என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுப.வீரபாண்டியன் பேட்டி அளித்த காட்சி.
    X
    சுப.வீரபாண்டியன் பேட்டி அளித்த காட்சி.

    பெரியார் மண்ணில் காவி கூட்டம் கால் பதிக்க முடியாது - சுப.வீரபாண்டியன் பேட்டி

    கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை மட்டுமே திராவிட இயக்கத் தமிழர் பேரவை ஏற்கும்.

    பல்லடம்:

    பல்லடம் அருகேயுள்ள அருள்புரம், தெற்குபாளையம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை இயக்க கொடியேற்று விழா, மற்றும் குப்புசாமி நாயுடுபுரத்தில் மாவட்ட அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருப்பூர் மாவட்ட செயலாளர் மா.பிரகாஷ் தலைமை வகித்தார்.

    பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரும், மாநில மகளிரணி அமைப்பாளருமான தேன்மொழி, மாநில நிர்வாகிகள் இளங்கோவன், முகில்நிலா மணிகண்டன், குட்டிபழனிசாமி, ஜாகீர், கவியரசு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் நாகக்குமார் வரவேற்றார்.

    மாவட்ட பொருளாளர் தென்றல் சேகர் கூட்ட விளக்க உரை நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர்கள் சிற்பி அர.செல்வராஜ், ஆ.சிங்கராயர், அமைப்பு செயலாளர் கா.சு.நாகராஜன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.

    அலுவலகத்தை திறந்து வைத்து மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில்: நாட்டிற்கு முன்பை விட கூடுதலாக பெரியார் தேவைப்படுகிறார். கர்நாடகா மாநிலத்தில் வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கூறி பொதுக்கூட்டத்தில் பேச வந்து இருந்த பஞ்சாப் மாநில விவசாய சங்க தலைவர்களை அம்மாநில ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் தாக்கியுள்ளனர்.

    சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல் துறை வேடிக்கை பார்க்கிறது. இச்சம்பவம் வேதனையை அளிக்கிறது. இதனை நாம் புறம்தள்ளி விட முடியாது. இந்தியாவில் உள்ள எல்லா மாநிலத்திலும் கால் பதித்து விடலாம் என்று நினைக்கும் காவி கூட்டம் தமிழகத்தில் மட்டும் கால் பதிக்க முடியாமல் தவிக்கிறது. ஆனால் இங்கும் ஏதாவது செய்து மத மோதல்களை உருவாக்கி, சாதி பகையை ஊக்குவித்து தமிழகத்திலும் வந்து விட வேண்டும் நினைக்கிறார்கள் அது நடக்காது. நடக்கவும் கூடாது.

    இது பெரியார் மண்ணாக முதல்வர் சொல்கின்ற திராவிட மாடல் ஆட்சி நடக்கிற மண்ணாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற கருத்தை ஊர் ஊராக, திண்ணை திண்ணையாக எடுத்து செல்லும் பணியை திராவிட இயக்கத் தமிழர் பேரவை செய்யும். ஜனநாயகத்தில், மத நல்லிணக்கத்தில், சமூக நீதியில் ஒத்த கருத்துடையவர்களாக உள்ளவர்கள், மத மறுப்பு, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை மட்டுமே திராவிட இயக்கத் தமிழர் பேரவை ஏற்கும்.

    கடவுள் நம்பிக்கை இருக்கும் சமூக சிந்தனையாளர்களை இழந்து விடக்கூடாது என்பதற்காக தான் திராவிடர் நட்புறவு கழகம் உருவாக்கப்பட்டு எம்மதமும் சம்மதமே என்ற கொள்கையுடன் ஒர் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

    Next Story
    ×