என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண் விவசாயி வீட்டில் நகை-பணம் திருட்டு
- பெண் விவசாயி வீட்டில் நகை-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
- ஸ்கூட்டரில் வைத்த சாவியை எடுத்து கைவரிசை
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே எளம்பலூர் ஊராட்சிக்கு உட்பட்ட தண்ணீர்பந்தல் எம்.ஜி.ஆர். நகர் வடக்கு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி அருக்காணி (வயது 36). இவர் அருகே உள்ள ஒருவருக்கு சொந்தமான வயலை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். நேற்று அருக்காணி தனது வீட்டை பூட்டி விட்டு, அதன் சாவியை வீட்டிற்கு முன்புறம் நிறுத்தி இருந்த, அவரது ஸ்கூட்டரில் வைத்து விட்டு, வயலுக்கு சென்று விட்டார். பின்னர் மதியம் 1.50 மணிக்கு வயலில் இருந்து திரும்பி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த 3 பவுன் தங்க நகைகள், ரூ.30 ஆயிரம் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மர்மநபர்கள் நோட்டமிட்டு ஸ்கூட்டரில் இருந்த வீட்டின் சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்று நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அருக்காணி இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.






