என் மலர்
உள்ளூர் செய்திகள்

டிராக்டர் மூலம் செண்டுமல்லி பூச்செடிகளை அழித்த விவசாயி.
செண்டு மல்லி விலை தொடர்ந்து சரிவு: செடிகளை டிராக்டர் மூலம் அழித்த விவசாயிகள்- மலர் வாசம் மறைந்து மண்வாசம் மட்டுமே வீசியது
- அரை ஏக்கர் பரப்பளவில் விவசாயி ஒருவர் செண்டுமல்லி பயிரிட்டு இருந்தார்.
- செண்டுமல்லி ஒரு கிலோ 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் விவசாயத்தை நம்பியே உள்ளன. அவற்றில் நெல், ராகி, கரும்பு அதற்கு அடுத்தபடியாக பூக்கள் விளைச்சல் தான் மாவட்டம் முழுவதும் அதிக அளவில் நிறைந்து காணப்படுகிறது. உள் மாவட்ட தேவைக்கும், வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கும் அதிக அளவில் ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக சம்பங்கி, குண்டுமல்லி, சாமந்தி, செண்டுமல்லி உள்ளிட்ட பூ வகைகளும் அடங்கும். பூக்கள் பயிரிடும் விவசாயிகள் ஒரு சில நேரங்களில் விலை கை கொடுத்தாலும் மற்ற நேரங்களில் அதற்கான செலவினங்கள் மற்றும் நோய் தாக்குதலால் பெரிதும் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் நாகாவதி அணையை ஒட்டி உள்ள பகுதியில் வருடம் முழுவதும் அதிக அளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.
அதே போல் அங்கு சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் விவசாயி ஒருவர் செண்டுமல்லி பயிரிட்டு இருந்தார்.
செடிகள் நன்கு வளர்ந்து பூ பூத்த தருணத்தில் விலை குறைவு மற்றும் தொடர் நோய் தாக்குதல், மேலும் பூக்களை பறிப்பதற்கு ஆள்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு பறித்தாலும் பூ விலை சரிவால் பறிக்கின்ற பூக்களுக்கு கூலி கூட கொடுக்க முடியாத நிலை உள்ளது. தற்பொழுது செண்டுமல்லி ஒரு கிலோ 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் செண்டுமல்லி தோட்டத்தை தொடர்ந்து பராமரிக்கும் சிக்கல் மற்றும் செலவினங்களை யோசித்து விவசாயி ஒருவர் மாற்றுப்பயிரிட முடிவு செய்து பூக்கள் பூத்திருந்த செண்டுமல்லி தோட்டத்தை அப்படியே டிராக்டர் வைத்து உழுதுவிட்டார். பூக்கள் பயிரிடும் விவசாயிகளுக்கு ஒரு சில நேரத்தில் விலை ஏறுமுகத்தில் இருந்தாலும் மற்ற நேரங்களில் தொடர் சரிவால் அதிக அளவு நஷ்டமும் ஏற்படுகிறது.
இதற்காக விவசாயிகள் முன்னெச்சரிக்கையாக அதற்கு ஏற்ப பூக்கள் காய்கறிகள் உள்ளிட்டவற்றை சரியான தருணத்தில் பயிரிட்டு விலை சரிவு மற்றும் நஷ்டம் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொண்டால் மட்டுமே நஷ்டத்தை தடுக்க முடியும்.






