என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் மஞ்சப்பை விருது பெற கலெக்டர் அழைப்பு
- அரியலூர் மாவட்டத்தில் மஞ்சப்பை விருது பெற கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்
- விண்ணப்ப படிவத்தில் உள்ள இணைப்புகள் தனிநபர், நிறுவனத் தலைவரால் முறையாக கையொப்பமிடப்பட்டிருக்க வேண்டும்
அரியலூர்:
மஞ்சப்பை விருதுகள் பெற விரும்பும் அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த பள்ளி, கல்லூரிகள் மற்றும் வணிகநிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார். அதன்படி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களான பிளாஸ்டிக் கைப்பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணிப்பை) போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படுத்தும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படும். விருது பெறுவோர்களுக்கு, முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்படும். விண்ணப்ப படிவத்தில் உள்ள இணைப்புகள் தனிநபர், நிறுவனத் தலைவரால் முறையாக கையொப்பமிடப்பட்டிருக்க வேண்டும். கையொப்பமிட்ட பிரதிகள் இரண்டு மற்றும் குறுவட்டு(சிடி) பிரதிகள் இரண்டினை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்க அடுத்த வருடம் மே 1ந் தேதி கடைசி தேதியாகும். இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






