என் மலர்
உள்ளூர் செய்திகள்

11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு இன்று தொடங்கியது
- அனைத்துப் பள்ளிகளிலும் தேர்வுக்குத் தேவையான ஆய்வகப் பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
- தேர்வில் ஏதேனும் புகார்கள் கிடைக்கப்பெற்றால் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் பொறுப்பேற்க நேரிடும்.
சென்னை:
தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ்-1, பிளஸ்-2, பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 20-ந் தேதி வரை நடத்தப்படவுள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதவுள்ள பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று தொடங்கியது மார்ச் 9-ந் தேதி (வியாழக்கிழமை) வரை நடைபெற உள்ளது.
மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேலான மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் சுமார் 17 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்று செய்முறை பயிற்சிகளை மேற்கொண்டனர். சென்னை மாவட்டத்தில் மட்டும் சுமார் 95 ஆயிரம் மாணவ-மாணவிகள் செய்முறைத் தேர்வெழுதினார்கள்.
இதற்காக அனைத்துப் பள்ளிகளிலும் தேர்வுக்குத் தேவையான ஆய்வகப் பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கொண்டு எந்த குளறுபடியுமின்றி செய்முறைத் தேர்வை நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, தேர்வுத்துறை வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாடவாரியாக அட்டவணை தயாரித்து வரும் 9-ந் தேதிக்குள் செய்முறை தேர்வை நடத்த வேண்டும். ஒரு சுற்றுக்கு அதிகபட்சம் 25 முதல் 30 மாணவர்களை மட்டுமே அனுமதிப்பதுடன், தேர்வுத்துறை சலுகை அறிவித்த மாணவர்களுக்கு மட்டும் செய்முறைத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
மேலும், தேர்வில் ஏதேனும் புகார்கள் கிடைக்கப்பெற்றால் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் பொறுப்பேற்க நேரிடும்.
எனவே, கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பது உள்பட ஒருசில அறிவுறுத்தல்களை பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ளது.






