search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அமெரிக்கா பயணம்
    X

    தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அமெரிக்கா பயணம்

    • சிகாகோவில் தமிழர்களை சந்தித்து பேச ஏற்பாடு.
    • 29-ந்தேதி முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பு.

    சென்னை:

    தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை இரவு அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும், இந்திய பொருளாதாரத்துக்கு மிக முக்கிய பங்களிக்கிற மாநிலமாகவும் தமிழ்நாட்டை உயர்த்திடும் பெரும் லட்சிய இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வருகிறார்.

    இதற்காக அவர் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்து வருகிறார்.

    அந்த வகையில் ஏற்னவே முதற்கட்டமாக முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற பெயரில் சென்னை, கோவை, தூத்துக்குடி ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலம் ரூ.1,90,803 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு ரூ.2,80,600 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டது.

    இரண்டாம் கட்டமாக ஐக்கிய அரபு நாடுகள் சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு 17 ஆயிரத்து 371 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துகிற வகையில் 7 ஆயிரத்து 441 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பெறப்பட்டன.

    3-ம் கட்டமாக 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக அரசு நடத்தியது.

    இந்த மாநாடு மூலம் முன் எப்போதும் இல்லாத அளவாக 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளும், 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 13 லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் உருவாக்கப்பட்டது.

    4-ம் கட்டமாக 27.1.2024 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டிற்கு சென்று அங்குள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தக துறை அமைச்சக அதிகாரிகள் தொழில் கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார்.

    இதன் பயனாக ரூ.3,440 கோடி அளவுக்கு தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

    இதன் தொடர்ச்சியாக கடந்த 21-ந்தேதி தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.1,7,616 கோடி முதலீட்டில் 64,968 பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க கூடிய 19 தொழில் திட்டங்களை தொடங்கி வைத்து ரூ.51,157 கோடி முதலீட்டில் அமைய உள்ள 28 தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

    இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க நாளை இரவு அமெரிக்கா செல்கிறார்.

    சென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை இரவு 10 மணி அளவில் அமெரிக்கா புறப்பட்டு 28-ந்தேதி சான்பிரான்சிஸ்கோ நகரை சென்றடைகிறார். அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    அமெர்ரிக்காவுக்கான இந்திய தூதர் மற்றும் அமெரிக்க வாழ் தமிழர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்கிறார்கள்.

    இதைத் தொடர்ந்து 29-ந்தேதி சான்பிரான்சிஸ் கோவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கிறார்.

    அதைத் தொடர்ந்து 31-ந்தேதி புலம் பெயர்ந்த இந்தியர்களுடனான சந்திப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். சிகாகோவில் அமெரிக்க வாழ் தமிழர்களை சந்தித்து பேசுவதற்கும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    அமெரிக்காவில் பல்வேறு நாட்டு தொழில் அதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களை சுமார் 30 இடங்களுக்கு சென்று முதலமைச்சர் சந்தித்து கலந்துரையாடுவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    இதில் அமெரிக்காவில் முன்னணி 500 நிறுவனங்களின் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க பயணத்தை நிறைவு செய்து அடுத்த மாதம் 14-ந்தேதி (செப்டம்பர்) சென்னை திரும்புவார் என தெரிகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அமெரிக்கா செல்வதை யொட்டி கடந்த 2 நாட்களுக்கு முன்பே தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அமெரிக்கா சென்று விட்டார்.

    சிகாகோவில் அமெரிக்க தமிழர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதையொட்டி அது குறித்து சிகாகோவில் அமெரிக்க தமிழ் சங்கங்களின் நிர்வாகிகள், பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.

    இதேபோல் அங்கு நடைபெற உள்ள மற்ற நிகழ்ச்சிகள் குறித்தும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன் ஏற்பாடுகள் செய்து வருகிறார்.

    Next Story
    ×