search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    கொசுவர்த்தியினால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பு: எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்
    X

    கொசுவர்த்தியினால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பு: எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்

    • நுரையீரல் நம் உடலின் முக்கிய உள் உறுப்பு.
    • மூச்சுக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தி உயிரிழப்பை கூட ஏற்படுத்துகின்றது.

    நுரையீரல் என்பது மனித உடலில் இருக்கும் மிக முக்கிய உறுப்பு ஆகும். பாக்டீரியா மற்றும் கிருமித் தொற்றால் நுரையீரல் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. இதனால் மூச்சுக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தி உயிரிழப்பை கூட ஏற்படுத்துகின்றது.

    நுரையீரல் நம் உடலின் முக்கிய உள் உறுப்பு. காற்றில் உள்ள பிராண வாயுவை ரத்தத்தில் சேர்ப்பதும், கரியமில வாய்வை பிரித்து வெளியேற்றுவதும் நுரையீரலின் முக்கியப்பணி.

    மூக்கின் வழியாக நாம் சுவாசிக்கும் காற்று, மூச்சுக்குழல் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். நுரையீரல் பகுதிகளில் பல நுண்கிளைகளாக பிரிந்து மில்லியன் கணக்கான நுண்காற்று பைகள் அமைந்துள்ளன. அவை மென்மையான தசைகளை கொண்டவை.

    இதில் பல நுண்ணிய ரத்தக்குழாய்கள் இருப்பதால் நுரையீரல் தமனி மூலமாக வந்த ரத்தத்தில் உள்ள கரியமில வாயுவை வெளியேற்றி புதிய பிராண வாயுவை ஏற்றுக்கொண்டு சிறைகள் மூலமாக இதயத்துக்கு செல்கிறது. இந்த நுண்ணிய பைகளில் தான் காற்று பரிமாற்றம் நிகழ்கிறது.

    இந்தியாவில் ஒரு கோடி மக்களுக்கு நுரையீரல் பாதிப்பு உள்ளது. இதில் தமிழ்நாட்டை பொறுத்தவரை கிட்டத்தட்ட 40 லட்சம் பேருக்கு நுரையீரல் பாதிப்பு வருகிறது. இதில் சிறு வயதில் இருந்து பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் நுரையீரல் தொற்றினால் பாதிக்கப்படலாம்.

    ஆனால் 30 வயதை கடந்த ஆண்களும், பெண்களும் தான் அதிகமாக நுரையீரல் பாதிப்பினால் பாதிக்கப்படுகின்றனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு 3 காரணங்கள் உண்டு.

    ஒன்று மரபணுக்கள் மூலமாகவோ அல்லது சுற்றுச்சூழல் காரணங்களாகவோ அதாவது காற்று மாசுபாடு, விறகு அடுப்பு பயன்படுத்துவது, கொசுவர்த்தி பயன்படுத்துதல். வெல்டிங் கியாஸ் போன்ற பல காரணங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதினாலும் நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது.

    அதுமட்டுமில்லாமல் உணவுமுறைகளினாலோ அல்லது சூரிய வெளிச்சம் அதிகம் இல்லாத பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கூட நுரையீரல் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

    தற்போது உள்ள காலங்களில் நிறைய பேருக்கு குறைப் பிரசவம் ஏற்படுகிறது இதனால் கூட நுரையீரல் பாதிப்பு ஏற்படலாம். ஏனென்றால் நுரையீரல் வளர்ச்சி என்பது 36 வாரங்கள் கழித்து பிறக்கும் குழந்தைகளுக்கு நன்றாக இருக்கும். ஆனால் அதேநேரத்தில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு நுரையீரல் வளர்ச்சி என்பது மாறுபடும். இதனால் அந்த குழந்தைகள் வளரும்போது அவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படலாம்.

    இந்த நுரையீரல் பாதிப்பு சமீப காலமாக கொரோனா தொற்றுக்கு பிறகு அதிகம் ஏற்பட்டு வருகிறது என்று ஆய்வறிக்கைகள் நமக்கு தெரிவிக்கின்றன.

    நுரையீரல் தொற்று ஏற்படுவதற்கான காரணங்கள்:

    நுரையீரல் தொற்று ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமாக புகைப்பிடிப்பதினால் நுரையீரல் அதிகமாக பாதிக்கப்படுகிறது அதுமட்டுமில்லாமல் கொசுவர்த்தியில் இருந்து ஏற்படும் புகையின் மூலமும் நுரையீரல் பாதிக்கப்படும்.

    ஏனென்றால் கொசுவர்த்தியை ஏற்றிவிட்டு நாம் வீட்டின் கதவை அடைத்துவிடுகிறோம். அந்த புகை இரவு முழுவதும் அறையை சுற்றியே இருக்கும் அந்த காற்றை தான் நாம் சுவாசிப்போம். கொசுவர்த்தி புகையினால் நுரையீரல் பாதிப்பு அதிகம் இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர். இதுவும் கிட்டத்தட்ட புகைப்பிடிப்பதற்கு சமமாகவே கருதப்படுகிறது.

    புகைப்பழக்கத்தால் மூச்சுவிடுவதில் சிரமங்கள் ஏற்படும். நாளடைவில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

    வாய், உதடு, தொண்டை, குரல் வளையம், உணவுக் குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீரகம், கல்லீரல், வயிறு, கணையம் என உடல் உள் உறுப்புகளையும் இது பாதிக்கிறது. எதிர்காலத்தில் இதய ரத்தக் குழாய் அடைப்பு நோய்கள், மாரடைப்பு, பக்கவாதம், ரத்தக் குழாய்கள் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் வருவதற்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது.

    சுவை அரும்புகள் தமது ஆற்றலை இழந்துவிடுவதால், நாளடைவில் உணவின் மீது விருப்பம் குறையத்தொடங்கும்.

    புற்றுநோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. புகையிலை நச்சு யாரையும் விட்டு வைப்பதில்லை, மற்றவர்கள் புகைக்கும் பொழுது வெளிவரும் புகைகூட நச்சு தன்மையுடையது. உயிருக்கு ஊறு விளைவிக்கும்.

    Next Story
    ×