என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலங்குடி அருகே பள்ளி மாணவர்கள் மோதல்-மூன்று பேர் படுகாயம்
- ஆலங்குடி அருகே பள்ளி மாணவர்கள் மோதலில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்
- உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
ஆலங்குடி:
ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இம்மாணவர்களுக்கிடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காமராஜர் சிலை பஸ் ஸ்டாப் அருகே பள்ளி மாணவர்கள் ஒருவருக்கொருவர் கட்டையால் தாக்கிக் கொண்டனர். இதில் கவி, பிரபஞ்சன் என்ற இரு மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாங்கோட்டை பகுதியில் மீண்டும் பள்ளி மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில் மாங்கோட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்த அஜிந்திரன் (22), நவீன் (16), விஸ்வா (17) ஆகியோரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த இரு தரப்பு மாணவர்களைச் சேர்ந்த உறவினர்கள் மாங்கோட்டை விளக்கு ரோட்டில் பஸ் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீஸ் டி.எஸ்.பி தீபக் ரஜினி மற்றும் காவல் ஆய்வாளர் அழகம்மை ஆகியோர் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.






