search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் கொலை வழக்கில் 2 பேர் கைது
    X

    விவசாயிகள் கொலை வழக்கில் 2 பேர் கைது

    • ஒரு வருடத்துக்கு பிறகு இந்த கொலை-கொள்ளை வழக்கில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலையை அடுத்த ஒட்டன்குட்டை பகுதியில் கரியாங்காட்டு தோட்டத்தில் வசித்தவர் முத்துசாமி (85). விவசாயி. இவரது மனைவி சாமியாத்தாள் (74). இவ்வூரின் அருகில் தோட்டத்து வீட்டில் விவசாயி முத்துசாமியும், அவரது மனைவி சாமியாத்தாளும் தனியே வசித்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த ஆண்டில் நள்ளிரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த முத்துசாமி மற்றும் அவரது மனைவி சாமியாத்தாள் இருவரையும் இரும்பு ராடு மற்றும் அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு பீரோவை உடைத்து அதிலிருந்து 15 பவுன் தங்க நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்து விட்டு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதேபோல் கடந்த 2022-ல் சென்னிமலை அடுத்துள்ள உப்பிலிபாளையம் பகுதியில் குட்டையகாட்டு தோட்டத்தில் வசித்து வந்த விவசாயி துரைசாமி கவுண்டர் என்பவரை நள்ளிரவில் கொலையாளிகள் படுகொலை செய்து விட்டு அவரது வீட்டில் இருந்த 25 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றனர்.

    இந்த 2 படுகொலை சம்பவங்களை சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வந்தனர். கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு பிறகு இந்த கொலை-கொள்ளை வழக்கில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    நீலகிரி மாவட்டம் எருமாடு பகுதியை சேர்ந்த பாபு என்பவரது மகன் கண்ணன் (25). இவர் இந்த 2 படுகொலை வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் இந்த கொலையை அவரும் மற்ற சிலரும் சேர்ந்து செய்ததாக ஒப்புக்கொண்டனர். பிடிபட்ட கண்ணனிடம் இருந்து அரை பவுன் நகை மட்டும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் உப்பிலிபாளையம் பகுதியில் குட்டைய காட்டுத் தோட்டத்தில் விவசாயி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தஞ்சாவூர் மாவட்டம் மனோஜ் பட்டி, பொதிகை நகரை சேர்ந்த காளியப்பன் மகன் இளையராஜன் (28). இவர் மற்றும் கண்ணன் ஆகிய இருவரிடம் இருந்து 6 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    இவர்கள் 2 பேரும் கடந்த ஒரு மாதங்களாக வேறொரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு கோபி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை போலீசார் சென்னிமலை அழைத்து வந்து தீவிர விசாரணை செய்து இந்த 2 வழக்குகளிலும் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர் அவர்கள் 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×