search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மின்சாரம் தாக்கி பலியான வாலிபர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
    X

    மின்சாரம் தாக்கி பலியான வாலிபர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

    • அரசு ஆஸ்பத்திரி பிரதான நுழைவு வாயில் முன்பு திரண்டு அங்கு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • நுழைவு வாயில் முன்பு கல்லூரி பஸ்கள் நிறுத்தப்பட்டன.

    சேலம்:

    சேலம் பள்ளப்பட்டி முனியப்பன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (27). இவர் சேலம் கல்லாங்குத்து பகுதியில் நேற்று இரவு ஒரு சூப் கடைக்கு தகர சீட்டு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தகர சீட்டை எடுத்தபோது மேலே சென்று கொண்டிருந்த மின் கம்பியில் தகர சீட்பட்டு மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு அங்கு இருந்தவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் ஆஸ்பத்திரியில் சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பலியான வாலிபர் தினேசுக்கு திருமணம் ஆகி சந்தியா (25) என்ற மனைவியும், 1½ வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.

    மனைவி சந்தியா கையெழுத்து போட்டால் தான் தினேஷ் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும். இதற்காக தினேஷ் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தனது கணவர் உடலை வாங்க மறுத்து சந்தியா மற்றும் அவரது உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிரதான நுழைவு வாயில் முன்பு திரண்டு அங்கு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அப்போது ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்து அரசு நர்சிங் கல்லூரி மற்றும் அரசு மருத்துவ கல்லூரி பஸ் ஆகியவை வெளியே செல்வதற்காக புறப்பட்டு வந்தது. அப்போது நுழைவு வாயில் வரை வந்த பஸ்கள் நுழைவு வாயில் முன்பு மக்கள் அமர்ந்து போராட்டம் செய்ததால் பஸ்கள் செல்ல முடியவில்லை. இதனால் நுழைவு வாயில் முன்பு கல்லூரி பஸ்கள் நிறுத்தப்பட்டன.

    இது குறித்து தகவல் அறிந்ததும் சேலம் டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா தலைமையிலான போலீசார் அங்கு வந்து சந்தியா மற்றும் அவரது உறவினர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அனைவரும் தர்ணா போராட்டத்தை கைவிடுமாறும், உங்களது கோரிக்கைகள் குறித்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர்.

    அப்போது சந்தியா கண்ணீர் மல்க கூறுகையில், எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. எனது கணவர் இறந்து விட்டதால் வருமானத்திற்கு வேறு வழியில்லை. எனவே இழப்பீடாக ரூ.30 லட்சம் சம்பந்தப்பட்ட ஓட்டல் உரிமையாளர் வழங்க வேண்டும். அப்போது தான் எனது கணவர் உடலை வாங்குவேன் என்றார்.

    இதனால் அவரிடம் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் ஆஸ்பத்திரி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×