search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெலவெலத்து போகும் - தமிழிசை கணிப்பு
    X

    2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெலவெலத்து போகும் - தமிழிசை கணிப்பு

    • காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வந்தது மிகப்பெரிய வெற்றி.
    • மோடி போன்ற இயற்கையான தலைவர்களைத் தான் நாட்டு மக்கள் எதிர்பார்ப்பார்கள்.

    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக புதுச்சேரி முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மழையிலிருந்து மக்களை பாதுகாப்பது ஒரு புறம் என்றாலும், குளங்களை தூர்வாரி குடிநீரை சேமித்திருக்க வேண்டும். பெரியாறு அணையில் குழாய்கள் உடைந்துள்ளதால் குடிநீர் வீணாகி விட்டது. குடி தண்ணீர் இல்லாமல் குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்து விட்டதால் பிரச்சனை அதிகமாகி விட்டது. தி.மு.க. அரசு சென்னை, மதுரை, திருச்சி என அனைத்து மாவட்டங்களையும் மழைக்கு தயார் செய்வதில் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது.

    உதயநிதி வார் ரூமில் அமர்ந்து விட்டதால் மழைக்கான ஏற்பாடுகளை செய்து விட்டது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். விடியா அரசு இன்று விளம்பர அரசாக மாறிவிட்டது. மிகப்பெரிய வானியல் சாகசத்தை கூட மக்கள் மகிழ்ச்சியுடன் பார்க்கக்கூடிய ஏற்பாடுகளை செய்ய முடியாத அரசு எதற்கெடுத்தாலும் விளம்பரம் தான். அன்னை மீனாட்சி நம்மை காப்பாற்றுவாள், ஆனால் இந்த தி.மு.க. ஆட்சி நம்மை காப்பாற்றுமா என்றுதான் கவலையாக உள்ளது. தி.மு.க. ஆட்சியில் பருப்பு கூட வேகாது போல உள்ளது.

    காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வந்தது மிகப்பெரிய வெற்றி. அரியானாவில் உள்ள வாக்கு சதவீதத்தை தி.மு.க.வும், காங்கிரசும் ஆராய்கிறது. ஆனால் வெற்றி பெற்ற கூட்டணியை விட காஷ்மீரில் பா.ஜ.க. 25 சதவீதம் கூடுதலாக பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 7 சதவீதத்திற்கு சுருங்கி விட்டது. காங்கிரசுக்கு எதிர்காலமே இல்லை. ராகுல் காந்தி மிகப்பெரிய தலைவராக உருவெடுத்து விட்டார் என்று சொன்னார்கள். ஆனால் செயற்கைத் தலைவர்களை உருவாக்க முடியாது.

    மோடி போன்ற இயற்கையான தலைவர்களைத் தான் நாட்டு மக்கள் எதிர்பார்ப்பார்கள். மத்திய அரசின் திட்டங்களை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள், தி.மு.க. ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தான் நமது கருத்து. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கதிர் சக்தி திட்டம் கொண்டு வந்தபோது அதை நான் முழுவதும் வரவேற்றேன். தேசத்தை சின்ன சின்ன விஷயங்களில் கூட பிரதமர் முன்னெடுத்து செல்வதற்கு இது மிகப்பெரிய உதாரணம்.

    ரெயில் விபத்து மத்திய அரசின் சதி என்ற குற்றச்சாட்டுக்கு ராகுல் காந்தியை வன்மையாக கண்டிக்கிறேன். வான்சாகத்தின்போது ஐந்து பேர் உயிரிழந்தபோது அவர் எங்கே சென்று இருந்தார். கள்ளக்குறிச்சியில் 65 பேர் உயிரிழந்தபோது ராகுல் எங்கே சென்று இருந்தார். வான் சாகசத்தில் உயிரிழந்த சம்பவம் போல பா.ஜ.க. ஆளுகின்ற மாநிலத்தில் நடந்திருந்தால் ஸ்டாலின்தான் முதலில் குரல் கொடுத்திருப்பார். அவரைப் போல் தான் ராகுல் காந்தியும் தமிழகத்தில் நடக்கிற அசம்பாவிதத்திற்கு குரல் கொடுக்க மாட்டார். அதனால் தான் காஷ்மீரில் மக்கள் காங்கிரசுக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.

    ரெயில் விபத்துகளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். ஆனால் வான் சாகசத்தில் உயிர் இழந்ததை அரசியலாக்க கூடாது என்று சொல்கிறார்கள். ஆனால் தி.மு.க. எதை எடுத்தாலும் அரசியலாக்கும். தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளே அதற்கு எதிராக திரும்பி இருக்கிறார்கள். 2026 தேர்தலில் நிச்சயமாக இதே தி.மு.க. கூட்டணி நிலைக்காது. சாம்சங் விவகாரத்தை வைத்து கம்யூனிஸ்ட் வேறு எங்கோ செல்கிறார்கள். மதுவிலக்கு பிரச்சனையை வைத்து வி.சி.க. ஒரு புறம் செல்கிறார்கள். தங்களுக்கும் ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும் என்று தம்பி கார்த்திக் சிதம்பரம் இப்போதுதான் கொஞ்சம் தைரியம் வந்து பேசி இருக்கிறார். 2026 தேர்தலுக்கு தி.மு.க. கூட்டணிக்கு ஆட்சியில் பங்கு கொடுக்கவில்லை என்றால் தி.மு.க. கூட்டணி வெலவெலத்து போகும்.

    அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி குறித்து திண்டுக்கல் சீனிவாசன் பேசியது, தேர்தல் வரும்போது எது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், எதைப் பற்றி வேண்டுமானாலும் நடக்கலாம். இப்போதைக்கு எங்கள் வேலை எங்கள் கட்சியை பலப்படுத்துவதற்கு உறுப்பினர்களை சேர்ப்பது தான். கூட்டணி குறித்து எங்கள் அகில பாரத தலைவர்கள் முடிவு செய்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவரிடம் கேட் கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கே: சீன தயாரிப்புகளுக்கு தடை குறித்து...

    ப: நிர்மலா சீதாராமனுக்கும், பியூஸ் கோயலுக்கும் தமிழகத்தை சேர்ந்தவர் என்கிற முறையில் நன்றி சொல்கிறேன். மதுரை, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் தீப்பெட்டி தொழில் வாழ்வாதாரமாக உள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் இந்தியில் உள்ளதை தமிழ் படுத்தினால் மக்களுக்கு புரியும். நான் புதுச்சேரியில் திட்டங்களை தமிழ்படுத்தினோம். ஆனால் இங்கு உள்ள அரசு அது தெரியாமல் இருப்பது தான் நல்லது என நினைக்கிறார்கள். ஆனால் நாங்கள் மத்திய அரசு திட்டங்களை மக்களுக்கு புரியும் வகையில் தமிழ் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

    கே: த.வெ.க. தலைவர் பாதை மாறுகிறாரா?

    ப: அரசியல் கட்சித் தலைவர் தவறை உணர்ந்து அதை திருத்திக் கொள்வது ஆரோக்கியமான சூழ்நிலைதான். ஆனால் தற்போது உள்ள சூழலில் இந்து மதம் சார்ந்த கருத்துக்களை யார் எதிர்த்தாலும் அவர்களை மக்கள் எதிர்ப்பார்கள். இந்து மதம் சார்ந்த மக்களுக்கு ஆதரவு தரவில்லை என்றால் மக்கள் அவர்களுக்கு ஆதரவு தர மறுப்பார்கள் என்கிறது தான் இன்றைய சூழ்நிலை. அதைத் தம்பி விஜய் உணர்ந்துவிட்டார் என்று நினைக்கிறேன். அவரிடம் இருந்து தீபாவளி வாழ்த்தையும் எதிர்பார்க்கிறோம்.

    அவர் மட்டுமல்ல முதல்வரிடமிருந்தும் தீபாவளி வாழ்த்து எதிர்பார்க்கிறோம். தி.மு.க. தலைவராக இல்லை என்றாலும், தமிழக முதல்வராக தீபாவளி வாழ்த்து தெரிவிக்க வேண்டும். வாழ்த்து சொல்லவில்லை என்றால் தீபாவளி கொண்டாடுபவர்கள் அவரை எதிர்ப்பார்கள் என்பது எனது கருத்து என்றார்.

    Next Story
    ×