search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாப்செட்கோ மூலம் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்
    X

    டாப்செட்கோ மூலம் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

    • டாப்செட்கோ மூலம் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

    அரியலூர்:

    தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாப்செட்கோ) மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் சமூகப் பொருளாதார நிலையினை மேம்படுத்தும் வகையில் தனி நபர் கடன், பெண்களுக்கான புதிய பொற்கால கடன், பெண்களுக்கான நுண் கடன், ஆண்களுக்கான நுண் கடன் மற்றும் கறவை மாட்டு கடன் ஆகிய பல்வேறு கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரியலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள் வருமாறு:-

    விண்ணப்பத்தாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பினராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். பொது காலக்கடன்/தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு 6 சதவீதம் முதல் 8 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்சம் ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

    பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு 5 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. நுண் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு ஆண்டிற்கு 5 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடன் தொகையாக ரூ.1.25 லட்சமும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. திட்ட அலுவலரால் (மகளிர் திட்டம்) தரம் செய்யப்பட்டு இருத்தல் வேண்டும்.

    நுண் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆடவர் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு ஆண்டிற்கு 4 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடன் தொகையாக ரூ.1.25 லட்சமும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. நுண் கடன் வழங்கும் திட்டத்தில் ஆடவர், மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தி செய்திருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ.30 ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ.60 ஆயிரம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. டாப்செட்கோ திட்டத்தில் கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட மத்திய மற்றும் நகர கூட்டுறவு கிளை வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம்.

    விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பங்களை விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும். மேற்படி திட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்கள் கடன் பெற்று பயன்பெறலாம், என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×