search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மெரினாவில் 132 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி: மாநகராட்சி நடவடிக்கை
    X

    மெரினாவில் 132 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி: மாநகராட்சி நடவடிக்கை

    • நாய் வளர்ப்பவர்கள் ரேபிஸ் தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.
    • நாய்களுக்கு குடற்புழு நீக்கத்துக்கான ஊசியும் போடப்பட்டது.

    சென்னை:

    சென்னையில் சிறுவர்-சிறுமிகளை தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் விரட்டி கடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. சமீபத்தில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவனை 2 நாய்கள் கடித்து குதறின.

    கடந்த 1-ந்தேதி புழலில் 12 வயது சிறுவன் மற்றும் கே.கே.நகரில் 16 வயது சிறுவன் ஆகியோரை நாய்கள் கடித்தன. இந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தன.

    இதையடுத்து தெருக்களில் சுற்றித் திரியும் நாய்கள் மற்றும் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் நடவடிக்கையை சென்னை மாநகராட்சியும், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியமும் இணைந்து மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர். இதற்காக மெரினா கடற்கரையில் சுற்றித் திரிந்த நாய்களை பிடிக்கும் பணியில் நாய் பிடிப்பவர்கள் 15 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். 2 வண்டிகளில் அந்த நாய்கள் பிடிக்கப்பட்டன.

    இதில் 26 செல்லப் பிராணிகள் உள்பட 132 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது. மேலும் நாய்களுக்கு குடற்புழு நீக்கத்துக்கான ஊசியும் போடப்பட்டது. இதற்காக செல்லப் பிராணிகளை வளர்ப்ப வர்கள் தங்கள் செல்லப் பிராணிகளை அங்கு கொண்டு வந்திருந்தனர்.

    வளர்ப்பு நாய்களை பொது இடங்களுக்கு அழைத்து செல்வதற்கும், அதை வளர்ப்பதற்கான அனுமதியை பெறுவதற்கும் ரேபிஸ் தடுப்பூசி கட்டாயம் என்பதால் நாய் வளர்ப்பவர்கள் ரேபிஸ் தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.

    கடந்த மே மாதம் முதல் இதுவரை நாய் வளர்ப்பதற்காக 4,345 உரிமங்களை சென்னை மாநகராட்சி ஆன்லைன் மூலம் வழங்கியுள்ளது. மேலும் 2,196 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. 9,700 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

    Next Story
    ×