search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவிட்-19 பரவலால் வேலையிழந்து நாடு திரும்பியவர்களுக்கு 25 சதவீத மானியத்துடன் தொழில் தொடங்க கடனுதவி
    X

    கோவிட்-19 பரவலால் வேலையிழந்து நாடு திரும்பியவர்களுக்கு 25 சதவீத மானியத்துடன் தொழில் தொடங்க கடனுதவி

    • இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
    • கலெக்டர் வளர்மதி தகவல்

    ராணிப்பேட்டை:

    கோவிட்-19 (கொரோனா) பெருந்தொற்று பரவலால் வெளிநாட்டில் வேலையிழந்து நாடு திரும்பிய புலம்பெயர் தமிழர்களுக்கு வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு "புலம்பெயர்ந்தோர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்" என்ற திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்து கோவிட்-19 பெருந்தொற்று பரவலால் வேலையிழந்து நாடு திரும்பிய தமிழர்கள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் இணைந்த கடனுதவி பெற்று பயன்பெறலாம்.

    அவர்கள் கோவிட்-19 பெருந்தொற்று பரவலினால் 01.01.2020 அன்று அல்லது அதற்கு பிந்தைய நாட்களில் தமிழகம் திரும்பியவராக இருக்க வேண்டும், குறைந்தது 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,பொது பிரிவினருக்கு வயது 18 க்கு மேலாகவும் 45 க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

    சிறப்பு பிரிவினருக்கு (பெண்கள், SC, ST, BC, MBC, சிறுபான்மையினர், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு) வயது 18 க்கு மேலாகவும் 55 க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

    வியாபார மற்றும் சேவை தொழில் திட்டங்களுக்கு அதிகபட்ச திட்ட மதிப்பீடு ரூ.5 லட்சம் ஆகவும் உற்பத்தி தொழில் திட்டங்களுக்கு ரூ.15 லட்சம் வரை திட்ட மதிப்பீடாக இருக்க வேண்டும்.

    பயனாளர்கள் பங்காக பொது பிரிவு பயனாளர்கள் எனில் திட்ட தொகையில் 10 சதவிகிதம் மற்றும் பெண்கள், இடஒதுக்கீட்டு பிரிவினர் உள்ளட்ட சிறப்பு பிரிவினர் எனில் 5 சதவிகிதம் செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகை வங்கிக் கடனாக வழங்கப்படும். அரசு, திட்டத் தொகையில் 25 சதவிகிதம் அதிகபட்சம் ரூ.2.5 லட்சம் மானியமாக வழங்கப்படும்.

    இத்திட்டம், மாவட்ட தொழில் மையம் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற www.msmeonline.tn.gov.in/meap என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் விண்ணப்பத்தினை இரு நகல்களாக சமர்பிக்க வேண்டும்.

    எனவே, இந்த வாய்ப்பினை வெளிநாடுகளிலிருந்து கோவிட்-19 பெருந்தொற்று பரவலால் வேலையிழந்து நாடு திரும்பிய ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியும், தொழில் துவங்க ஆர்வமும் கொண்டோர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் வளர்மதி அழைப்பு விடுத்துள்ளார்.

    மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், எண்.5, தேவராஜ் நகர்,ராணிப்பேட்டை அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது கீழ் கண்ட தொலைபேசி எண்கள் 04172-270111/270222. மூலமாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    Next Story
    ×