search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருச்செந்தூர் கோவிலில் இன்று மாலை ஊஞ்சல் வைபவம் தொடங்குகிறது

    • இன்று முதல் 3 நாட்கள் ஊஞ்சல் வைபவம் நடக்கிறது.
    • 5-ந்தேதி சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவிலை சேர்கின்றனர்.

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முக்கிய திருவிழாவான கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் 6 நாட்களும் பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனைக்கு பின் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்திற்கு வந்து அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது.

    மாலை 3 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாளுக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனைக்கு பின்னர் தங்க தேரில் கிரி வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் மாலையில் நடைபெற்றது

    7-ம் திருநாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. காலை 5 மணிக்கு தெய்வானை அம்பாள் கோவிலில் இருந்து தபசு காட்சிக்கு புறப்பட்டார்.

    மாலை 6.30 மணிக்கு அம்பாளுக்கு, சுவாமி காட்சி அருளி தோள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. நள்ளிரவு 1 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி ராஜ கோபுரம் அருகில் வெகு விமர்சையாக திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் மொய் எழுதினர்.

    இன்று மாலையில் சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம்பல்லக்கிலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.

    2, 3, 4 ஆகிய தேதிகளில் தினமும் மாலை திருக்கல்யாண மண்டபத்தில் குமரவிடங்க பெருமான் தெய்வானை அம்பாளுடன் ஊஞ்சல் காட்சி நடக்கிறது. 5-ந் தேதி (சனிக்கிழமை) 12-ம் திருநாளன்று மாலையில் மஞ்சள் நீராட்டு நடைபெற்று சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவிலை சேர்கின்றனர். அதோடு திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், செந்தில் முருகன், ராமதாஸ், கணேசன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    Next Story
    ×