search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம் தொடங்கியது
    X

    பிம்மோற்சவம் கொடியேற்றம் நடந்த போது எடுத்தபடம்.

    அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம் தொடங்கியது

    • இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.
    • 16-ந்தேதி திருவூடல் உற்சவம் நடக்கிறது.

    சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பயணம் செய்யும் காலம் தட்சிணாயண புண்ணிய காலம் என்றும், தெற்கில் இருந்து வடக்கு நோக்கி சூரியன் பயணம் செய்யும் காலம் உத்திராயண புண்ணிய காலம் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு சூரியன் தனது பயணத்தை தொடங்கும் காலத்தை சிவாலயங்களில் விழாவாக கொண்டாடப்படுகிறது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா, ஆனி பிரம்மோற்சவம், உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம், தட்சிணாயண புண்ணியகால பிரம்மோற்சவம் ஆகியவற்றின் தொடக்கமாக சாமி சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி நேற்று கொடியேற்றத்துடன் உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம் தொடங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து விநாயகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் ஆகியோருக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சாமி சன்னதியில் இருந்து மேளதாளம் முழங்க தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.

    பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க காலை 6.15 மணி அளவில் தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது கோவிலில் திரண்டிருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு 'அரோகரா' என்று பக்தி கோஷம் எழுப்பினர்.

    விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். நேற்று முதல் தொடர்ந்து 10 நாட்களும் காலை மற்றும் இரவில் விநாயகர், சந்திரசேகரர் மாட வீதி உலா நடைபெறுகிறது. 10-ம் நாளான வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தாமரை குளத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. 16-ந்தேதி (திங்கட்கிழமை) அருணாசலேஸ்வரர் கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவூடல் உற்சவமும், 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மறுவூடல் உற்சவமும் நடைபெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×