search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மண்ணச்சநல்லூர் அருகே காதலனுடன் தங்கி இருந்த சிறுமி மர்ம மரணம்- போலீசார் விசாரணை
    X

    மண்ணச்சநல்லூர் அருகே காதலனுடன் தங்கி இருந்த சிறுமி மர்ம மரணம்- போலீசார் விசாரணை

    • காதலனிடம் இருந்து பிரித்தால் தற்கொலை செய்வேன் என மிரட்டியதாக தெரிகிறது.
    • எதுவாக இருந்தாலும் பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருச்சி:

    திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவரங்கபட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி வித்யா. இந்த தம்பதியரின் மகள் கோபிகா (வயது 17 ). இவர் பிளஸ் 2 வரை படித்துள்ளார்.

    ராமசந்திரன்-வித்யா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுக்கு முன்பு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதனால் வித்யா மகள் கோபிகாவுடன் தனியாக வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் கோபிகாவுக்கும் திருப்பைஞ்ஞீலீ அடுத்துள்ள மூவராயன் பாளையம் மேலூர் கிராமத்தை சேர்ந்த வரதராஜ்-தனலெட்சுமி தம்பதியரின் மகன் நவீனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. வரதராஜ் வடக்கு சித்தாம்பூர் பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் கோபிகா மற்றும் நவீன் இருவரும் மண்ணச்சநல்லூரில் உள்ள அரசு பள்ளியில் வந்த போது பத்தாம் வகுப்பில் இருந்து காதலித்து வந்துள்ளனர். மேலும் 12-ம் வகுப்பை முடித்தவுடன் நவீன் கோபிகாவை அழைத்து கொண்டு பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார். கோபிகாவும் நவீன் வீட்டிற்கு அடிக்கடி சென்று வர இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் கோபிகாவின் தாயார் வித்யா இருவரையும் நேரில் கண்டித்துள்ளார். இதையடுத்து கோபிகா தாயாருடன் வாக்குவாதம் செய்து காதலன் நவீனுடன் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் வித்யா மேலூர் சென்று ரெண்டு பேரும் மேஜர், எனவே இது சட்டப்படி தவறு என அறிவுரை கூறி மகளை அழைத்து வந்தார். பின்னர் ஒரு வாரம் கழித்து மீண்டும் காதலனை தேடி சென்று விட்டார். பின்னர் மீண்டும் வித்யா தனது மகளை வீட்டுக்கு அழைத்து வந்தார்.

    அதன் பின்னர் மீண்டும் காதலனை தேடிச்சென்ற கோபிகா தன்னை காதலனிடம் இருந்து பிரித்தால் தற்கொலை செய்வேன் என மிரட்டியதாக தெரிகிறது.

    இதனால் பயந்து போன தாயார் மகளின் விருப்பத்திற்கு அவரை விட்டு விட்டார்.

    இதையடுத்து நவீன் தன்னை நாடி வந்த காதலிகாக ஶ்ரீரங்கம் பூ மார்க்கெட்டில் மாலை கட்டும் வேலைக்கு சேர்ந்து வேலை செய்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் 3 மாதம் ஒன்றாக இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று நவீன் தீபாவளி பண்டிகைக்காக ஆடை எடுக்க திருச்சிக்கு சென்றுவிட்டார். நவீனின் பாட்டி வயல் வேலைக்கு சென்று மீண்டும் வீட்டிற்கு வந்தார். வீட்டின் கதவை திறந்தபோது வீட்டில் உள்ள மின் விசிறியில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியவாறு கோபிகா பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து பாட்டி கத்தி கூச்சலிட்டு அழுதார். அக்கம்பக்கத்தினர் வந்து தூக்கில் தொங்கியவாறு பிணமாக இருந்த கோபிகாவை மீட்டனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த மண்ணச்சநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரி மற்றும் போலீசார் ராமஜெயம் உள்ளிட்டோர் கோபிகாவின் உடலை கைப்பற்றி ஶ்ரீரங்கம் அரசு மருத்துவமருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

    கோபிகா தற்கொலை செய்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீஷ்வரி விசாரணை நடத்தி வருகிறார்.

    இதனிடையே வித்யா தனது மகளின் சாவில் சந்தேகம் உள்ளதாக புகார் அளித்தார். மேலும் அவரது உறவினர்கள் மணச்சநல்லூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உண்மையை கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நேரம் கழித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இது குறித்து விசாரணை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,

    அக்கம் பக்கத்தில் விசாரித்த போது நவீன்-கோபிகா ஆகியோருக்கு இடையே எந்த தகராறும் ஏற்பட்டதில்லை என தெரிவித்தனர். நேற்று கோபிகா தனது தாயாரை செல்போனில் தொடர்பு கொண்டு தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறியுள்ளார்.

    அதன் பின்னர் நவீன் வெளியே சென்ற நேரத்தில் அவர் தற்கொலை செய்ததாக தெரிகிறது. எதுவாக இருந்தாலும் பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காதலனுடன் வசித்து வந்த சிறுமி மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் மணச்சநல்லூர் மற்றும் மேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×