search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரியில் பலத்த மழை: குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்
    X

    நீலகிரியில் பலத்த மழை: குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

    • நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்து.
    • வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்து. நேற்று ஊட்டி, குன்னூர், கூடலூர், பந்தலூர், தேவாலா, கோத்தகிரி, பாடந்தொரை, சேரங்கோடு உள்பட மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது.

    குறிப்பாக அவலாஞ்சியில் 34 செ.மீ மழையும், அப்பர்பவானியில் 21 செ.மீ அளவுக்கு மழை பதிவாகி உள்ளது. மேலும் ஒரே நாளில் 5 இடங்களில் 10 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்துள்ளது.

    கனமழை காரணமாக அவலாஞ்சி பகுதியில் உள்ள லாரன்ஸ், கப்பத்துரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

    அங்கு பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கேரட் பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தன.

    இதுமட்டுமின்றி அறுவடைக்கு தயாராக இருந்த பூண்டு செடிகளில் தண்டு உடைந்து வீணானது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    ஊட்டி நகரிலும் கனமழை பெய்தது. இந்த மழைக்கு ஊட்டி நகரின் மத்திய பகுதியான பிரிக்ஸ் பள்ளி அருகே ராட்சத மரம் சாலையில் விழுந்தது. தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.

    பிங்கர் போஸ்ட் பகுதியில் மின்கம்பம் முறிந்து கீழே விழுந்ததில் கார் மற்றும் ஆட்டோ சேதமடைந்தது. ஊட்டி பெர்ன்ல் பகுதியிலும் மரம் விழுந்து, அது உடனடியாக அகற்றப்பட்டது.

    கூடலூர், பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று காலை முதல் இரவு வரை கனமழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது.

    கூடலூர் தொரப்பள்ளி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இருவயல் பகுதிக்குள் வெள்ளம் புகுந்தது. அங்குள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததுடன் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

    மேலும் தொரப்பள்ளியில் இருந்து இருவயல் செல்லும் சாலையில் மூங்கில்கள் கொத்தாக சரிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அத்துடன் மூங்கில் முறிந்து விழுந்ததில் மின்கம்பங்களும் சேதம் அடைந்து, அந்த பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

    இதனால் அந்த பகுதியே இருளில் மூழ்கியது. பல மணி நேரங்களுக்கு பிறகு இடர்பாடுகள் சரி செய்யப்பட்டு, மின்சாரம் வழங்கப்பட்டது.

    மேல் கூடலூரை அடுத்துள்ள கோக்கால் மலை பகுதியில் உள்ள குடியிருப்புகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 50 வீடுகளில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. மேலும் அங்குள்ள சாலைகளிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனேயே உள்ளனர்.

    மாயாறு, பாண்டியாற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மாயாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் 2-வது நாளாகவும் தெப்பக்காடு தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள குந்தா அணை, அவலாஞ்சி அணை, அப்பர் பவானி அணை உள்பட அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இதில் குந்தா அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    குந்தா அணையின் மொத்த கொள்ளளவான 89 அடியும் நிரம்பி வழிகிறது.அணைக்கு வினாடிக்கு 300கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 2 மதகுகள் வழியாக 150 கன அடி உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

    குந்தா அணை திறக்கப்பட்டதை அடுத்து கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் ஆற்றில் இறங்கவோ, ஆற்றின் அருகே செல்லவோ வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் பெய்யும் தொடர் மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் கூடலூருக்கு விரைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    அவலாஞ்சி-339, அப்பர் பவானி-217, பந்தலூர்-136, தேவாலா-152, சேரங்கோடு, எமரால்டு-125, குந்தா-108, பாடந்தொரை-102, ஓவேலி-98, கூடலூர்-97, செருமுள்ளி-96, அப்பர் கூடலூர்-95, பாலகொலா-67, ஊட்டி, நடுவட்டம்-58.

    Next Story
    ×