search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அஞ்சலை கைது
    X

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அஞ்சலை கைது

    • பெண் தாதாவான அஞ்சலை ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு ரூ.10 லட்சம் பணத்தை வழங்கி இருப்பதாக தகவல்.
    • புளியந்தோப்பு போலீஸ் நிலையத்தில் உள்ள ரவுடிகள் சரித்திர பதிவேட்டில் அஞ்சலையின் பெயர் உள்ளது.

    பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் ரவுடி கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் திருவேங்கடம் என்ற ரவுடி போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    இந்த நிலையில் போலீசாரால் தேடிவரப்பட்ட பெண் தாதாவான அஞ்சலை புளியந்தோப்பில் இன்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது ஒட்டேரி, புளியந்தோப்பு உள்ளிட்ட காவல் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    பெண் தாதாவான அஞ்சலை ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு ரூ.10 லட்சம் பணத்தை வழங்கி இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதன் அடிப்படையில் போலீசார் அவரை தீவிரமாக தேடிவந்தனர்.

    புளியந்தோப்பு போலீஸ் நிலையத்தில் உள்ள ரவுடிகள் சரித்திர பதிவேட்டில் அஞ்சலையின் பெயர் உள்ளது. கந்து வட்டி வசூலிப்பது தொடர்பாக அவர் மீது புகார்கள் உள்ள நிலையில் பி.வகை ரவுடிகள் பட்டியலில் அஞ்சலை இடம் பெற்றிருக்கிறார். இந்த கொலை வழக்கில் அஞ்சலைக்கு தொடர்பு இருப்பதை தொடர்ந்து பாஜக அவரை கட்சியில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.

    அஞ்சலையைத் தொடர்ந்து மேலும் இரண்டு ரவுடிகளை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ஐஸ் ஹவுஸை சேர்ந்த எல்லப்பன் என்ற ரவுடியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறைவாசிகளுக்கு வெளியில் இருந்து பண உதவி, சிறைவாசிகளிடம் இருந்து வெளியில் தகவல்களை கூறுபவராக எல்லப்பன் செயல்பட்டதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×