடபத்ர சயனம் (திருவில்லிபுத்தூர்)

    வடபத்ரம் ஆலிலை மீது பள்ளிகொண்டது கிழக்கு நோக்கிய சயனம். வடபத்ர ஸ்ரீ ஆண்டாள் திருக்கோவில் அருகே உள்ளது. சுவாமியின் மேல்புறத்தில் கந்தருவர் தேவர் உள்ளார்.

    வீரசயனம் (திருஇந்தளூர்)

    இம்மூர்த்தி நான்கு திருக்கரம் கொண்டுள்ளார். வலக்கரங்களில் சக்கரமும், தலையணையும் இருக்கிறது. இடக்கரங்களில் ஒன்று சங்கேந்தியும், மற்றொன்று திருமேனிக்கு இணையாகவும் பரந்திருக்கும். முன் சொன்ன மூர்த்திகள், மதுகைடபர் போன்றோரை காண முடியும்.

    மாணிக்க சயனம் (திருநீர்மலை)

    மலையின்மேல் திருவரங்கநாதர் மாணிக்க சயனமாகப் பள்ளிகொண்டுள்ளார். தாயார் ஸ்ரீரங்கநாயகி, பிருகு முனிவர், மார்க்கண்டேயருக்குக் காட்சியளித்தவர்.

    இவை தவிர யோக சயனம் என்று ஒன்று உண்டு. இரு திருக்கரங்களை உடைய இம்மூர்த்தி அனந்தன் மீது சயனித்துள்ளார். இடத் திருவடி சற்றே மடிந்தும், வலத் திருவடி நீண்டும் இருக்கும். திருவடிக்கு அருகில் மதுகைடபர் இருப்பர். பிருகு, மார்க்கண்டேயர் அருகில் இருப்பார்கள். நாபிக் கமலத்தில் பிரம்மன், பின்புறச் சுவரில் ஆயுதபுருஷர்கள், 7 முனிவர், கருடன், விஷ்வக்சேனர் ஆகியோர் வணங்கி நிற்பர். இடப்புறத்தில் சிவபிரான் இருப்பார். இவ்வாறு அனைத்துப் பரிவாரங்களுடன் காட்சியளிக்கும் திருவுருவமே யோக சயன மூர்த்தியாகும்.

    -எம். நிர்மலா, புதுச்சேரி.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    Next Story
    ×