search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிளாம்பாக்கம் ரெயில் நிலையம்: அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பயன்பாட்டுக்கு வரும்
    X

    கிளாம்பாக்கம் ரெயில் நிலையம்: அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பயன்பாட்டுக்கு வரும்

    • கிளாம்பாக்கத்தில் பஸ் வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும் ரெயில் சேவை இல்லை.
    • விரைவு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் இங்கிருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

    வண்டலூர்:

    வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் சுமார் ரூ.400 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய பஸ்நிலையம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திறக்கப்பட்டது. வெளியூர் செல்லும் அனைத்து விரைவு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் இங்கிருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

    எனினும் கிளாம்பாக்கம் செல்ல மாநகர பஸ் வசதிகள் செய்யப்பட்டு இருந்தாலும் ரெயில் வசதி இல்லை. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் ஊரப்பாக்கம் ரெயில் நிலையத்தில் இறங்கிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் அமைக்க அரசு முடிவு செய்தது.

    அதன்படி மாநில அரசு மற்றும் ரெயில்வே இணைந்து சுமார் ரூ.120 கோடி மதிப்பில் கிளாம்பாக்கத்தில் ரெயில்கள் நின்று செல்லும் வகையில் புதிய ரெயில் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது.

    கிளாம்பாக்கம் பஸ்நிலையத்திற்கு நேர் எதிராக உள்ள இடத்தில் இந்த ரெயில் நிலையம் அமைய உள்ளது.

    மேலும் ரெயில் நிலையத்தில் இருந்து நேரடியாக கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்திற்கு செல்லும் வகையில் உயர்மட்ட நடை மேம்பாலமும் ரூ.79 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளன.

    இந்த நிலையில் கிளாம்பாக்கம் புதிய ரெயில்நிலையம் அமைப்பதற்கு இடத்தை கையகப்படுத்துவதில் சிக்கல் இருந்ததாமல் பணிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

    இந்தநிலையில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்து நேற்று முதல் புதிய ரெயில் நிலையத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. புதிய ரெயில் நிலையம் அமைய உள்ள இடத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    கிளாம்பாக்கம் புதிய ரெயில் நிலையத்தில் 3 நடைமேடைகள் வர உள்ளன. இதில் 2 நடைமேடைகள் மின்சார ரெயில்களுக்கும், ஒருநடைமேடை எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கும் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.

    இதற்கான பணிகள் அனைத்தும் முடிந்து கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


    இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, `நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனையால் ரெயில் நிலைய கட்டுமான பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டடது. ஆனால், சில மாதங்களுக்கு முன்பு அது சரி செய்யப்பட்டது.

    தற்போது ரெயில் நிலையத்திற்கு சுற்றுச்சுவர் கட்டுதல், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, நடைமேடைக்கு மண் நிரப்பும் பணிகள் தொடங்கி உள்ளன. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பணியை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றார்.

    கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும்போது பயணிகளின் போக்குவரத்து வசதி மேலும் எளிதாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×