search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடல் சீற்றம் : தூத்துக்குடியில் 3,600 நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டன
    X

    கடல் சீற்றம் : தூத்துக்குடியில் 3,600 நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டன

    • சுமார் 20 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
    • மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரை காற்று வீசக்கூடும்

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியதாழை முதல் வேம்பார் வரை உள்ள கடற்கரை கிராமங்களில் இன்று இரவு 11.30 மணி வரை கடலில் 2.4 மீட்டர் முதல் 2.7 மீட்டர் வரை பேரலைகள் உயரமாக எழும்ப வாய்ப்பு இருப்ப தாலும், மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரை காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, இன்று கடற்கரையோர கிராமங்களில் வசிப்பவர்கள் கடலின் அருகில் செல்லவோ, நடைபயிற்சி மேற்கொள்ளவோ வேண்டாம் எனவும், காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என கூறிஇருந்தார்.

    அதன்படி, இன்று பெரியதாழை கடற்கரை முதல் வேம்பார் வரையிலும் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. திரேஸ்புரம், பெரியதாழையில் சுமார் 3,600 நாட்டுப்படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் சுமார் 20 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நேரடி யாகவும், மறைமுகமாகவும் சுமார் 30 ஆயிரம் மீனவர்கள் இன்று வேலையில்லாமல் இருந்தனர்.

    நெல்லை மாவட்டத்தில் கூடுதாழை முதல் கூட்டப்புளி வரையிலும் கடல் அலைகள் அதிக அளவில் எழும்பியதால் அந்த பகுதிகளில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கவனமுடன் சென்று வர கலெக்டர் கார்த்திகேயன் அறிவுறுத்தினார். அந்த பகுதிகளில் மீனவர்கள் இன்று வழக்கம்போல் மீன்பிடிக்க சென்றனர்.

    Next Story
    ×