என் மலர்
உள்ளூர் செய்திகள்

காங்கயம் அருகே நடுரோட்டில் அரசு பஸ்சை வழிமறித்து டிரைவரை சரமாரி தாக்கிய போதை வாலிபர்கள்
- போதை வாலிபர்கள் மீண்டும் பேருந்துக்கு வழி விடாமல் சென்றுள்ளனர்.
- போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவான வாலிபர்களை தேடி வருகின்றனர்.
காங்கயம்:
ஈரோட்டில் இருந்து பழனிக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. பேருந்தை டிரைவர் மேகநாதன் ஓட்டினார். இந்தநிலையில் அரச்சலூர் அருகே வடபழனி பகுதியில் இருந்து இளைஞர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் போதையில் வந்தனர். அவர்கள் அரசு பேருந்திற்கு வழிவிடாமல் சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பேருந்து ஓட்டுனர் இளைஞர்களின் வாகனங்களை நோக்கி ஹாரன் அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போதை வாலிபர்கள் மீண்டும் பேருந்துக்கு வழி விடாமல் சென்றுள்ளனர்.
இந்தநிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அரசு கலைக்கல்லூரி பஸ் நிறுத்தத்தில் மாணவர்களை ஏற்றி கொண்டு பேருந்து புறப்பட்ட போது இருசக்கர வாகனங்களில் வந்து பேருந்தை வழிமறித்த போதை வாலிபர்கள் சட்டை இல்லாமல் அரை குறை ஆடையுடன் டிரைவருடன் ரகளையில் ஈடுபட்டனர்.
பின் டிரைவர் மேகநாதன் சட்டையை பிடித்து இழுத்து நடுரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கினர். பயணிகள் இளைஞர்களிடமிருந்து டிரைவரை மீட்டனர்.இது குறித்து டிரைவர் மேகநாதன் காங்கேயம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவான வாலிபர்களை தேடி வருகின்றனர்.
இதனிடையே அரசு பஸ் டிரைவர் தாக்கப்படுவதை பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






