என் மலர்
உள்ளூர் செய்திகள்

அறந்தாங்கி அருகே நண்பர்களுடன் கடலில் குளித்த மாணவன் பிணமாக மீட்பு
- அறந்தாங்கி அருகே நண்பர்களுடன் கடலில் குளித்த மாணவன் பிணமாக மீட்கபட்டான்
- தஸ்லீம் நீரோட்ட பகுதியில் சிக்கி கடலின் உள்ளே இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த பைசல்கான் (வயது19), இவரது நண்பர்களான ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முசாமைதீன், காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் தஸ்லீம் (17), ஹரிஸ் (17), இவர்கள் 4 பேரும் காரைக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். தஸ்லீம் உட்பட 3 பேரும் பொங்கல் பண்டியையை கொண்டாடவும், கடற்கரை பகுதியை சுற்றி பார்க்க கோட்டைப்பட்டினம் பகுதியில் உள்ள தனது நண்பரான முகமதுபைசல்கான் வீட்டிற்கு 15-ந் தேதி வந்துள்ளனர்.
இந்நிலையில் கோட்டைப்பட்டினத்தில் உள்ள பைசல்கான் வீட்டில் ஒன்று சேர்ந்த நண்பர்கள் 4 பேரும், அருகே உள்ள மணமேல்குடி கோடியக்கரை கடல் பகுதிக்கு குளிக்க சென்றுள்ளனர். அங்கு நீரோட்டம் நிறைந்த பகுதி என்று அறியாத அவர்கள் தொடர்ந்து கடலின் உள்பகுதியில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது தஸ்லீம் நீரோட்ட பகுதியில் சிக்கி கடலின் உள்ளே இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அதனை பார்த்து பதறிய நண்பர்கள் காப்பாற்ற சொல்லி கதறியுள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், கடலோர பாதுகாப்பு போலீசார் மற்றும் மீனவர்கள் இணைந்து படகின் மூலம் கடலில் தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட தேடுதலுக்கு தஸ்லீம் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து மணமேல்குடி காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி நண்பர் வீட்டிற்கு சென்ற பள்ளி மாணவர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






